ஆசை வார்த்தை கூறி உடலுறவு கொண்ட பின் ஏமாற்றினால் தப்ப முடியாது.. சட்டத்தை கடுமையாக்கும் மத்திய அரசு
டெல்லி: திருமணம் செய்து கொள்வதாகவோ, வேலை, பதவி உயர்வு பெற்று தருவதாகவோ ஆசைவார்த்தை காட்டி பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது குற்றமாக கருதப்படும். இதுபோன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும் வகையில் அமித்ஷா தாக்கல் செய்த மசோதாவில் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் குற்ற செயல்களில் ஈடுபடுவர்களுக்கு தண்டனை விதிக்கும் வகையில், இந்திய தண்டனை சட்டம் (IPC) மற்றும் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (CrPc), இந்திய சாட்சிய சட்டம் (Indian Evidence Act) உள்ளிட்டவை நடைமுறையில் உள்ளது. ஆங்கிலேயர்கள் காலத்தில் இருந்தே இந்த சட்டங்கள்அமலில் உள்ளன. அவ்வப்போது இந்த சட்டங்களில் சிறு திருத்தங்கள் மட்டும் செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், இந்த 3 சட்டங்களுக்கு மாற்றாக புதிய விதிமுறைகளுடன் வேறு பெயரில் சட்டங்கள் நடைமுறைக்கு கொண்டு வர மத்திய அரசு முடிவு செய்தது. அதன்படி, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் கடைசி நாளன நேற்று, இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்ட திருத்த மசோதாக்களை தாக்கல் செய்தார்.
அதன்படி பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா மசோதா, பாரதிய நாய சன்ஹிதா மசோதா, பாரதிய சக்ஷவா மசோதா உள்ளிட்ட 3 சட்ட திருத்த மசோதாக்களை அமித்ஷா தாக்கல் செய்தார். இந்திய குற்றவியல் நீதி முறையில் மிகப் பெரிய சீர்திருத்தத்தை ஏற்படுத்தும் நோக்கில் இந்த மசோதாக்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். மேலும் முந்தைய 3 சட்டங்களில் இந்திய என்ற பெயர் இருந்த நிலையில் தற்போதைய பெயரில் பாரதிய என்ற பெயர் இருக்கிறது.
நேற்று மக்களவையில் அமித்ஷா இந்த மசோதக்களை தாக்கல் செய்தார். இந்த மசோதாவின் படி,
கும்பலாக சேர்ந்து கொலை செய்தல், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்குதல் போன்ற குற்றங்களுக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனை விதிக்கப்படும். கூட்டு வன்கொடுமைக்கு 20 ஆண்டுகள் முதல் ஆயுள் தண்டனை வரை விதிக்கப்படும்.
அதேபோல், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், அவர்கள் எதிர்கொள்ளூம் சமூக பிரச்சினைகள் ஆகியவற்றிற்கு பாரதிய நியாய சன்ஹிதா மசோதாவில் தீர்வு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது, திருமணம் செய்து கொள்வதாகவோ, வேலை, பதவி உயர்வு பெற்று தருவதாகவோ ஆசைவார்த்தை காட்டி பெண்களுடன் உறவு வைத்துக்கொள்வது குற்றமாக கருதப்படும்.

இதுபோன்ற குற்றங்களுக்கு 10 ஆண்டுகள் வரை தண்டனை விதிக்கப்படும். சிறிய குற்றங்களுக்கு முதல் முறையாக சமூக சேவை செய்வது, தண்டனைகளில் ஒன்றாக சேர்க்கப்பட்டுள்ளது.
பொய் வழக்கு என்ற குற்றச்சாட்டை தவிர்ப்பதற்காக, தேடுதல் மற்றும் பறிமுதல் ஆகிய நடவடிக்கைகளின்போது வீடியோ எடுப்பது கட்டாயம் என கொண்டு வரப்பட்டுள்ளது.
வீடியோ எடுப்பது விசாரணையின் முக்கிய அங்கமாக இருக்கும். ஆபாச படங்களை வெளியிடுவது என்பது ஆண், பெண் இரு பாலருக்கும் பொதுவான குற்றமாக கருதப்பட்டு அதற்கு 3 முதல் 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படும் என்பன உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த மூன்று மசோதாக்களும் உள்துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications