காங்கிரஸ் மூத்த முன்னோடி மோதிலால் வோரா காலமானார்... பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியானவர்..!
டெல்லி: காங்கிரஸ் பேரியக்கத்தின் மூத்த முன்னோடிகளில் ஒருவராக திகழ்ந்த மோதிலால் வோரா உடல்நலக் குறைவு காரணமாக டெல்லியில் காலமானார். அவருக்கு வயது 93.
சிறுநீரகப் பாதை தொற்று மற்றும் நுரையீரல் பிரச்சனை காரணமாக டெல்லி போர்டிஸ் எஸ்கார்ட் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி மரணத்தை தழுவினார்.
அவரது உடலுக்கு சட்டீஸ்கரில் உள்ள அவரது பூர்வீக கிராமத்தில் இறுதிச்சடங்கு நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
33 விவசாயிகள் மரணம்.. வாய் திறக்காத பிரதமர் மோடி.. காரணம் கேட்கும் காங்கிரஸ்!
காங்கிரஸ் பொருளாளர்
காங்கிரஸ் கட்சியின் பொருளாளராக இருந்த மோதிலால் வோரா இந்திரா தொடங்கி ராகுல் வரை நான்கு தலைவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக திகழ்ந்தவர். பத்திரிகையாளராக இருந்து அரசியல்வாதியாக மாறியவர். இதுமட்டுமல்லாமல் மத்தியப் பிரதேச மாநில முதலமைச்சராகவும் 80-களில் இருந்தவர். மேலும், மத்திய அமைச்சர், உத்திரப்பிரதேச மாநில ஆளுநர், ராஜ்ய சபா உறுப்பினர் என பல பொறுப்புகளை இவர் வகித்திருக்கிறார்.
அதிர்ந்து பேசாதவர்
இத்தகைய பெருமைகளை கொண்ட வோரா தன்னை சந்திப்பவர்களிடத்தில் அன்பொழுக பேசக் கூடியவர். யாரிடமும் அதிர்ந்து பேசாத மோதிலால் வோரா காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றியுள்ளார். பொருளாளர் என்ற முறையில் பல நூறு கோடி ரூபாய் நிதியை எந்த சிக்கலும் இல்லாமக் கட்சிக்காக கையாண்டவர். இதனிடையே சர்ச்சைக்குரிய நேஷனல் ஹெரால்டு பத்திரிகை வழக்கில் மோதிலால் வோரா பெயரும் இடம்பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.
6 பிள்ளைகள்
மோதிலால் வோராவுக்கு 4 மகள்கள் 2 மகன்கள் என மொத்தம் 6 பிள்ளைகள் இருக்கின்றனர். டெல்லியில் இருந்து வோராவின் உடல் அவரது சொந்தமாநிலமான சட்டீஸ்கருக்கு எடுத்துச்செல்லப்பட்டு அங்கு இறுதிச்சடங்குகள் நடத்தப்படவுள்ளது. அண்மையில் அகமது படேல் காலமான நிலையில் வோராவும் மரணமடைந்திருப்பது காங்கிரஸ் கட்சிக்கு பெரும் இழப்பாகவே கருதப்படுகிறது.
கட்சிக்கு பேரிழப்பு
இதனிடையே மோதிலால் வோரா ஒரு அற்புதமான மனிதர் என்றும் அவரது மரணம் காங்கிரஸ் கட்சிக்கு பேரிழப்பு எனவும் ராகுல்காந்தி இரங்கல் தெரிவித்துள்ளார். இதேபோல் காங்கிரஸ் முன்னணி தலைவர்கள் பலரும் வோராவின் இழப்பு ஈடு செய்ய முடியாது என இரங்கல் பதிவு வெளியிட்டுள்ளனர்.