கொரோனாவுக்கு எதிரான போரை மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சித்து வருகிறோம்: ஐநாவில் மோடி
டெல்லி: இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகிறோம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஐக்கிய நாடுகள் சபையின் பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று வீடியோ யோ கான்ஃபரன்ஸ் மூலம் உரையாற்றினார். ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தமரற்ற உறுப்பினராக இந்தியா தேர்வான பின்னர் பிரதமர் மோடி ஆற்றிய முதல் உரை என்பதால் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது.
ஐ.நா. பொருளாதார சமூக கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
இந்தியாவில் கொரோனாவுக்கு எதிரான போரை ஒரு மக்கள் இயக்கமாகவே மாற்ற முயற்சித்து வருகிறோம். இந்தியாவின் சுகாதாரத்துறை பிற நாடுகளைவிட முன்னேறியதாக உள்ளது. இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.
உலக நாடுகளின் அனைத்து துயரம் மிகுந்த தருணங்களில் உதவிக் கரம் நீட்டியுள்ளது. தற்போதும் 150க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு மருந்துகள் உள்ளிட்ட உதவிகளை செய்து வருகிறது.
இந்தியாவில் 2022-க்குள் அனைவருக்கும் வீடு என்கிற திட்டத்தை நிறைவேற்ற உள்ளோம். இந்தியா தமது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடும் போது இது நிறைவேற்றப்படும்.
2-ம் உலகப் போருக்குப் பின் ஐநா சபையை உருவாக்கிய 50 நாடுகளில் இந்தியாவும் ஒன்று. ஐநா சபையின் வளர்ச்சியில் இந்தியா ஆக்கப்பூர்வமான பங்களிப்பை வழங்கி இருக்கிறது. ஐநா பொருளாதார சமூக கவுன்சிலின் முதல்வர் தலைவராக இருந்தவர் இந்தியர்தான்.
தற்போது 193 நாடுகளைக் கொண்ட ஐநாவிடம் உலக நாடுகளின் எதிர்பார்ப்புகள் அதிகரித்திருக்கிறது. ஐநாவின் ஆக்கப்பூர்வமாக வளர்ச்சிக்கு இந்தியா தொடர்ந்து பாடுபடும்.
இந்தியாவில் 5 ஆண்டுகளில் 10 கோடி கழிப்பறைகளை கட்டி முடித்துள்ளோம். இந்தியாவில் கிராமப்புற தூய்மை என்பது 38%-ல் இருந்து 100% ஆக உயர்த்தி உள்ளோம். ந்தியாவின் வளர்ச்சி, தொழில்நுட்பங்களை பிற நாடுகள் உணர்ந்து கொள்ள வேண்டும். இவ்வாறு பிரதமர் மோடி உரையாற்றினார்.