"எனது நண்பர் நரேந்திர மோடி.. நான் 100% நம்புகிறேன்.!"அடித்துச் சொல்லும் பிரான்ஸ் அதிபர்! என்ன காரணம்
டெல்லி: ஜி20 அமைப்பிற்கு இந்தியா தலைமையேற்றுள்ள நிலையில், இது தொடர்பாக பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்துள்ளார்.
சர்வதேச அளவில் இருக்கும் டாப் 20 பொருளாதாரங்களைக் கொண்ட நாடுகள் இணைந்து ஜி20 கூட்டமைப்பை உருவாக்கியுள்ளன. உலகில் இப்போது இருக்கும் மிக வலிமையான கூட்டமைப்புகளில் இதுவும் ஒன்றாகும்.
உலகின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 85%, உலக வர்த்தகத்தில் 75%க்கும் மேல், மற்றும் உலகின் மொத்த மக்கள் தொகையில் சுமார் மூன்றில் இரண்டு பங்கு இந்த ஜி20 கூட்டமைப்பு நாடுகளில் தான் உள்ளது.
டெல்லியில் ஜி20 உச்சி மாநாட்டுக்கான ஆலோசனை கூட்டம்.. முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பு
ஜி20 மாநாடு
இவ்வளவு வலிமையான ஜி20 மாநாடு ஒவ்வொரு ஆண்டும் உச்சி மாநாட்டை நடத்தும். இதில் சர்வதேச அரசியல், பொருளாதாரம் என பல்வேறு விஷயங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்படும். அதேபோல இதன் தலைமை பொறுப்பும் சுழற்சி முறையில் ஒவ்வொரு நாட்டிற்கும் வரும். கடந்த ஆண்டு இதன் தலைமை பொறுப்பு இந்தோனேசியாவிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன்படி கடந்த மாதம் இந்தோனேசியாவில் ஜி20 மாநாடு நடந்த நிலையில், அங்கு உலக பொருளாதாரம் தொடங்கி பல்வேறு விவகாரங்கள் குறித்தும் மிக விரிவாக ஆலோசிக்கப்பட்டது.
இந்தியா
இந்தோனேசியாவுக்கு அடுத்து இந்தியா இப்போது இந்த அமைப்பின் தலைமை பொறுப்பிற்கு வந்துள்ளது. பொதுவாக ஜி20 மாநாட்டிற்குப் பின்னரே தலைமை பொறுப்பு வந்துவிடும் என்றாலும் கூட, கடந்த டிச.1ஆம் தேதி தான் இந்தியா அதிகாரப்பூர்வமாக ஜி20 அமைப்பின் தலைமை பொறுப்பை ஏற்றது. இந்தோனேசியா போல இந்தியாவிலும் அடுத்தாண்டு ஜி20 மாநாடு நடைபெறுகிறது. பெரும்பாலும் தலைநகர் டெல்லியில் தான் இந்த ஜி20 உச்சி மாநாடு நடைபெறும் எனச் சொல்லப்படுகிறது. ஜி20 மாநாடு அடுத்தாண்டு தான் நடக்கும் என்றாலும் கூட நாடு முழுக்க இது தொடர்பாக விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பிரான்ஸ் அதிபர்
இதற்கிடையே ஜி20 கூட்டமைப்பிற்குத் தலைமை ஏற்றது தொடர்பாக உலகின் பல்வேறு நாடுகளைத் தலைவர்களும் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே தனது நண்பர் பிரதமர் நரேந்திர மோடி மீது நம்பிக்கை உள்ளதாகவும் அவர் நாட்டு மக்களை ஒன்றிணைப்பார் என நம்புவதாகவும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில், "ஒரே பூமி. ஒரே குடும்பம். ஒரு எதிர்காலம்... ஜி20 அமைப்பின் தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றுக்கொண்டது! அமைதி மற்றும் நிலையான உலகைக் கட்டியெழுப்புவதற்காக எனது நண்பர் நரேந்திர மோடி எங்களை ஒன்றிணைப்பார் என்று நான் நம்புகிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.
புகழ்ந்து பேச்சு
இந்தியாவுக்கும் பிரான்ஸ் நாட்டிற்கும் இடையே நல்ல உறவு தொடர்ந்து நிலவி வருகிறது. ஏற்கனவே இதற்கு முன்னரும் கூட பல முறை பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மக்ரோன் இந்தியப் பிரதமரைப் புகழ்ந்து பேசியுள்ளார். சர்வதேச பொது நிகழ்வுகளில் சந்திக்கும் போதும் கூட, இருவரும் பல நேரங்களில் சந்தித்துப் பேசியுள்ளனர். இந்தச் சூழலில் தான் ஜி20 தலைமை ஏற்றதற்கு அவர் பிரதமர் மோடியையும் இந்தியாவையும் வாழ்த்தியுள்ளார்.
பைடன்
ஜி20 தலைமை பொறுப்பை இந்தியா ஏற்றதற்கு உலகின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தலைவர்களும் வாழ்த்தி வருகின்றனர். அமெரிக்க அதிபர் பைடன் எப்போதும் இந்தியாவுக்கும் பிரதமர் மோடிக்கும் உறுதுணையாக இருப்பேன் எனக் கூறி இருந்தார். அவர் தனது ட்விட்டரில், "அமெரிக்காவின் வலுவான கூட்டணி நாடாக இந்தியா உள்ளது.. மேலும், இந்தியாவின் ஜி20 தலைவர் பதவியில் இருக்கும் போது எனது நண்பரான பிரதமர் மோடிக்கு ஆதரவளிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.அனைவரையும் உள்ளடக்கிச் செல்லும் வளர்ச்சிக்கு நாங்கல் நிச்சயம் உதவுவோம்" என்று பதிவிட்டிருந்தார்.
இந்தியா
முன்னதாக ஜி20 தலைமை ஏற்றது தொடர்பாகப் பிரதமர் மோடி பேசுகையில், "இந்தியா தலைமையில் ஜி20 அனைத்தையும் உள்ளடக்கிய லட்சியத்துடன் செயல்படும். பெண்களின் வளர்ச்சி, அமைதி, நல்லிணக்கத்திற்கு முதலில் முக்கியத்துவம் தரப்படும்.. இயற்கை வளங்கள் மனிதர்களுக்கு மட்டுமே சொந்தம் என்ற சிந்தனையை மாற்ற வேண்டும். அதற்குப் பதிலாக இயற்கை வளங்களைக் காப்பாற்றும் பொறுப்பு நமக்குத் தான் என்ற சூழலை உருவாக்க வேண்டும். ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்' என்பதே இந்தியா தலைமையிலான ஜி20 மாநாட்டிற்கு கருப்பொருள்" என்று பிரதமர் மோடி கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.