"ரொம்ப முக்கியம்".. எடப்பாடி அவசரமாக வைத்த கோரிக்கை! குறுக்கே வந்த ஓபிஎஸ்.. நீதிபதிகள் போட்ட உத்தரவு
டெல்லி: அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி வைத்த முக்கியமான கோரிக்கை ஒன்று நிராகரிக்கப்பட்டது.
அதிமுக பொதுக்குழுவிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் மனு தாக்கல் செய்துள்ளார். ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு நடந்தது.
இந்த பொதுக்குழு சட்ட விரோதமாக கூடியதாக ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளர் வைரமுத்து உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இதில் தனி நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது தவறு என்று தீர்ப்பு வழங்கினார்.
இதை எதிர்த்து எடப்பாடி தரப்பு செய்த மேல்முறையீட்டில் உயர் நீதிமன்ற இரட்டை நீதிபதி அமர்வு பொதுக்குழு கூடியது சரிதான் என்று தீர்ப்பு வழங்கினார்கள்.

அமர்வு
இந்த பொதுக்குழு செல்லாது என்று அறிவிக்க கோரி ஓபிஎஸ் ஆதரவாளர் வைரமுத்து என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுதாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கில் ஓ பன்னீர்செல்வமும் ஒரு மனுதாரராக சேர்ந்துள்ளார். இந்த பொதுக்குழு செல்லும் என்று உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பிற்கு எதிராக ஓ பன்னீர்செல்வம் உச்ச நீதிமன்றம் சென்றுள்ளார். . கடைசியாக கடந்த செப்டம்பர் மாதம் 30ம் தேதி இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது அதிமுகவில் பொதுச்செயலாளர் தேர்தல் நடத்த தடை விதிக்கப்பட்டது.

கட்சி மாற்றம்
அதேபோல் கட்சியில் மாற்றங்களை செய்யவும் தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில்தான், இன்று அதிமுக பொதுக்குழு வழக்கு வேறு அமர்வு மாற்றப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றத்தில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ணா முராரி அமர்வில் விசாரணை செய்யப்பட்டு வந்தது. தற்போது வழக்கு நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, சுதான்ஷு துலியா அமர்விற்கு மாற்றப்பட்டு உள்ளது. இந்த நிலையில் புதிய அமர்விற்கு மாற்றப்பட்ட உடன் வழக்கு விசாரணை உடனடியாக தொடங்கியது.

அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்று உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி வைத்த முக்கியமான கோரிக்கை ஒன்று நிராகரிக்கப்பட்டது. அதன்படி இன்று வழக்கில் எடப்பாடி பழனிசாமி தரப்பு வழக்கறிஞர், இந்த வழக்கு நீண்ட காலமாக நிலுவையில் உள்ளது. இது பொதுக்குழு மூலம் எடுக்கப்பட்ட முடிவு. பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுத்த முடிவு. அதனால் வழக்கை உடனடியாக விசாரிக்க வேண்டும். வழக்கில் உடனடியாக தீர்வு கிடைக்க வேண்டும். இதனால் கட்சி செயல்பாடுகள் முடங்கும் நிலை ஏற்பட்டு உள்ளது. எனவே இன்றே வழக்கு விசாரணை தொடங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

புதிய அமர்வு
பொதுவாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு புதிய அமர்விற்கு மாற்றப்பட்டால் அதே நாளில் விசாரணை நடக்காது. புதிய வழக்கு என்றால் பிரச்சனை இல்லை. பழைய வழக்கு என்றால் ஏற்கனவே வைக்கப்பட்ட வாதங்களை நீதிபதிகள் படிக்க வேண்டும். வழக்கின் தன்மையை உணர்ந்து கொள்ள வேண்டும். அதற்கு முன் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களை படிக்க வேண்டும். இதனால் அதே நாளில் விசாரணை நடத்தப்படாது. இதையடுத்தே நீதிபதிகளிடம் இன்றே விசாரணை நடத்த வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி கோரிக்கை வைத்தார்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி மேற்கொண்டு கட்சி ரீதியாக நடவடிக்கை எடுப்பதில் இடைக்கால தடை விதிக்கப்பட்டு உள்ளதால், அவர் இந்த வழக்கை விரைந்து விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். ஆனால் இதற்கு ஓ பன்னீர்செல்வம் எதிர்ப்பு தெரிவித்தார். இன்று ஓ பன்னீர்செல்வமும் பதில் மனு தாக்கல் செய்து இருக்க வேண்டும், வழக்கில் தன்னுடைய நிலைப்பாடு பற்றி அவரும் பதில் மனு தாக்கல் செய்து இருக்க வேண்டும். ஆனால் இன்று ஓ பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்யவில்லை. மாறாக பதில் மனு தாக்கல் செய்வதற்கு கூடுதல் நேரம் கேட்டார்.

மனு தாக்கல்
ஒரு வாரம் கூடுதல் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். இரண்டு பேருடைய கோரிக்கையும் இன்று நீதிபதிகள் முன் வைக்கப்பட்டது. இதில் எடப்பாடி பழனிசாமியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. ஓ பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டது. ஒரு வாரத்திற்குள் ஓ பன்னீர்செல்வம் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டது. அதேபோல் வழக்கு 30ம் தேதி இந்த மாதம் விசாரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த வழக்கு தற்போது எடப்பாடி பழனிசாமிக்கு பின்னடைவை ஏற்படுத்தி உள்ளது. கட்சியில் எந்த முடிவையும் எடுக்க முடியாத அளவிற்கு அவரின் கைகள் கட்டப்பட்டு உள்ளன.












Click it and Unblock the Notifications