குற்றம்சாட்டப்பட்டவர்களை விசாரணையே இல்லாமல் நீண்ட நாட்கள் சிறையில் வைப்பது சரியில்லை: உச்சநீதிமன்றம்
டெல்லி: பல வருடங்களாக குற்றம் சாட்டப்பட்டவரை சிறையில் அடைத்தால், விசாரணை நடத்துவதில் என்ன அர்த்தம் இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் போதைப் பொருள் தடுப்புப் பிரிவுக்கு கேள்வி எழுப்பியுள்ளது.
போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட 66 வயது நபர் ஒருவர் நான்கு வருடங்களாக சிறையில் இருக்கிறார். அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு விசாரணையின் போது நீதிமன்றம் இவ்வாறு கேள்வி எழுப்பியது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி என்.வி.ரமணா, நீதிபதிகள் சூர்ய கந்த், ஹிமா கோலி ஆகியோர் அடங்கிய அமர்வு இந்த ஜாமீன் மனுவை விசாரித்தது. 2017ம் ஆண்டு அக்டோபர் 16ம் தேதி முதல் குற்றம்சாட்டப்பட்டவர் சிறையில் இருப்பதால் அவரை ஜாமீனில் விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதிடுகையில் தனது கட்சிக்காரர் வயதில் மூத்தவராக இருந்த போதிலும் கூட ஜாமீன் வழங்குவதில் எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டினார்.
போதை பொருள் தடுப்பு பிரிவு சார்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் எஸ்.வி.ராஜு, குற்றம் சாட்டப்பட்ட நபர் 35 கிலோ மதிப்புள்ள கஞ்சா போதைப் பொருளை தன்வசம் வைத்திருந்தார் எனவே தான் கைது செய்யப்பட்டார் என்று வாதிட்டார்.
அப்போது தலைமை நீதிபதி ரமணா, குறுக்கிட்டு, இப்படியே, விசாரணை நடத்தாமல் எத்தனை வருடங்கள் சிறையில் வைக்கலாம் என்பது பற்றி நீங்கள் கருத்துக் கூற முடியுமா என்று வழக்கறிஞரிடம் எதிர்கேள்வி கேட்டார்.
அதற்கு வழக்கறிஞர் 5 வருடங்கள் வரையில் அதிகபட்சமாக விசாரணை இல்லாமல் சிறையில் வைத்திருக்கலாம் என்று பதிலளித்தார்.
இதைக் கேட்ட தலைமை நீதிபதி, எதற்காக ஐந்து வருடத்தோடு நிறுத்திவிட்டீர்கள். பத்து வருடங்கள் வேண்டுமானாலும் சிறையிலடைத்து கொள்ளுங்கள். விசாரணையே தேவை கிடையாது அல்லவா என்றார். மேலும், அவருக்கு தற்போது 66 வயது ஆகிறது. நீங்கள் உங்கள் விசாரணையை முடிப்பதற்குள் அவர் இருப்பாரோ இல்லையோ தெரியாது, உறுதியளிக்க முடியாதல்லவா, என்று கண்டிப்புடன் தெரிவித்தார்.
கடந்த வருடம் ஜனவரி மாதம் 28ம் தேதி கொல்கத்தா உயர்நீதிமன்றம் குற்றம் சாட்டப்பட்ட நபரின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்தது. அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் வரை வந்துள்ளார் அந்த நபர். ஒருவழியாக உச்ச நீதிமன்றம் இப்போது அவருக்கு ஜாமீன் வழங்கி உள்ளது குறிப்பிடதக்கது.












Click it and Unblock the Notifications