வாலாட்டும் சீனா.. "எதுக்கும் ரெடியாக இருங்க.!" ராணுவ தளபதிகளுக்கு உத்தரவு போட்ட ராஜ்நாத் சிங்
டெல்லி: எல்லையில் சீனா தொடர்ந்து மோதல் போக்கில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவத் தளபதிகளிடம் பேசியது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.
எல்லையில் கடந்த சில ஆண்டுகளாகவே இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே மோதல் நீட்டித்து வருகிறது. இந்தியப் பகுதிகளில் அத்துமீறி நுழையும் சீனா தொடர்ந்து பிரச்சினை ஏற்படுத்தி வருகிறது.
கல்வான் மோதலுக்குப் பின்னர் இரு நாடுகளுக்கும் எல்லையில் வீரர்களைக் குவித்தனர். பலகட்ட பேச்சுவார்த்தைக்குப் பின்னரே படைகள் மெல்லத் திரும்பப் பெறப்பட்டு வருகிறது.
விண்வெளியில் உடலுறுவு வைத்தால் குழந்தை பிறக்குமா? ஆய்வுக்காக குரங்குகளை அனுப்பும் சீனா!விபரீத சோதனை
மாநாடு
தலைநகர் டெல்லியில் முப்படை தளபதிகள் கலந்து கொள்ளும் மாநாடு கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இந்த மாநாட்டில் எல்லையில் சீனா மற்றும் பாகிஸ்தான் நாடுகளால் ஏற்படும் சவால்கள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. மேலும், ராணுவத்தின் பலத்தை அதிகரிப்பது குறித்தும் இதில் விரிவாக ஆய்வு செய்யப்படுகிறது.. இதற்கிடையே மாநாட்டின் 3ஆம் நாளான இன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ராணுவ உயர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
ராஜ்நாத் சிங்
அப்போது வரும் காலத்தில் எதிர்கொள்ள வாய்ப்புள்ள பிரச்சினைகளைக் குறித்தும் அதற்கு நாம் எப்படி தயாராக இருக்க வேண்டும் என்பது குறித்தும் அமைச்சருக்கு ராணுவ உயர் அதிகாரிகள் விளக்கினர். இந்த ராணுவ தளபதிகளிடம் பேசிய ராஜ்நாத் சிங், நாட்டின் மிகவும் நம்பிக்கையான அமைப்புகளில் ஒன்றாக நமது ராணுவம் உள்ளது என்றும் இந்திய ராணுவத்தின் மீது கோடிக் கணக்கானோர் நம்பிக்கை வைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.
தயார் நிலை
நாட்டின் பாதுகாப்பு மற்றும் தேசிய இறையாண்மையை உறுதி செய்ய ராணுவம் தயாராக இருக்க வேண்டும் என்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். இந்திய ராணுவத்தின் மீதும், அதன் தலைமையின் மீதும் தனக்கு முழு நம்பிக்கை உள்ளதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். மேலும், ராணுவம் எந்தவொரு நடவடிக்கையை எதிர்கொள்ளவும் உச்சபட்ச தயார் நிலையில் இருக்க வேண்டும் என்றும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்.
பாராட்டு
இந்த மீட்டிங் குறித்து ராணுவ அதிகாரிகள் கூறுகையில், "நாட்டில் சிவில் பிரச்சினைகளுக்கும் உதவிக்குச் செல்கிறோம். இது தவிர எல்லைகளைப் பாதுகாப்பதிலும் பயங்கரவாதத்தை எதிர்த்துப் போராடுவதிலும் ராணுவம் ஆற்றிய முக்கியப் பங்கையும் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார். மேலும், ராணுவம் எப்போதும் அனைத்துக்கும் தயாராக இருப்பது குறித்தும் ராஜ்நாத் சிங் வெகுவாக பாராட்டிப் பேசினார்" என்றனர்
தொழில்நுட்பம்
முக்கிய தொழில்நுட்பங்களை இந்தியாவிலேயே உருவாக்கும் ராணுவத்தின் முயற்சிகளை அவர் பாராட்டினார். பிரதமரின் 'ஆத்ம நிர்பர்தா' இலக்கை நோக்கி நாம் முன்னேறுவதாகவும் அவர் பாராட்டினார்" என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த ராணுவத் தளபதிகள் மாநாடு என்பது ஒவ்வொரு ஆண்டும் இரு முறை- அதாவது ஏப்ரல் மற்றும் நவம்பர் மாதங்களில் நடத்தப்படும் மாநாடாகும்.
வாலாட்டும் சீனா
கிழக்கு லடாக்கில் சில பகுதிகளில் சீனாவுடனான ராணுவ மோதல் தொடர்ந்து வருகிறது. இதன் காரணமாக சுமார் 3,400 கிமீ நீளமுள்ள எல்லைப் பகுதிகளில் எதாவது நடந்தால் அதற்குப் பதிலடி கொடுக்க ராணுவம் எந்தளவுக்குத் தயாராக உள்ளது என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும், காஷ்மீரில் தற்போதுள்ள நிலை குறித்தும் அங்கு எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் இதில் ஆலோசிக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகி உள்ளது.