வீட்டில் வைத்திருந்த தேசியக்கொடியை அகற்ற போகிறீர்களா? அதற்கு ரூல்ஸ் இருக்குது பாஸ்!
டெல்லி: 75-வது சுதந்திர தினத்தையொட்டி வீடுகளில் தேசியக்கொடிகளை பறக்க விட்டவர்கள் இனி அதை இறக்க வேண்டும். ஆனால், கொடியை வெறுமனே இறக்கிவிடக்கூடாது. அதற்கென சில விதிகளையும் மத்திய அரசு வகுத்துள்ளது.
இந்தியாவின் 76-வது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
இந்தியா சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆகிவிட்டது என்பதால் சுதந்திர தின அமுதபெருவிழா என்ற பிரசாரத்தை மத்திய அரசு முன்னெடுத்தது.
கல்வி தொலைக்காட்சியின் தற்காலிக சிஇஓ-ஆக மணிகண்ட பூபதி நியமனம்! தமிழக அரசு அறிவிப்பு
வீடுகளில் பட்டொளி வீசி பறந்த தேசியக்கொடி
அதன்படி, மத்திய அரசு மக்கள் தங்கள் வீடுகளில் தேசியக்கொடியை பறக்க விட வேண்டும் என்று வலியுறுத்தியது. இதன் காரணமாக ஆகஸ்ட் 13 ஆம் தேதி தொடங்கி 15 ஆம் தேதி வரை அதாவது இன்று வரை மூவர்ணக் கொடியை மக்கள் தங்கள் வீடுகளில் ஏற்ற வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. இதை ஏற்று நாடு முழுவதும் மக்கள் தங்கள் வீடுகளில் மூவர்ண கொடியை பறக்க விட்டதை காண முடிந்தது. நகரங்களில் மட்டும் இன்றி கிராமப்புறங்களிலும் மக்கள் தேசியக்கொடியை பட்டொளி வீசி பறக்க விட்டனர்.
தேசியக்கொடியை வெறுமனே இறக்கிவிடக்கூடாது
நாடு முழுவதும் வெகு உற்சாகமாக கொண்டாடப்பட்ட சுதந்திர தினம் இன்று மாலையுடன் நிறைவடைந்துவிட்டது. இதனால் தங்கள் வீடுகளில் தேசியக்கொடிகளை பறக்க விட்டவர்கள் இனி அதை இறக்க வேண்டும். ஆனால், தேசியக்கொடியை வெறுமனே இறக்கிவிடக்கூடாது. அதற்கென சில விதிகளையும் மத்திய அரசு வகுத்துள்ளது. எனவே, தேசியக்கொடியை இறக்கும் முன்பாக இதை படித்து விட்டு அதன்படி செயல்படுங்கள்.
விதிகள் என்ன?
இந்திய தேசியக்கொடி விதி 2002-ன் படி, தேசியக்கொடி பறக்கவிடுவதற்கு மட்டும் இன்றி அதை இறக்கவும், அகற்றுவதற்கும் என தெளிவான விதிகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேசியக்கொடியை இறக்கிய நீங்கள், அதை பாதுகாப்பாக வைத்திருக்க திட்டமிட்டீர்கள் என்றால், அதற்கான தனி வழிமுறைகள் உள்ளன. இதன்படி, தேசியக்கொடியை முறையாக மடித்து வைக்க வேண்டும். தேசியக்கொடியை கிடமட்டமாக வைத்துவிட்டு காவிநிறம் மற்றும் பச்சை நிற பட்டைகளை வெள்ளை நிற பட்டைகளுக்கு கீழ் மடிக்க வேண்டும்.
சரியாக மடிப்பது எப்படி?
அதுவும் முழுவதும் ஆரஞ்சு மற்றும் பச்சை நிறம் மறையும் வகையில் மடிக்காமல் லேசாக ஒரு விரல் தடிமன் அளவுக்கு ஆரஞ்சு நிறம் மற்றும் பச்சை நிறம் தெரியும் வகையில் தான் மடிக்க வேண்டும். முழுமையாக வெள்ளை நிறம் மட்டுமே தெரியும் படி மறைத்துவிடக்கூடாது. பின்னர் இப்போது பார்த்தால், முழுவதுமாக அசோக சக்கரம் மற்றும் ஒருவிரல் தடிமன் அளவில் காவி நிறம் மற்றும் பச்சை நிறம் தெரியும்படி இருக்கிறதா.. இனி அசோக சக்கரத்தை மையமாக வைத்து குறுக்காக இருபுறமும் மடிக்க வேண்டும். இப்போது பார்த்தோமானால் அசோக சக்கரம் மட்டும் முழுவதுமாக தெரியும். அசோக சக்கரத்தின் மேல் ஒரு இன்ச் காவி நிறமும், அசோக சக்கரத்தின் கீழ் ஒரு இன்ச் பச்சை நிறமும் தெரியுமாறு சதுர வடிவில் மடிப்பது தான் சரியான முறை. இவ்வாறு மடிக்கப்பட்ட கொடியை உங்கள் உள்ளங்கைகளிலோ அல்லது கைகளிலோ எடுத்துச் சென்று பாதுகாப்பாக சேமித்து வைக்க வேண்டும்.
கண்ணியம் குறையாமல் அழிக்க வேண்டும்
தேசியக்கொடி சேதம் அடைந்தாலோ, அழுக்கடைந்தாலோ என்ன செய்ய வேண்டும் தெரியுமா? தேசியக்கொடி விதி இதற்கு என்ன சொல்கிறதென்றால், தனிப்பட்ட முறையில் முழுவதுமாக கொடி அழிக்கப்பட வேண்டும். தேசியக்கொடி கண்ணியம் எந்த வகையிலும் பாதிக்காத வகையில், எரிக்கலாம் அல்லது வேறு முறையிலும் அழிக்கலாம். முக்கியமான தேசிய நிகழ்ச்சிகள் மற்றும் கலாசார நிகழ்ச்சிகளில் பேப்பர் கொடிகளை கட்டுவதற்கும் அனுமதி அளிக்கப்படுகிறது. பேப்பர் கொடிகளை பொறுத்தவரை அதை பயன்படுத்தி விட்டு தரையில் போட்டுச்செல்லக்கூடாது என்று விதி கூறுகிறது. சேதம் அடைந்த கொடிகளை அழிக்க என்ன செய்ய வேண்டுமோ அதை முறையில் தான் பேப்பர் கொடிகளை தனிப்பட்ட முறையில் அதன் கண்ணியம் குறையாமல் அழிக்க வேண்டும்.
மீறி செயல்பட்டால் 3 ஆண்டு சிறை தண்டனை
தேசியக்கொடி விதிகளை தாண்டி, தேசியக்கொடியை அவமதிப்பதைத் தடுப்பதற்கான பிற விதிகளும் உள்ளன. 1971-ல் தேசிய மரியாதையை அவமதிப்பதைத் தடுக்கும் சட்டத்தின் படி, விதிகளை மீறி செயல்பட்டால் அபராதம் அல்லது 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்க முடியும் என்று சொல்கிறது. இதன்படி நாம் அவசியம் தெரிந்து இருக்க வேண்டிய சில விதிகளை காணலாம்.
விதிகள் என்னென்ன?
* எந்த வகையிலும் தேசியக்கொடியை திரைச்சீலையை போல் பயன்படுத்தக்கூடாது ( அரசு மரியாதை அல்லது ராணுவ வீரர்களுக்கான இறுதிச்சடங்கிற்கு மட்டும் விலக்கு)
* நாம் அணியும் ஆடையின் எந்த ஒரு இடத்திலும் பகுதியாகவும் தேசியக்கொடியை பயன்படுத்தக்கூடாது. சீருடையிலும் இடம் பெறக்கூடாது. இடுப்புக்கு கீழே அணியும் எந்த ஒரு பொருளிலும் தேசியக்கொடி இடம் பெறக்கூடாது.
* மெத்தைகள் , கைக்குட்டை, நாப்கின், உள்ளாடைகள் அல்லது எந்த ஆடை பொருட்களிலும் அச்சிட்டோ எம்ப்ராய்டு செய்தோ பயன்படுத்தக்கூடாது.
* தேசியக்கொடி மீது எந்த ஒரு எழுத்தும் இடம் பெறக்கூடாது.
தரையில் படும் படி வைக்கக்கூடாது
* எந்த பொருளையும் மடிக்கவோ, வாங்குவதற்கோ,கொண்டு செல்வதற்கோ தேசியக்கொடியை பயன்படுத்தக்கூடாது.
* சிலை அல்லது நினைவுச்சின்னத்தை மறைப்பதற்கு பயன்படுத்தக்கூடாது.
* தரையில் படும் படி வைக்க அனுமதிக்கக் கூடாது. தண்ணீரில் வேண்டும் என்றே படும் படியும் வைக்கக்கூடாது.
* எந்த ஒரு வாகனம் அல்லது அதற்கு நிகரான பொருட்களை மறைப்பதற்காக பின்புறம் பக்கவாட்டு, மேல் புறம் என எந்த பகுதியிலும் பயன்படுத்தக்கூடாது.
* கட்டிடங்களை மறைப்பதற்காக பயன்படுத்தக்கூடாது.
* வேண்டும் என்றே காவி நிறம் கீழே இருக்கும்படி பறக்கவிடக்கூடாது.
இரவும் பறக்க விடலாமா?
ஹர்கர் திரங்காவின் பிரசாரத்துக்கு பின்னர், தேசியக்கொடி விதிகளில் சில திருத்தங்களை மத்திய அரசு அறிவித்தது. ஜூலை 2022 ஆம் ஆண்டு கொண்டு வந்த திருத்தத்தின் படி, தேசியக்கொடிகளை பகல் மற்றும் இரவு வேளைகளிலும் பறக்கவிடலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதற்கு முன்பாக தேசியக்கொடியை சூரிய உதயத்திற்கு பிறகு ஏற்றி சூரியன் மறையும் முன்னே இறக்கிவிட வேண்டும் என்ற விதி இருந்தது. இதன் பின்னர் 2021-ம் ஆண்டில் மேலும் ஒரு திருத்தம் செய்யப்பட்டது. அந்த திருத்தத்தின் படி, பருத்தி, பட்டு, பாலிஸ்டர் மற்றும் கைத்தறியால் நெய்யப்பட்ட கொடிகளை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.