இந்திய மண்ணில் அமெரிக்க படைகள்.. சீன எல்லையில் போர் பயிற்சி! கடுப்பான சீனா! அமெரிக்கா கூல் பதில்
டெல்லி: அமெரிக்காவுடன் இந்தியா நடத்தும் பயிற்சிகளுக்கு சீனா அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்த நிலையில், இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எலிசபெத் ஜோன்ஸ் இது தொடர்பாக வேறு சில முக்கிய கருத்துகளையும் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலத்தில் இப்போது பாஜக ஆட்சியிலுள்ள நிலையில், அங்கு இப்போது சட்டசபைத் தேர்தல் நடைபெறுகிறது. முதற்கட்ட தேர்தல் நேற்று நடந்து முடிந்த நிலையில், சில நாட்களில் இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெற உள்ளது.
குஜராத்தில் தீவிர பிரசாரம் நடந்து வரும் நிலையில், அங்குச் சிலர் வெறுப்பு வாத கருத்துகளைக் கூறி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இது தொடர்பாக இந்தியாவுக்கான அமெரிக்கத் தூதர் எலிசபெத் ஜோன்ஸ் சில முக்கிய கருத்துகளைத் தெரிவித்தார்.

அமெரிக்க இடைக்கால தூதர்
இந்தியாவில் தேர்தல் நடைபெறும் சமயங்களில் வெறுப்புவாத பிரசாரம் உள்ளதாகவும் இது தொடர்பாகத் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாகவும் எலிசபெத் ஜோன்ஸ் தெரிவித்துள்ளார். இது இந்தியத் தூதர்களுடன் தொடர்ச்சியாக நடத்தப்பட வேண்டிய பேச்சுவார்த்தை என்றும் அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் கூறுகையில், "தொடர்ச்சியாக இரு நாடுகளுக்கும் இடையே உறவு இருக்கும் போது, இதுபோன்ற பலன்கள் கிடைக்கும். பலவிதமான சிக்கல்கள் குறித்து நம்மால் விவாதிக்க முடியும்..

கலவரம்
வகுப்புவாத வார்த்தைப் பிரயோகம் குறித்து நாங்கள் நீண்ட காலமாக விவாதித்து வருகிறோம், வரும் காலத்திலும் இது தொடர்பாகத் தொடர்ந்து பேசுவோம்" என்று அவர் தெரிவித்தார். குஜராத்தில் தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் பல வகுப்புவாத பேச்சுக்கள் கிளம்பின. 2002 குஜராத் கலவரம் அமைச்சர் கூறுகையில், "ஒரு காலத்தில் குஜராத்தில் நிலவிய குழப்பம் காரணமாக வளர்ச்சியே இல்லாமல் இருந்தது. 2002ல் அவர்கள் வகுப்புவாத வன்முறையில் ஈடுபட முயன்றனர்... அவர்களுக்கு நாங்கள் பாடம் கற்பித்தோம். அவர்களைச் சிறையில் அடைத்துள்ளோம்" என்று கூறியிருந்தார்.

சர்ச்சை கருத்துகள்
அமித் ஷா வெளிப்படையாக எந்தவொரு சமூகத்தையும் குறிப்பிடவில்லை என்றாலும் கூட அவர் இஸ்லாமியர்களையே குறிப்பிடுவதாகப் பலரும் சாடினர். அவர் மட்டுமின்றி பல பாஜக தலைவர்களும் இதுபோன்ற கருத்துகளைக் கூறிவருகின்றனர். அசாம் பாஜக முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா கூட, "இந்துக்கள் பெரும்பாலும் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள். இந்துக்கள் எப்போதும் அமைதியையே விரும்புவார்கள். இந்துக்களுக்கு லவ் ஜிகாத் மீதும் நம்பிக்கையில்லை" என்று கூறியிருந்தார்.

போர் பயிற்சி
தேர்தல் சமயத்தில் இதுபோன்ற பேச்சுகள் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கத் தூதரின் இந்த பேச்சு முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இது தவிர உத்தரகாண்டின் அவுலியில் இந்தியா-அமெரிக்க ராணுவப் பயிற்சிகள் குறித்து சீனா ஆட்சேபித்து இருந்த நிலையில், அது தொடர்பாகவும் சில கருத்துகளைக் கூறி இருந்தார். அவர் கூறுகையில், "இந்த விவகாரத்தில் இந்தியத் தூதர் சொன்னது தான் எங்கள் கருத்து. போர்ப் பயிற்சி விவகாரத்தில் சீனாவுக்குக் கருத்துச் சொல்ல எந்த வேலையும் இல்லை. யாருடன் பயிற்சி மேற்கொள்ள வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டியது இந்தியா தான்" என்றார்.

வணிக ஒப்பந்தம்
இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வணிகத்தை அதிகரிக்கும் வகையில் சிறப்பு டீல் குறித்துப் பேசிய அவர், "கடந்த ஏழு ஆண்டுகளில் வர்த்தகம் இருமடங்காக அதாவது 157 பில்லியன் டாலராக அதிகரித்துள்ளதால்.. இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தக ஒப்பந்தம் தேவை என்று நான் நினைக்கவில்லை. அது குறித்து எந்த விவாதமும் இல்லை" என்று அவர் தெரிவித்தார். கடந்த சில மாதங்களாகவே இந்தியாவைப் பல நேரங்களில் அமெரிக்கா பாராட்டிப் பேசி வரும் நிலையில், இது முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications