அயோத்தி ராமர் கோயில் 2024 ஜன.1இல் திறப்பு.. அமித் ஷா அறிவிப்பு! தேர்தல் ஆண்டில் பாஜகவுக்கு பூஸ்ட்
டெல்லி: உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதனிடையே இந்த கோயில் அடுத்தாண்டு ஜன.1ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று மத்திய அமைச்சர் அமித் ஷா அறிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்தது. கடைசியில் அயோத்தியில் ராமர் கோயிலை அறக்கட்டளை மூலம் கட்ட 2019 நவம்பரில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்தது.
மேலும், அதே அயோத்தி நகரில் வேறு பகுதியில் மசூதி அமைக்க 5 ஏக்கர் நிலம் ஒதுக்க உத்தரவிடப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பிற்குப் பிறகு அயோத்தி ராமர் கோயில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டன.
அயோத்தி ராமர் கோயில்
நாடு முழுக்க நிதி திரட்டப்பட்டு இந்த ராமர் கோயில் கட்டுமானங்கள் நடைபெற்று வருகிறது. ராமர் கோயில் கட்டுமான பணிகளை நேரடியாகப் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு கடந்த ஆகஸ்ட் 5, 2020இல் அடிக்கல் நாட்டினார். அதைத் தொடர்ந்து ராமர் கோயில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோயில் கட்டுமான பணிகள் முடிக்கப்பட்டு இந்தாண்டு இறுதியில் அல்லது அடுத்தாண்டு தொடக்கத்தில் கோயில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்று சொல்லப்பட்டு வந்தது. இதனிடையே கோயில் கட்டுமானம் எப்போது முடிவடையும் எப்போது மக்கள் கோயிலுக்கு வரலாம் என்பது குறித்த தகவல்களை அமைச்சர் அமித் ஷா பகிர்ந்துள்ளார்.
எப்போது திறக்கப்படும்
அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவில் வரும் 2024 ஜன.1ஆம் தேதி திறக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்தார். இது நாடாளுமன்றத் தேர்தல் நடக்கும் ஆண்டில் பாஜகவுக்கு நல்ல தொடக்கத்தை அளிக்கிறது. மக்களவை தேர்தலுக்கு முன்பு, ராமர் கோயில் திறக்கப்படுவது பாஜகவிற்கு ஒரு மைல்கல்லாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. 1990கள் முதலே அயோத்தி ராமர் கோயில் என்பது தேசிய அளவில் தேர்தல்களில் பேசுபொருளாக இருந்துள்ளது. இத்தனை ஆண்டுகள் கழித்து இப்போது கடைசியில் அயோத்தியில் ராமர் கோயில் அமைய உள்ளது.
காங்கிரஸ் மீது அட்டாக்
மத்திய அமைச்சர் அமித் ஷா திரிபுராவில் செய்தியாளர்களிடம் பேசுகையில், "சுதந்திரத்திற்குப் பின்பு இருந்தே நீதிமன்றங்களில் ராமர் கோயில் கட்டுவதற்குக் காங்கிரஸ் தடையாக இருந்தது... மோடி பிரதமரான பிறகே உச்ச நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியது. உச்ச நீதிமன்ற தீர்ப்பு வந்த பிறகு, பிரதமர் நரேந்திர மோடி அரசு கோயில் கட்டுமான பணிகளைக் கையில் எடுத்தது. இப்போது கட்டுமானம் விரைவில் நிறைவடைய உள்ளது.. வரும் 2024 ஜன.1ஆம் தேதி அயோத்தி ராமர் கோயில் மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
யோகி ஆதித்யநாத்
அயோத்தி கோயில் கட்டுமான பணிகளை உத்த பிரதேச அரசு தொடர்ந்து கண்காணித்து வருகிறது. முன்னதாக கடந்த நவம்பர் மாதம் கோயில் கட்டுமான பணிகளை ஆய்வு செய்த உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத், கோவில் கட்டும் பணிகள் 50% நிறைவடைந்துவிட்டதாகத் தெரிவித்தார். மேலும், இந்த ஆண்டு டிசம்பருக்குள் கோயில் தயாராகிவிடும் என்றும் கூறியிருந்தார். இந்தச் சூழலில் தான் மத்திய அமைச்சர் அமித் ஷா கோயில் எப்போது மக்கள் பயன்பாட்டிற்குத் திறக்கப்படும் என்பது குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.
அயோத்தி கோயில்
மிகப் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டு வரும் இந்த ராமர் கோயிலில் மொத்தம் 5 மண்டபங்கள் இருக்கும். வால்மீகி, ஜடாயு, சீதை, விநாயகர் மற்றும் லட்சுமணன் கோயில்களும் ராமர் கோயிலுக்கு அருகில் 70 ஏக்கர் பரப்பளவில் கட்டப்படும். இந்த ராமர் கோவிலின் கீழ் தளத்தில் 160 தூண்களும், முதல் தளத்தில் 132 தூண்களும், இரண்டாவது தளத்தில் 74 தூண்களும் அமைக்கப்படும். இதில் புனித யாத்திரைக்குத் தனியாக ஒரு சிறப்பு மையம், அருங்காட்சியகம், காப்பகங்கள், ஆய்வு மையம், ஆடிட்டோரியம், கால்நடை வளர்ப்பு மையம் ஆகியவையும் தனியாகக் கட்டப்படுகிறது.