'அமைச்சராகவே இருந்தாலும், ஆக்சிஜனை பதுக்கினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்'.. டெல்லி அரசு உறுதி
டெல்லி: தலைநகரில் ஆக்சிஜனை பதுக்கியதாக ஆம் ஆத்மி எம்எல்ஏ இம்ரான் உசேன் மீதான விசாரணையில் ஆஜரான டெல்லி அரசு வழக்கறிஞர், ஆக்சிஜனை பதுக்குவதாக இம்ரான் உசேனாக இருந்தாலும் சரி, கவுதம் கம்பீராக இருந்தாலும் சரி நிச்சயம் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
டெல்லியில் கொரோனா பரவலின் தாக்கம் மிக அதிகமாக உள்ளது. அங்குள்ள மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டுள்ளது.
மத்திய அரசிடமிருந்து ஜிஎஸ்டி நிலுவை தொகையை பெறுவது எனது முதல் குறிக்கோள்- பழனிவேல் தியாகராஜன் உறுதி
தலைநகரில் பெரும்பாலான மருத்துவமனைகளில் சில மணி நேரத்திற்குத் தேவையான ஆக்சிஜன் மட்டுமே இருப்பதாக மருத்துவமனை நிர்வாகங்கள் கூறி வருகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமாகப் பொதுமக்கள் உயிரிழக்கும் நிகழ்வுகளும் நடந்துள்ளன.
ஆக்சிஜனை பதுக்கிய இம்ரான் உசேன்
இந்நிலையில், மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறை கடுமையாக இருக்கும்போது ஆம் ஆத்மி எம்எல்ஏ இம்ரான் உசேன் ஆக்சிஜன் சிலிண்டர்களை பதுக்கி, முறைகேடாக விநியோகித்து வருவதாகவும் வழக்கறிஞர் ஒருவர் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இது குறித்து விளக்கம் அளிக்குமாறு இம்ரான் உசேன் மற்றும் ஆம் ஆத்மி அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும், வழக்கு விசாரணைக்காகத் திங்கள்கிழமை ஆஜராகுமாறும் இம்ரான் உசேனிடம் உத்தரவிட்டனர். இம்ரான் உசேன் டெல்லி அமைச்சரவையில் உணவு மற்றும் சிவில் சப்ளே அமைச்சராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நீதிபதிகள் கருத்து
மேலும், நீதிபதிகள் கூறுகையில், அவர் டெல்லியிலிருந்து ஆக்சிஜனை பெறவில்லை என்றால்; அவர் ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் இருந்து சொந்தமாக ஆக்சிஜனை இறக்குமதி செய்தால், அப்போது அவர் மீது நீங்கள் குற்றஞ்சாட்ட முடியாது. ஏனென்றால், அப்போது அவர் டெல்லிக்கு தேவையான ஆக்சிஜன் சப்ளேவை அதிகப்படுத்தியதாகவே கருத முடியும். அதேநேரம் அவர் மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்படும் ஆக்சிஜன் சிலிண்டர்களை விநியோகம் செய்தால் மட்டுமே அது மிகப் பெரிய தவறு என்றனர்.
யாருக்கு விநியோகம்
அவர் ஆக்சிஜன் சிலிண்டர்களை தேவையான நபர்களுக்குத் தான் விநியோகம் செய்கிறாரா என்பதை விசாரணை செய்ய வேண்டும் என்ற மனுதார் தரப்பில் ஆஜரான வழக்கறிஞரின் கோரிக்கையை நீதிமன்றம் நிராகரித்தது. அவர் டெல்லி மருத்துவமனைகளுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட ஆக்சிஜனை எடுக்கவில்லை என்றால் அவர் யாருக்கு விநியோகம் செய்கிறார் என்பது குறித்து விசாரணை செய்யப்போவதில்லை என்று தெரிவித்தனர்.
கடும் நடவடிக்கை
டெல்லி அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கூறுகையில், அவர் (அமைச்சர் இம்ரான் உசேன்) தவறு செய்திருந்தார் என்றே வைத்துக்கொள்ளுங்கள். அப்போதும் இது குறித்து போலீசிலேயே முதலில் புகார் அளிக்கப்பட வேண்டும். போலீசார் தான் இது குறித்து விசாரணை செய்ய வேண்டும். ஆக்சிஜன் பதுக்குவது யாராக இருந்தாலும், அது எம்எல்ஏ இம்ரான் உசேனாக இருந்தாலும் சரி, கவுதம் கம்பீராக இருந்தாலும் சரி நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.