'ஹூ".. தலைமை விஞ்ஞானி சௌமியா சுவாமிநாதன் ராஜினாமா?.. விரைவில் தாயகம் திரும்பும் தமிழ்ப்பெண்
உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி சௌமியா ராஜினாமா செய்ய போகிறார்
டெல்லி: உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன், தன் பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துவிட்டு, தாயகம் திரும்ப உள்ளார்.
சௌமியா சென்னையில் பிறந்தவர்.. இவர், இந்தியாவின் பசுமைப் புரட்சியின் தந்தை என்று அழைக்கப்படும் எம்.எஸ்.சுவாமிநாதன் மற்றும் இந்தியக் கல்வியாளர்களில் பிரபலமான மீனா சுவாமிநாதன் ஆகியோரின் மகள் ஆவார்.
இந்தியாவில் மிகவும் பிரபலமான குழந்தை நல மருத்துவராகவும் திகழ்ந்தவர் சௌமியா சுவாமிநாதன்.. காசநோய் மற்றும் எச்ஐவி பற்றிய உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட ஆராய்ச்சியாளரும்கூட..

ஜெனரல்
டாக்டர் சௌமியா சுவாமிநாதன் அவர்களுக்கு மருத்துவப் பராமரிப்பு மற்றும் ஆராய்ச்சியில் 30 வருட அனுபவம் கொண்டவர். தலைமை விஞ்ஞானி பொறுப்பிற்கு முன்பு, சௌமியா சுவாமிநாதன் இந்திய அரசின் சுகாதார ஆராய்ச்சிக்கான செயலாளராகவும், 2015 முதல் 2017 வரை இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் இயக்குநர் ஜெனரலாகவும் இருந்தார்... இந்தக் காலகட்டத்தில், சௌமியா சுவாமிநாதன் சுகாதார கொள்கையை அறிவியல் மற்றும் ஆதாரங்களைக் கொண்டு உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியதை மறக்க முடியாது..

கொத்து கொத்தாக
இதேபோல் இந்திய மருத்துவக் கல்லூரியில் ஆராய்ச்சி திறனை வளர்ப்பதிலும் கூடுதல் கவனம் செலுத்தினார். ஹூ என்று சொல்லப்படும் உலக சுகாதார அமைப்பின் (WHO) தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் ஐந்தாண்டு பணியாற்றி உள்ளார்.. இந்த பணியை சௌமியா ஏற்றபோது, ஆபத்தான சூழலின் பிடியில், இந்த உலகம் சிக்கி கொண்டது.. கொரோனா தாண்டவமாடி, உலக சுகாதார அமைப்பை தூங்க விடாமல் செய்தது.. நாளுக்கு நாள் பல்லாயிரக்கணக்கான உயிரிழப்புகள், கொத்து கொத்தாக இறந்து மடியும் மக்களிடையே, கொரோனா என்ற உயிர்கொல்லி ஆட்டுவித்தது.

நடுங்கிடுச்சு
அந்த தொற்றின் வடிவங்கள், வீரியங்கள் பன்மடங்காக பெருகி, அடுத்தடுத்த கிலியை உண்டாக்கிய நிலையில், உலக சுகாதார அமைப்பின் அறிவிப்புகள்தான், மக்களுக்கு எச்சரிக்கையாக இருந்து வந்தது.. இதில் சௌமியாவின் பங்கும் உள்ளது.. ஒவ்வொரு நாளும், கொரோனாவைரஸ் குறித்த அபாயங்களை குறிப்பிட்டு, மக்களை அலர்ட் செய்து வந்ததையும் இங்கு நினைவுகூர வேண்டி உள்ளது.. இப்படி ஒரு கடினமான காலகட்டத்தை, ஒருவழியாக அனைவரும் கடந்துவிட்ட நிலையில், தன்னுடைய 5 வருட பணிக்கு பிறகு இந்த மாதம் நவம்பர் 30ம் தேதி தன்னுடைய பதவியை ராஜினாமா செய்துவிட்டு இந்தியா திரும்ப திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன..

தாயகம்
இப்போது சவுமியாவுக்கு 63 வயதாகிறது.. இந்தியன் எக்ஸ்பிரஸிடம் இதை பற்றி சௌமியா ஒருமுறை பேசும்போது, அதிக நடைமுறை பணிகளை செய்ய வேண்டும், இந்தியாவில் வாழவும் வேலை செய்யவும் மிகவும் விரும்புகிறேன் என்று தன் எண்ணத்தை வெளிப்படுத்தியிருந்தார்.. அந்தவகையில், பதவியை ராஜினாமா செய்துவிட்டு, மீண்டும் ஆராயச்ச்சி பணியில் ஈடுபட உள்ளதாக கூறியுள்ளார்.. உலக சுகாதார அமைப்பில் தாங்கள் ஊக்குவித்த கருத்துக்கள், சிந்தனைகள் அனைத்தையும் நடைமுறைக்கு கொண்டுவர விரும்புவதாகவும், மிகச்சிறந்த, இந்தியாவுக்கு அதிகமான பங்களிப்புகளைச் செய்ய முடியும் என தாம் நம்புவதாகவும் சௌமியா தன் விருப்பத்தை கூறியிருந்தார்.. அந்தவகையில், சௌமியா சுவாமிநாதனின் வருகையை இந்த தாயகம் எதிர்நோக்கி உள்ளது..!!












Click it and Unblock the Notifications