லாபி + ஏக்கம் + ஏமாற்றம்.. புறக்கணித்த மோடி.. நிறைவேறாத ஓபிஎஸ் பிளான்? சீக்ரெட்டை உடைத்த சீனியர்!
டெல்லி: டெல்லி சென்ற அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வத்தை பிரதமர் மோடி சந்திக்க மறுத்துவிட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த சம்பவத்திற்கு பின் வேறு சில காரணங்கள் இருப்பதாக டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
Recommended Video
அதிமுக பொதுச்செயலாளர் பதவியை எப்படியாவது பெற்றுவிட வேண்டும் என்பதில் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தீவிரமாக இருக்கிறார். வரும் ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு மீண்டும் கூட உள்ளது.
இந்த பொதுக்குழுவில் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் பதவிகள் நீக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பொதுச்செயலாளர் பதவியை எடப்பாடிக்கு கொடுப்பது தொடர்பாகவும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக பொதுக்குழு ஜூலை 11-ல் கூடுமா? ஈபிஎஸ் பொதுச்செயலாளர் கனவு என்னவாகும்? ஓபிஎஸ் நெக்ஸ்ட் மூவ்?
நேரம் கேட்டார்
இந்த நிலையில்தான் நேற்று முதல்நாள் பொதுக்குழு முடிந்ததும் ஓ பன்னீர்செல்வம் வீட்டில் சில மணி நேரங்கள் ஆலோசனை செய்துவிட்டு பின்னர் டெல்லிக்கு சென்றார். டெல்லிக்கு அவசரமாக விமானத்தில் சென்றவர் , நேற்று பிரதமர் மோடியை சந்திக்க நேரம் கேட்டு இருந்தார். நேற்று பாஜக கூட்டணி சார்பாக குடியரசுத் தலைவர் வேட்பாளர் திரௌபதி முர்மு வேட்புமனு தாக்கல் செய்தார். அதில் பிரதமர் மோடியுடன் ஓபிஎஸ் மற்றும் அவரது மகன் ஓ பி ரவீந்திரநாத் எம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.
தனியாக சந்திக்கவில்லை
இதில் ஓ பன்னீர்செல்வத்தை பார்த்த பிரதமர் மோடி.. வாஞ்சையாக தோளில் தட்டி இருக்கிறார். சிரித்தபடி அவரிடம் நலம் விசாரித்து உள்ளார். ஆனால் அவரிடம் மட்டும் நலம் விசாரிக்கவில்லை. அங்கு இருந்த எம்பி தம்பிதுரை போன்றவர்களிடமும் நலம் விசாரித்துள்ளார். மற்றபடி ஓபிஎஸ்ஸை அவர் தனியாக சந்திக்கவில்லை. அந்த நிகழ்வு முழுக்கவே நிறைய எம்பிக்கள், சீனியர் அமைச்சர்கள் இருந்தனர். இதனால் ஓபிஎஸ்சால் தனியாக பிரதமர் மோடியை சந்திக்க முடியவில்லை.
லாபி
ஓபிஎஸ், ஓபிஆர் இருவரும் எப்படியாவது மோடி முகத்தில் படும்படி நிற்க வேண்டும். அவரின் முன் அடிக்கடி வர வேண்டும். அப்போதுதான் அவர் நம்மை அழைப்பார் என்று முயன்று உள்ளனர். ஆனால் அப்படியும் மோடி இவர்களை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. இது போக.. சென்னையில் இருக்கும் முக்கியமான "லாபியிஸ்ட்" ஒருவர் மூலம் பேச வைத்து, பிரதமர் மோடியின் அப்பாயின்மென்டை வாங்க முயன்று இருக்கிறார் ஓபிஎஸ். ஆனால் அதுவும் செட்டாகவில்லை.
வேறு புள்ளியை பார்த்து புலம்பல்
ஏற்கனவே நான் லாபி பார்த்தது எல்லாம் வீணாகிவிட்டது. அதற்கே பாஜக தலைமை என் மீது அப்செட். மீண்டும் இந்த விவகாரத்தில் நான் தலையிட விரும்பவில்லை என்று அந்த புள்ளி ஒதுங்கிக்கொண்டாராம். இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் வேறு புள்ளியை பார்த்து ஓபிஎஸ் புலம்பி இருக்கிறார். டெல்லியில் இருக்கும் பாஜக நிர்வாகியை பார்த்து எப்படியாவது மோடியை சந்திக்க நேரம் வாங்கிக்கொடுங்கள். இக்கட்டான சூழ்நிலையில் இருக்கிறோம் என்று கூறியுள்ளார்.
ஏக்கம் - ஏமாற்றம்
ஏக்கத்தோடு இருந்த ஓபிஎஸ்ஸுக்கு கடைசியில் ஏமாற்றம்தான் விடையாக கிடைத்து இருக்கிறதாம். ஆம் நேற்று பிரதமர் மோடி ஓபிஎஸ்ஸை சந்திக்க மறுத்துள்ளார் . பிரதமர் அலுவலகம் கடைசி வரை இவருக்கு அப்பாயின்மென்ட் கொடுக்கவில்லை. இதனால் ஓபிஎஸ் சோகம் அடைந்துள்ளார். ஏதாவது செய்யலாம்.. அதிமுகவில் டெல்லி மூலம் பிரஷர் கொடுக்கலாம் என்றவருக்கு ஏமாற்றம். ஆனால் மற்ற பாஜக தலைகள் சிலரை இவர் வெற்றிகரமாக சந்தித்து இருக்கிறார்.
சீக்ரெட்டை உடைத்த சீனியர்
மற்ற பாஜக தலைவர்கள் சிலரிடம் அதிமுகவினரிடம் பேசுங்கள் என்று பிரஷர் கொடுத்துள்ளார். அவர்களும் பேசுவதாக கொஞ்சம் நம்பிக்கையாக பேசி இருக்கிறார்களாம். ஆனால் இந்த தகவலும் உடனே எடப்பாடி காதுகளுக்கு சென்று இருக்கிறதாம். தம்பிதுரை எம்பி டெல்லியில் கண் கொத்தி பாம்பாக ஓபிஎஸ் எடுத்த ஒவ்வொரு மூவையும் கவனித்து வந்துள்ளார். இவர் மூலம் டெல்லி பயணத்தின் சீக்ரெட் எல்லாம் எடப்பாடி காதுகளுக்கு சென்று இருக்கிறதாம்.
காரணம் என்ன?
பிரதமர் மோடி ஓபிஎஸ்ஸை சந்திக்காமல் இருக்க பல்வேறு காரணங்கள் சொல்லப்படுகிறது. அதன்படி, அதிமுக விவகாரத்தில் இப்போது அவர் மத்தியசம் பேச விரும்பவில்லை என்கிறார்கள். அதோடு பிரதமர் மோடி சொல்லித்தான் நான் துணை முதல்வர் பதவி ஏற்றேன் என்று ஓபிஎஸ் போட்டு உடைத்ததையும் அவர் சுத்தமாக விரும்பவில்லையாம். இதனால் மீண்டும் இதில் சமாதானம் பேச போய்.. அதை எதிர்காலத்தில் ஓபிஎஸ் சொல்லிக்காட்டுவார் என்று மோடியும், பாஜக மேலிடமும் இதில் ஒதுங்கிக்கொண்டதாக கூறப்படுகிறது.