போருக்கு நடுவில் கொரோனாவை மறந்துட்டோமே! உருமாறும் கொரோனா அடுத்து என்ன செய்யும்? முக்கிய தகவல்
டெல்லி: கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறும் இயல்பைக் கொண்டிருக்கும் நிலையில், புதிய வைரஸ் பாதிப்பு எப்போது முடிவுக்கு வரும் என்பது குறித்து ஆய்வாளர்கள் முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளனர்.
கடந்த 2019 இறுதியில் பரவ தொடங்கிய கொரோனா வைரஸ், இன்னும் கூட முழுமையாகக் கட்டுக்குள் வரவில்லை. ஹாங்காங் உள்ளிட்ட சில இடங்களில் கொரோனா பரவல் இப்போது அதிகரித்தே வருகிறது.
கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருவதால் அடுத்தடுத்த அலைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கிறது. இவை எப்போது முற்றிலுமாக முடிவுக்கு வரும் என்பதே மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

உலக நாடுகள்
கொரோனா வைரசுக்கு எதிராக உலக நாடுகள் இரு வகையான நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. பெரும்பாலான நாடுகள் கொரோனா உடன் இணைந்து வாழக் கற்றுக் கொண்டன. சில நாடுகள் மட்டுமே ஜீரோ கோவிட் என்ற கொள்கையில் இன்னும் உறுதியாக உள்ளது. இதனால் கொரோனா இல்லாத உலகம் என்பது சாத்தியமா எனப் பலருக்கும் சந்தேகம் எழுந்துள்ளது. இதற்கிடையே வரும் காலத்தில் கொரோனா வைரஸ் தொடர்ந்தாலும், பெருந்தொற்று முடிவுக்கு வந்துவிடும் என்று அமெரிக்கச் சுகாதார ஆய்வாளர் கிறிஸ்டோபர் முர்ரே தெரிவித்துள்ளார்,

கட்டுப்பாடுகள் நீக்கம்
ஏற்கனவே, பிரிட்டன், டென்மார்க் நாடுகள் கொரோனா தொடர்பான அனைத்து கட்டுப்பாடுகளையும் நீக்கிவிட்டன. அதேபோல அமெரிக்காவிலும் மாஸ்க் உள்ளிட்ட பெரும்பாலான கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளன. இந்தியாவிலும் பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதனால் பொதுமக்கள் மெல்ல இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகின்றனர். கொரோனாவால் பாதிக்கப்பட்ட இந்தியப் பொருளாதாரமும் மெல்ல மீண்டு வருகிறது.

ஆய்வாளர்கள்
மேலும், ஸ்பெயின் உள்ளிட்ட சில நாடுகள் கொரோனா வைரஸ் என்டமிக் நிலையை அடைந்துவிட்டதாகக் கூறி வருகிறது. அதாவது இதுவரை ஏற்படுத்தியதை போல கொரோனா வைரஸ் தீவிர பாதிப்பை ஏற்படுத்தாது என்றும் சாதாரண காய்ச்சலைப் போல அவ்வப்போது பரவும் என்றும் ஒரு தரப்பு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதை மற்றொரு தரப்பினர் மறுக்கின்றனர். ஒரு நோயானது என்டமிக் நிலையை அடைந்தாலும் கூட அது வேகமாகப் பரவி மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் என்று மற்றொரு தரப்பினர் எச்சரிக்கை விடுக்கின்றனர்.

4 சாத்தியங்கள்
கொரோனாவை தொடர்ந்து ஆய்வு செய்து வரும் பிரிட்டிஷ் ஆய்வாளர்கள், தொடர்ந்து உருமாறும் இயல்பு கொண்ட கொரோனா குறித்து நான்கு சாத்தியமான வழிகளை விளக்குகிறது. வரும் காலங்களில் ஆங்காங்கே சிறிய பிராந்திய வெடிப்புகள் ஏற்பட்டு, கொரோனா கேஸ்கள் அதிகரிக்கலாம். அதேநேரம் மோசமான சூழலில் கணிக்க முடியாத அளவுக்கு உருமாறிய கொரோனா தோன்றி, மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும். வரும் காலத்தில் இதில் கொரோனா எந்த மாதிரியான பாதிப்பை ஏற்படுத்தும் என்பது தெளிவாகத் தெரியவில்லை என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

உருமாறிய கொரோனா
அதேநேரம் கொரோனா பெருந்தொற்றின் தீவிர தன்மை குறைந்துவிட்டது என்பதற்காக அதை அப்படியே விட்டுவிட முடியாது. அப்படி கொரோனா தொடர்பான ஆய்வை நிறுத்திக் கொண்டால், புதிய உருமாறிய கொரோனா வைரஸ்களை கண்டறிய முடியாத சூழல் ஏற்படும். இதனால் மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய உருமாறிய கொரோனா தோன்றும் வாய்ப்புகளும் மிக அதிகம் என்று கூறப்படுகிறது.

வேக்சின் முக்கியம்
எனவே, ஒருபுறம் கொரோனா தொடர்பான ஆய்வுகளைத் தீவிரப்படுத்த வேண்டும் என்றும் அதேநேரம் மறுபுறம் வேக்சின் பணிகளை தீவிரமாக்க வேண்டும் என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். ஏற்கனவே, உலகில் 70% மக்கள் வேக்சின் போட்டுக் கொண்டால் கொரோனா பெருந்தொற்றின் ஆபத்தான காலகட்டத்தைக் கடந்துவிடுவோம் என உலக சுகாதார அமைப்பு கூறியிருந்தது. ஆப்பிரிக்க மற்றும் தென் அமெரிக்க நாடுகளில் வேக்சின் பணிகள் மந்தமாக நடைபெறுவதால் அதைத் தீவிரப்படுத்த வேண்டும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

ஆய்வாளர்கள் கூறுவது என்ன
அதாவது கொரோனா வைரசை இந்த ஆண்டிற்குள் முழுமையாக ஒழிப்பது என்பது கிட்டதட்ட முடியாத காரியம் தான். அதேநேரம் கொரோனா வைரஸ் குறித்த ஆய்வுகளை தீவிரப்படுத்திப் பின்தங்கிய நாடுகளில் வேக்சின் பணிகளை வேகப்படுத்தினால் தீவிர பாதிப்பைக் குறைக்கலாம் என்றே ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். இதன் மூலம் உலகம் விரைவில் கொரோனாவுக்கு முந்தைய நிலையை அடையும் என்றும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.












Click it and Unblock the Notifications