வெறும் இரண்டே வார்த்தை... தேர்தல் 'கமிஷனை'... நச்சென்று விமர்சித்த ராகுல்... வைரல் ட்வீட்
டெல்லி: காங்கிரசின் ராகுல் காந்தி தேர்தல் ஆணையத்தில் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில் வெறும் இரண்டே வார்த்தைகளில் ட்வீட் செய்துள்ளார்.
தமிழகத்தைப் போலவே அசாம் மாநிலத்தின் சட்டசபையின் காலமும் அடுத்த மாதம் நிறைவடைகிறது. அசாமில் மூன்று கட்டங்களாகச் சட்டசபை தேர்தல் நடைபெறுகிறது. முதல்கட்டமாக 47 தொகுதிகளில் கடந்த மார்ச் 27ஆம் தேதி தேர்தல் நடைபெற்றது.
அதைத்தொடர்ந்து இரண்டாம் கட்டமாக 39 தொகுதிகளில் ஏப்ரல் 1ஆம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது வாக்குப்பதிவு இயந்திரம் பாஜக வேட்பாளரின் காரில் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
வாக்குப்பதிவு இயந்திரத்தை எடுத்துச் சென்ற கார் பழுதானதால் அங்கு வந்த மற்றொரு காரில் லிப்ட் கேட்டதாகவும் அந்த கார் பாஜக வேட்பாளரின் கார் என்பது தெரியாது என்றும் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்திருந்தது. இது தொடர்பாக இரண்டு பேரை தேர்தல் ஆணையம் சஸ்பெண்ட் செய்துள்ளது.
Election “Commission”.
— Rahul Gandhi (@RahulGandhi) April 3, 2021
இந்த சம்பவம் தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ளது. எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல்வேறு அரசியல் தலைவர்களும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்த விஷயத்தில் யார் மீது தவறு இருந்தாலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளை விமர்சிக்கும் வகையில், ராகுல் காந்தி வெறும் இரண்டே வார்த்தைகளில் ட்வீட் ஒன்றைச் செய்துள்ளார். ராகுல் தனது ட்விட்டரில் Election "Commission" என்று பதிவிட்டுள்ளார். அதாவது கமிஷன் என்ற வார்த்தையை அவர் அடைப்புக்குறிக்குள் பதிவிட்டு, தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகள் ஒரு தலைப்பட்சமாக இருப்பதாக விமர்சித்துள்ளார்.
அசாம் மாநிலத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி இறுதிக்கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதில் 40 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.