விருப்பத்தோடு பெண் உறவு வைத்தால்.. ஆசைகாட்டி பலாத்காரம் செய்ததாக வழக்குபோட முடியாது- உச்சநீதிமன்றம்
டெல்லி: ஆண் ஒருவருடன் விருப்பத்தின் பேரில் உறவு வைத்த பிறகு விரிசல் ஏற்பட்டால் அதனை பலாத்கார வழக்காக பதிவு செய்ய முடியாது என உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்து ஒருவருக்கு முன்ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.
ராஜஸ்தானை சேர்ந்த இளம்பெண் ஒருவர் அன்சார் முகமது என்பவருடன் பழகி வந்தார். இந்த பழக்கமானது இருவருக்கும் காதலாக மாறியுள்ளது.
இதையடுத்து அவர்கள் 2 பேரும் ஒன்றாக ஆங்காங்கே வெளியே சென்று வந்துள்ளனர். மேலும் ஒரே அறையில் சேர்ந்து வாழ்ந்தனர். இவர்களுக்கு பெண் குழந்தை பிறந்தது.

முறிந்த உறவு
இந்நிலையில் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அவர்களின் உறவு முறிந்து கொண்டது. இந்நிலையில் தான் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தன்னை பலாத்காரம் செய்ததாக அந்த இளம்பெண், அன்சார் முகமது மீது போலீசில் புகார் செய்தார். இந்த புகாரின் அடிப்படையில் அவர் மீது பலாத்கார வழக்கு உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

மனு தள்ளுபடி
இந்த வழக்கில் கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க அன்சார் முகமது ராஜஸ்தான் உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கோரி மனு செய்தார். மனுவை விசாரித்த நீதிமன்றம் குற்றவியல் நடைமுறைச் சட்டம் (சிஆர்பிசி) பிரிவு 438ன் கீழ் முன்ஜாமீன் கோரிய அவரது மனுவை தள்ளுபடி செய்தது.

உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு
மேலும் மனுதாரர் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்து புகார் தாரருடன் உறவை ஏற்படுத்தி கொண்டுள்ளார். மேலும் பெண் குழந்தையும் பிறந்துள்ளது. இதனால் குற்றத்தின் தீவிரத்தை கருத்தில் கொண்டு முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்படுகிறது" என ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் 2022 மே 19ல் உத்தரவிட்டது. இந்த உத்தரவை எதிர்த்து அன்சார் அகமது சார்பில் டெல்லி உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு மனு செய்யப்பட்டது.

விருப்ப உறவு பலாத்காரமல்ல
இந்த மேல்முறையீட்டு மனுவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹேமந்த் குப்தா மற்றும் விக்ரம் நாத் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது. அப்போது ‛‛மனுதாரருடன் அந்த பெண் 4 ஆண்டுகள் வரை உறவில் இருந்துள்ளார். இந்த உறவை அந்த பெண்ணின் 21வயதில் துவங்கி உள்ளது. விருப்பத்தின் பேரில் உறவு தொடர்ந்துள்ளது. விருப்ப உறவில் இருந்து விரிசலுக்கு பிறகு பலாத்கார வழக்கை பதிவு செய்ய முடியாது. இது இந்திய தண்டனை சட்டம் 376(2)(n) கீழ் வராது'' என நீதிபதிகள் கூறினர். மேலும், அவருக்கு முன்ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் எனவும் மனுதாரருக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.












Click it and Unblock the Notifications