பொது வேட்பாளர்: யார் இந்த யஷ்வந்த் சின்ஹா? மோடி-ஷாவால் ஓரங்கட்டப்பட்டவரை களமிறக்கும் எதிர்க்கட்சிகள்
டெல்லி : குடியரசுத் தலைவர் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா அறிவிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
யஷ்வந்த் சின்ஹா இந்தியாவின் நிதியமைச்சராக சந்திரசேகர் அமைச்சரவையிலும், வாஜ்பாய் அமைச்சரவையிலும் பணியாற்றியவர். வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பொறுப்பு வகித்தவர்.
மோடி மற்றும் அமித்ஷாவால் பாஜகவில் ஓரங்கட்டப்பட்ட யஷ்வந்த் சின்ஹா 2021ஆம் ஆண்டு திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

குடியரசுத் தலைவர் தேர்தல்
குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் ஜூலை 24ஆம் தேதியுடன் முடிவடையும் நிலையில் புதிய குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18ஆம் தேதி நடைபெறவுள்ளது. 21ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது. வரும் 29ஆம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கு கடைசி நாள். ஆனால், இதுவரை பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பிலும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை. காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சிகள் சார்பிலும் பொது வேட்பாளர் யார் என அறிவிக்கப்படவில்லை.

பொது வேட்பாளர்
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளரை நிறுத்துவது குறித்து தொடர் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருகின்றன. கடந்த 15ஆம் தேதி திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகளின் பிரதிநிதிகள் டெல்லியில் கூடி, குடியரசுத் தலைவர் தேர்தலுக்கு பொது வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்து விவாதித்தனர். தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் பெயரையும், ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் ஃபரூக் அப்துல்லா பெயரையும் முன்மொழிந்தனர். ஆனால், இருவருமே அதை நிராகரித்தனர்.

எதிர்க்கட்சிகள் சார்பில்
மேற்கு வங்க முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தியை பொது வேட்பாளராக போட்டியிட வைக்க திட்டமிட்டனர். ஆனால், அவரும் வேட்பாளராகப் போட்டியிட மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து முன்னாள் மத்திய அமைச்சர் யஷ்வந்த் சின்ஹா பெயரை சில எதிர்க்கட்சிகள் முன்மொழிந்துள்ளதாகவும், தற்போதைக்கு 3, 4 எதிர்க்கட்சிகள் அதற்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், அது குறித்து மம்தா பானர்ஜி பரிசீலித்து வருவதாகவும் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் நேற்று தெரிவித்தார்.

வேட்பாளராக அறிவிக்கப்பட வாய்ப்பு
எதிர்க்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளராக யஷ்வந்த் சின்ஹா பெயர் பரிந்துரை செய்யப்பட்ட நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகவிருப்பதாக சூசகமாக தெரிவித்துள்ளார். யஷ்வந்த் சின்ஹா, எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக இன்று நடக்கும் எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு அறிவிக்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.

பாஜக முன்னாள் அமைச்சர்
பீகார் மாநிலம் பாட்னாவில் 1937ல் பிறந்த யஷ்வந்த் சின்ஹா, பொலிட்டிகல் சயின்ஸ் முதுநிலைப் பட்டம் பெற்றவர். பின்னர் பாட்னா பல்கலைக்கழகத்தில் பணியாற்றினார். பின்னர் ஐ.ஏ.எஸ் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று 24 ஆண்டுகாலம் பல்வேறு பதவிகளை வகித்தார். 1971ஆம் ஆண்டு முதல் 2 ஆண்டு காலத்திற்கு ஜெர்மனிக்கான இந்திய தூதரகத்தில் முதன்மை செயலராகப் பணியாற்றினார். பின்னர் ஜெர்மனிக்கான இந்திய தூதரக தலைவராகவும் பணியாற்றினார்.

ஐ.ஏ.எஸ் பதவி ராஜினாமா
1984ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் பதவியை ராஜினாமா செய்துவிட்டு ஜனதா கட்சியில் சேர்ந்து அரசியலில் பணியாற்றத் தொடங்கினார். அவர் 1986ல் ஜனதா கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக நியமிக்கப்பட்டார். 1988-ல் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். 1989ல் ஜனதாதளம் கட்சி உருவானபோது அதன் பொதுச் செயலாளர் ஆனார். 1990ல் இந்தியாவின் நிதியமைச்சராக சந்திரசேகர் அமைச்சரவையில் பணியாற்றினார்.

பா.ஜ.கவில் இணைந்து
1996ல் பா.ஜ.கவில் இணைந்து தேசிய செய்தித் தொடர்பாளரானார் யஷ்வந்த் சின்ஹா. யஷ்வந்த் சின்ஹா 1998, 1999 மற்றும் 2009 ஆம் ஆண்டுகளில் ஹசாரிபாக் லோக்சபா தொகுதியில் இருந்து பாஜக சார்பில் எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாய் தலைமையிலான பா.ஜ.க அரசில் மார்ச் 1998ல் நிதி அமைச்சராக நியமிக்கப்பட்டார் யஷ்வந்த் சின்ஹா. 2002 ஆம் ஆண்டு வெளிவிவகார அமைச்சராக நியமிக்கப்பட்டார்.

முக்கிய கொள்கைகள்
யஷ்வந்த் சின்ஹாவின் பதவிக் காலத்தில், சில முக்கிய கொள்கை முன்முயற்சிகளை திரும்பப் பெற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதற்காக அவர் அதிகமான விமர்சனங்களுக்கு உள்ளானார். எனினும், இந்தியப் பொருளாதாரத்தை உறுதியான வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்லும் பல முக்கிய சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டதற்காக சின்ஹா பரவலாகப் பாராட்டப்படுகிறார்.

திரிணாமுல் காங்கிரஸில்
2021ல் நடைபெற்ற மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார் யஷ்வந்த் சின்ஹா. கட்சியில் சேர்ந்ததுமே திரிணாமுல் காங்கிரஸின் துணைத் தலைவராக யஷ்வந்த் சின்ஹாவை நியமித்தார் மம்தா பானர்ஜி. இந்நிலையில், அவர் திரிணாமுல் காங்கிரஸால் முன்மொழியப்பட்டு, எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளராக குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட உள்ளார்.

குடும்பம்
2015ஆம் ஆண்டில், பிரான்சின் மிக உயர்ந்த குடிமகன் விருதான அதிகாரி டி லா லெஜியன் டி'ஹானூர் விருது யஷ்வந்த் சின்ஹாவுக்கு வழங்கப்பட்டது . யஷ்வந்த் சின்ஹாவின் மனைவி நீலிமா சின்ஹா, இந்தியாவின் முன்னணி குழந்தைகள் எழுத்தாளர்களில் ஒருவர் ஆவார். இவர்களுக்கு ஷர்மிளா என்ற மகளும் ஜெயந்த் சின்ஹா மற்றும் சுமந்த் சின்ஹா இரண்டு மகன்களும் உள்ளனர். ஜெயந்த் சின்ஹா பாஜக எம்.பியாக உள்ளார். யஷ்வந்த் சின்ஹா ஒரு சுதேசி சீர்திருத்தவாதியின் ஒப்புதல் வாக்குமூலம் என்ற தலைப்பில், தான் நிதி அமைச்சராக இருந்தது குறித்து புத்தகம் ஒன்றையும் எழுதியுள்ளார்.
-
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது?












Click it and Unblock the Notifications