மோடியால் உண்மையை சிறையில் அடைக்க முடியாது! ஜிக்னேஷ் மேவானி கைதுக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு
டெல்லி: குஜராத் மாநில சுயேச்சை எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானி நேற்று நள்ளிரவில் அசாம் போலீசாரால் திடீரென்று கைது செய்யப்பட்டார். இதை காங்கிரஸ் கட்சியினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலைலயில் ‛‛அரசு எந்திரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்ப்புகளை நசுக்க முயன்றாலும் மோடியால் ஒருபோதும் உண்மையை சிறையில் அடைக்க முடியாது'' என காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வட்கம் சட்டசபை தொகுதி எம்எல்ஏவாக இருப்பவர் ஜிக்னேஷ் மேவானி. ராஷ்ட்ரிய தலித் அதிகார் மன்ஞ் ஒருங்கிணைப்பாளராகவும் இவர் உள்ளார்.
இவர் கடந்த 2017 குஜராத் சட்டசபை தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட்டு வெற்றி பெற்றார். தேர்தலின்போது இவருக்கு காங்கிரஸ் கட்சி ஆதரவு அளித்தது. இதன்மூலம் அவர் வெற்றி பெற்றார்.

ஜிக்னேஷ் மேவானி கைது
ஜிக்னேஷ் மேவானி தலித் மக்களின் உரிமைகளுக்கு குரல் கொடுத்து வரும் நிலையில், பாஜகவையும் விமர்சனம் செய்து வருகிறார். குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் அவர் காங்கிரஸ் கட்சியில் இணையலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் தான் ஜிக்னேஷ் மேவானி நேற்று இரவு 11.30 மணியளவில் குஜராத் மாநிலம் பாலன்பூர் சர்க்யூட் ஹவுஸில் வைத்து கைது செய்யப்பட்டார். இவரை அசாம் போலீசார் கைது செய்தனர்.

கைது ஏன்
இதற்கிடையே ஜிக்னேஷ் மேவானியின் டுவிட்டர் பக்கத்தில் இருந்த அதுதொடர்பான பதிவுகள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. இதில் பிரதமர் நரேந்திர மோடியை, கோட்ஸேவுடன் தொடர்புபடுத்தி அவர் குறிப்பிட்டு இருந்துள்ளார். இதுதொடர்பாக அசாம் மாநில பாஜக தலைவர் அரூப் குமார் டே போலீசில் புகார் செய்தார். அதனடிப்படையில் போலீசார் கைது செய்துள்ளனர். இதையடுத்து அவர் அமதாபாத் அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து கவுகாத்திக்கு கொண்டு செல்லப்பட்டார்.

ராகுல்காந்தி கண்டனம்
ஜிக்னேஷ் மேவானியில் கைதுக்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். அதன்படி காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி பிரதமர் நரேந்திர மோடியை விமர்சனம் செய்துள்ளார். இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில், ‛‛மோடி அவர்களே நீங்கள் அரசு இயந்திரத்தை தவறாக பயன்படுத்தி எதிர்ப்புகளை நசுக்க முயற்சிக்கலாம். ஆனால் உங்களால் ஒருபோதும் உண்மையை சிறையில் அடைக்க முடியாது'' என கூறியுள்ளார். இந்த டுவிட்டர் பதிவை ராகுல்காந்தி DaroMat மற்றும் Satyamevajayate எனும் ஹேஷ்டேக்குகளில் பதிவிட்டுள்ளார்.

காங்கிரஸ் குரல் எழுப்பும்
மேலும் காங்கிரஸ் கட்சி தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில், ‛‛குஜராத் எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் ஜனநாயகம், அரசியலமைப்புக்கு விரோதமான முறையில் கைது செய்துள்ளனர். இதன்மூலம் அவரை மக்கள் பிரதிநிதியாக தேர்வு செய்த மக்களை அவமதித்துள்ளனர். இந்த ஒடுக்கு முறைக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் குரல் எழுப்புவார்கள்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சர்வாதிகாரத்துக்கான சான்று
மேலும் காங்கிரஸ் மூத்த தலைவர் கேசி வேணுகோபாலும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளார். இதுகுறித்து அவர், ‛‛எம்எல்ஏ ஜிக்னேஷ் மேவானியை நள்ளிரவில் அசாம் போலசார் சட்டவிரோதமாகவும், அரசியலமைப்புக்கு எதிராகவும் கைது செய்துள்ளனர். இது பாஜகவின் சர்வாதிகாரத்துக்கான சமீபத்திய சான்றாகும். இப்படி மக்கள் பிரதிநிதி கைது செய்யப்பட்டது அவர்களின் விமர்சனங்களுக்கு அஞ்சுவதை காட்டுவதோடு, நமது ஜனநாயகத்தின் மீது விழும் அடியாகவும் உள்ளது'' என குறிப்பிட்டுள்ளார்.












Click it and Unblock the Notifications