கண்ணையாலால் கொலையாளிகளை ராகுல் மன்னிக்ககோரியதாக அவதூறு! தொகுப்பாளர் ரோகித் ரஞ்சன் அதிரடி கைது!
டெல்லி: ராஜஸ்தான் உதய்ப்பூரில் நடந்த கண்ணையாலால் கொலையாளிகளை ராகுல் காந்தி மன்னிக்ககோரியதாக தவறான செய்தி வெளியிட்ட தனியார் தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ரோகித் ரஞ்சன் கைது செய்யப்பட்டுள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் ராகுல்காந்தி கேரள மாநிலம் வயநாடு தொகுதி எம்பியாக உள்ளார். இந்நிலையில் ஜூன் 24ல் எஸ்எப்ஐ அமைப்பினர் வயநாட்டில் உள்ள ராகுல்காந்தியின் அலுவலம் மீது தாக்குதல் நடத்தினர்.
கேரளாவில் அனைத்து பாதுகாக்கப்பட்ட வனப்பகுதி, வனவிலங்கு சரணாலயங்கள் மற்றும் தேசிய பூங்காக்களைச் சுற்றி ஒரு கிலோமீட்டருக்கு சுற்றுச்சூழல் உணர்திறன் மண்டலத்தை கட்டாயமாக்குவது தொடர்பாக உச்சநீதிமன்ற உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவிக்காததால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

தவறாக ஒளிபரப்பு
இந்நிலையில் ஜூலை 1ல் வயநாடு சென்ற ராகுல்காந்தி இதுபற்றி பேசினார். அப்போது ‛‛வயநாட்டு அலுவலகம் மீது நடத்தப்பட்ட தாக்குதல் என்பது துர்திர்ஷ்டவசமானது. பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்டுள்ளனர். இவர்கள் இளைஞர்கள் என்பதால் மன்னியுங்கள்'' எனக்கூறினார். இந்நிலையில் ராகுல்காந்தியின் இந்த பேச்சு தனியார் தொலைக்காட்சியில் தவறாக ஒளிபரப்பப்பட்டது. அதாவது நுபுர் சர்மாவுக்கு ஆதரவு தெரிவித்ததால் ராஜஸ்தான் மாநிலம் உதய்ப்பூரில் டெய்லர் கண்ணையாலாலை கொலை செய்த இருவரும் இளைஞர்கள். அவர்களை மன்னிக்க வேண்டும் என ராகுல்காந்தி கேரளாவில் பேசியதாக செய்தி வெளியானது.

காங்கிரஸ் தலைவர்கள் கண்டனம்
இதற்கு ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் கடும் கண்டனத்தை பதிவு செய்தார். மேலும் காங்கிரஸ் தலைவர்கள் கடுமையான கண்டனத்தை பதிவு செய்தனர். இதையடுத்து சேனல் தொடர்பாக மன்னிப்பு கோரப்பபட்டது. இதுதொடர்பாக காங்கிரஸ் பிரமுகர் ராம்சிங் பான்பார்க் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.

வழக்குப்பதிவு
தொலைக்காட்சியின் தொகுப்பாளர் ரோஹித் ரஞ்சன், பாஜகவின் செய்தி தொடர்பாளர் ராஜ்யவர்தன் ராதோர் உள்பட மேலும் சிலர் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்பட்டது. இதுதொடர்பாக பான் பார்க் போலீசார் இந்திய தண்டனை சட்டம் 504 (வேண்டுமென்றே அவமதித்தல்), 505 (குற்றம்சார் மிரட்டல்), 153ஏ (மதம், இனம், அடிப்படையில் பகைமையை ஊக்குவித்தல்), 295A (மதம் அல்லது மத நம்பிக்கைகளை அவமதிப்பதன் மூலம் மத உணர்வுகள் அடிப்படையில் சீற்றத்தை ஏற்படுத்துதால்) 120B (குற்றச் சதி) உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

கைது செய்த போலீசார்
இதற்கிடையே ரோகித் ரஞ்சன் உள்ளிட்டவர்கள் மீது சத்தீஸ்கார், உத்தர பிரதேச மாநில போலீஸ் நிலையங்களில் இதுதொடர்பாக புகார்கள் செய்யப்பட்டனர். அதன்பேரில் போலீசார் இன்று தொகுப்பாளர் ரோகித் ரஞ்சனை கைது செய்தனர். இந்நிலையில் ரோகித் ரஞ்சனை கைது செய்ய இன்று அதிகாலை 5.30 மணிக்கு சத்தீஸ்கார் மற்றும் உத்தர பிரதேச மாநிலம் நொய்டா போலீசார் அவரது வீட்டுக்கு சென்றனர். யார் அவரை கைது செய்வது தொடர்பாக இரு மாநில போலீசாருக்கு இடையே போட்டி நிலவியது. இதற்கிடையே வழக்கு தொடர்பாக உத்தர பிரதேச போலீசார் ரோகித் ரஞ்சனை கைது செய்தனர். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.












Click it and Unblock the Notifications