நீங்கள் அரசியல் செய்ய.. மோடியின் தாய் தான் கிடைத்தார்களா.. ஆம் ஆத்மியை விட்டு விளாசிய ஸ்மிருதி இராணி
அகமதாபாத்: பிரதமர் மோடியின் தாயார் ஹிரபா மோடியை இழிவு படுத்தும் வகையில் ஆத் ஆத்மி கட்சி தலைவர் பேசும் பழைய வீடியோவை வெளியிட்டு பாஜக ஆம் ஆத்மி கட்சியை தாக்கியுள்ளது. இதுதொடர்பாக மத்திய அமைச்சர் ஸ்மிருதி இராணி 'அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத முதிய பெண்மணியை இழிவாக பேசுவது முற்றிலும் மன்னிக்க முடியாதது' என்று கூறியுள்ளார்.
பிரதமர் மோடியை தரக்குறைவாக பேசியிருந்ததாக ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் கோபால் இடாலியாவுக்கு டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையம் சம்மன் அனுப்பியது.
இதற்காக கோபால் இடாலியா தேசிய பெண்கள் ஆணையம் முன்பு விசாரணைக்கு ஆஜராகினார். அதையடுத்து அங்கு சென்ற டெல்லி காவல்துறை இடாலியாவை விசாரணைக்காக அழைத்து சென்றது.

இடாலியாவை தொந்தரவு செய்வது ஏன்?
சில மணி நேரம் தடுப்புக்காவலில் வைத்து இடாலியாவை விசாரித்த டெல்லி காவல்துறை பின் விடுவித்தது. கோபால் இடாலியா மீது தேசிய பெண்கள் ஆணையம் அளித்த புகாரின் அடிப்படையில் விசாரணைக்கு அழைத்து சென்றதாக டெல்லி காவல்துறை விளக்கம் அளித்து இருந்தது. இந்த சம்பவம் குறித்து டெல்லி முதல்வரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் தனது ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ஒட்டு மொத்த பாஜகவும் கோபல் இடாலியாவை தொந்தரவு செய்வது ஏன்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

வீடியோ வெளியிட்டு விமர்சிப்பு
இந்த விவகாரம் குஜராத் அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், ஆம் ஆத்மி கட்சியின் குஜராத் தலைவர் கோபால் இடாலியா, பிரதமர் மோடியின் தாயார் ஹிரபா மோடியை அவதூறாக பேசும் வீடியோ ஒன்றை பாஜக வெளியிட்டது. இந்த விவகாரம் தற்போது ஆம் ஆத்மி கட்சிக்கு புதிய தலைவலியை கொடுத்துள்ளது. கோபால் இடாலியாவின் இந்த வீடியோவை முன்வைத்து பாஜக ஆம் ஆத்மி கட்சியை கடுமையாக விமர்சித்து வருகிறது.

முற்றிலும் மன்னிக்க முடியாதது
இந்த நிலையில், இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் ஸ்மிருதி இராணி, ''பிரதமர் மோடியின் தாயாரை இழிவாக பேசுவதன் மூலம் குஜராத்தில் அரசியல் ரீதியாக பிரபலம் அடையலாம் என்று நீங்கள் கருதினால் அது முற்றிலும் தவறானது. இந்த தவறுக்காக குஜராத்தும்.. குஜராத் மக்களும்.. வரும் தேர்தலில் உங்களுக்கு தக்க பாடம் புகட்டுவார்கள். அரசியலில் எந்த தொடர்பும் இல்லாத 100- வயதான முதிய பெண்மனியை இழிவாக பேசுவது முற்றிலும் மன்னிக்க முடியாதது.

இந்துக்கள் பற்றியும் இப்படி தான் பேசுகிறார்
உங்கள் (ஆம் ஆத்மி) அரசியலை முறியடிக்கும் மோடியின் தாயார் என்பது மட்டுமே அவருடைய குற்றம் ஆகும். ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அறிவுறுத்தல் படியே இடாலியா இப்படி பேசி வருகிறார். இந்துக்கள் பற்றியும்... கோவிலுக்கு செல்லும் பெண்கள் பற்றியும்... இழிவாக இடாலியா பலமுறை பேசியிருக்கிறார்'' என்றார்.

சட்டமன்ற தேர்தல்
குஜராத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. பாஜகவின் கோட்டையாக திகழும் குஜராத்தில் இந்த முறை ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் ஆம் ஆத்மி கட்சியும் கோதாவில் குதித்துள்ளது. இதனால், பாஜக - ஆம் ஆத்மி இடையே கடும் கருத்து மோதல்கள் நடைபெற்று வருகின்றன.












Click it and Unblock the Notifications