”பன்வாரிலால் புரோகித் கூறியதை ஏற்க முடியாது.. ஊழல் நடந்திருந்தால் ஆளுநரே பொறுப்பு” கேபி அன்பழகன்!
தர்மபுரி: தமிழகத்தில் துணைவேந்தர் நியமனத்தில் முறைகேடு நடந்ததாக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் குற்றச்சாட்டு குறித்து அதிமுக முன்னாள் அமைச்சர் கேபி அன்பழகன் விளக்கமளித்துள்ளார்.
2017ம் ஆண்டு அக்டோபர் 6 முதல் 2021 செப்டம்பர் 17 வரை தமிழகத்தின் 14வது ஆளுநராக பணியாற்றியவர் பன்வாரிலால் புரோகித். தற்போது பஞ்சாப் மாநிலத்தின் ஆளுநராக செயல்பட்டு வருகிறார். இந்த நிலையில் பஞ்சாப் வேளாண் பல்கலைக்கழக துணைவேந்தர் நியமனம் தொடர்பாக பன்வாரிலால் புரோகித் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது பன்வாரிலால் புரோகித் கூறுகையில், நான் 4 ஆண்டுகள் தமிழ்நாட்டின் ஆளுநராக பணியாற்றினேன். அந்த அனுபவம் மிகவும் மோசமாக இருந்தது. தமிழகத்தின் ஆளுநராக இருந்தபோது சட்டப்படி தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு 27 துணைவேந்தர்களை நியமித்த அனுபவம் எனக்கு இருக்கிறது. தமிழகத்தில் துணைவேந்தர் பதவி 40-50 கோடி ரூபாய்க்கு விற்கப்படும் சூழல் இருந்தது என்று குற்றம்சாட்டியுள்ளார்.

கேபி அன்பழகன் விளக்கம்
தமிழக முன்னாள் ஆளுநராக பணியாற்றிய பன்வாரிலால் புரோகித் அதிமுக ஆட்சி மீது நேரடியாக ஊழல் குற்றச்சாட்டு வைத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக ஆட்சியில் உயர்கல்வித் துறை அமைச்சராக இருந்த கேபி அன்பழகன் தர்மபுரியில் செய்தியாளர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார்.

துணைவேந்தர் நியமனம்
அதில், தமிழக முன்னாள் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறியது போல் எந்த நிகழ்வும் இல்லை. அவர் தமிழகத்தில் ஆளுநராக இருந்தபோது, துணைவேந்தர் நியமனத்திற்கு கோடிக்கணக்கில் பணம் வாங்குகிறார்கள் என்று கூறியுள்ளார். ஒரு துணைவேந்தரை நியமனம் செய்ய அறிவிப்பு வெளியானவுடன், தேடுதல் குழு அமைக்கப்படுகிறது.

பன்வாரிலால் கூறுவதை ஏற்க முடியாது
அந்தக் குழு 10 பேரை தேர்வு செய்து ஆளுநருக்கு அனுப்புகிறது. இந்த 10 பேரில் மூன்று பேரை தேர்வு செய்து அந்த மூன்று பேரிடமும் ஆளுநர் நேர்காணல் நடத்துகிறார். இந்த நேர்காணலில் அரசுக்கு, அரசு சார்பாக பணியாற்றும் ஊழியர்களுக்கும், உயர்கல்வித்துறை எந்த தொடர்பும் இல்லை. அதேபோல் அரசுக்கோ, முதல்வர் மற்றும் உயர்கல்வி அமைச்சருக்கோ எந்த தொடர்பும் இல்லை. இதனால் தமிழகத்தில் துணைவேந்தர் பதவி ரூ.40 முதல் ரூ.50 கோடி வரை விற்கப்படுகிறது என்று பன்வாரிலால் புரோகித் சொல்வதை ஏற்றுக் கொள்ளக் கூடியது அல்ல.

தவறு நடந்தால் ஆளுநரே காரணம்
தற்போது பஞ்சாப் மாநிலத்தில் துணைவேந்தர்களை நியமிக்கும் வாய்ப்பு ஆளுநருக்கு இல்லை என்பதால் தமிழகம் மீது கூறுவது ஏற்புடையதல்ல. துணைவேந்தர் நியமனம் என்பது முழுக்க முழுக்க ஆளுநரை சார்ந்தது. அதில் எந்தவித தவறுகள் நடந்திருந்தாலும் அதற்கு முழு பொறுப்பும் ஆளுநரே. ஒருவேளை அவ்வாறு பணம் கைமாறி இருந்தால், அது ஆளுநரையே சாரும்.

தவறான தகவல்
மேலும் 27 துணைவேந்தர்களை தகுதி அடிப்படையில் நியமித்தேன் என்று அவரே சொல்கிறார். இதில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பது தெரிகிறது. அரசு தலையிட்டு பட்டியல் கொடுத்து இருந்தால், அவர் சொல்வதை ஏற்றுக்கொள்ளலாம். அவர் கூறுவது தவறான தகவல் தான் என்று தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications