அசத்தும் சோலார் மின் உற்பத்தி; அட, நம்ம பழனியா இது? - மாற்றிக் காட்டிய ஸ்டாலின் அரசு

Subscribe to Oneindia Tamil

திண்டுக்கல்: 'மின்மிகை மாநிலம்' என்ற பிரசாரத்தைக் கடந்த அதிமுக அரசு முன்னெடுத்தது. அப்படியென்றால், தமிழ்நாட்டில் மின் உற்பத்தி அதிகப்படியாக நடக்கிறது என்று அர்த்தம். உண்மையில் 'மின்மிகை' என்று கூறும் அளவுக்கு மின் உற்பத்தி எதுவும் நடைபெறவில்லை.

தனியாரிடம் மின்சாரத்தை அதிகளவில் கொள்முதல் செய்து அப்படியொரு விளம்பரத்தை அதிமுக அரசு செய்தது. இன்று அதை முழுவதுமாக மாற்றி, ஒவ்வொரு தொகுதியையும் மின் உற்பத்தி மையமாக மாற்றுவதற்கு ஸ்டாலின் தலைமையிலான அரசு வேலைகளைச் செய்து வருகிறது. அந்தவகையில், தனித்துவமான தொகுதியாக மாறியிருக்கிறது திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி தொகுதி.

 காணாமல் போன மின் அழுத்தப் பிரச்னை

காணாமல் போன மின் அழுத்தப் பிரச்னை

இதுநாள் வரையில் குறைந்த மின் அழுத்தப் பிரச்சனையால் தவித்து வந்த பழனி தொகுதி மக்கள், சிறந்த மின்சாரத்தைப் பெற்று வருகிறார்கள். எப்படி இது சாத்தியமானது?

பழனி சட்டமன்றத் தொகுதிக்குத் தேவையான மின்சார தேவையை சூரிய ஒளி மூலம் பெற்று, மக்களின் அன்றாடத் தேவையைப் பூர்த்தி செய்துள்ளது மின்சார வாரியம். அங்கு சூரிய ஒளி உற்பத்திக்கான யூனிட் செயல்பட்டு வருகிறது.

மேலும், பல இடங்களில் பழைய டிரான்ஸ்ஃபார்மர்கள் மாற்றப்பட்டு மின் விநியோகம் சீர்செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு பல கோணங்களில் புதிய உயிர் பெற்றுள்ள பழனி தொகுதியின் மின் இணைப்பு நிலையம் பற்றித்தான் இந்தக் கட்டுரை விவரிக்கிறது.

பழனியில் செயற்பொறியாளராக வேலை பார்த்து வருகிறார் பிரகாஷ் பாபு. அவர் நம்மிடம் பேசும்போது, "பழனி துணை மின்நிலையத்திலிருந்து மூன்று ஃபீடர் வழியாக மின்சாரத்தை எடுத்து மக்களுக்கு விநியோகித்து வருகிறோம். இதில் அதிக மின் பளு உள்ள மின்மாற்றிகளைக் கண்டறிந்து புதிய மின்மாற்றிகளை வைத்து அதிக அழுத்தத்தைக் குறைத்து மின்சாரத்தைப் பிரித்துக் கொடுத்து வருகிறோம். அந்தவகையில், ஆறு இடங்களில் மின்மாற்றிகளை வைத்துள்ளோம்.

இந்தப் பகுதியில் 18 ஆயிரம் சர்வீஸ்கள் உள்ளன. அதிகமான கடைகள் உள்ளதால் மின் அழுத்தம் ஏற்பட்டது. புதுநகரில் ஏறக்குறைய 170 மின் இணைப்புகள் இருந்தன. அங்கு மின் பளு 200 கிலோவாட்டுக்கு மேல் சென்றதால் அதைக் குறைப்பதற்காக புதிய உபகரணங்களைப் போட்டு சீரான மின்சாரம் செல்வதற்கு நடவடிக்கை எடுத்துள்ளோம்.

 பழனி எம்.எல்.ஏ எடுத்த நடவடிக்கை

பழனி எம்.எல்.ஏ எடுத்த நடவடிக்கை

புதுநகர் பகுதியில் மட்டும் 2 வார்டுகள் உள்ளன. இங்கு சுமார் 1500 குடும்பங்கள் வசிக்கின்றன. இதுவரை ஒரே டிரான்ஸ்ஃபார்மில் இருந்து மின்சாரம் வழங்கப்பட்டு வந்தது. குடியிருப்புகள் அதிகமானதால், அடிக்கடி லோ ஓல்டேஜ் பிரச்னை இருந்துவந்தது. இதைப் பற்றி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி.செந்தில்குமாரிடம் முறையிட்டோம். அவரும் துரிதமாக நடவடிக்கை எடுத்து தனியாக 63 கே.வி அளவுக்குத் தனி மின்மாற்றி அமைத்துக் கொடுத்து மின்சாரத்தைச் சீரான அளவில் செல்ல வழி ஏற்படுத்திக் கொடுத்துள்ளார்'' என்கிறார்.

தொடர்ந்து நம்மிடம் பேசிய பிரகாஷ் பாபு, ''இந்த மாவட்டத்தில் சிறந்த சுற்றுலாத்தலமாக பழனி மலைக்கோயிலும் கொடைக்கானல் மலைப் பிரதேசமும் உள்ளது. அந்தப் பகுதிகளில் உள்ள மின் தேவையைச் சரியாக வழங்குவதற்கான நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதற்காக பழனி பகுதியில் மட்டும் 52 இடங்களில் புதிய மின்மாற்றிகளை வைத்து, மின் தடை ஏற்படுவதை வெகுவாக குறைத்துள்ளோம்.

சுமார் 13 கி.மீட்டர் உயர்அழுத்த மின் பாதையுள்ள மின் கம்பிகளுக்குப் பதிலாக, புதிய அதிக திறன் கொண்ட மின் கம்பிகளைப் போட்டுள்ளோம். இதனால் மின் விநியோகத்தின் தரம் உயர்ந்துள்ளது. இந்தக் கம்பிகளை மாற்றியதால் இதுவரை நடைபெற்று வந்த மின் உடைப்பு மற்றும் விபத்துகள் தடுக்கப்பட்டுள்ளன.

பொதுவாக, பழனியில் காற்றின் விசை அதிகம். இங்கே அதிக வனப்பகுதியும் தென்னந்தோப்புகளும் உள்ளன. அதுபோன்ற பகுதிகளில் இடையூறாக இருந்துவந்த மரக்கிளைகளை வெட்டி, மின் தடைகளைச் சரிசெய்துள்ளோம். மரக்கிளைகள் மூலம் தடைபட்டுவந்த பழைய மாதிரியான பிரச்னைகளை முற்றாக சரிசெய்துள்ளோம்.

பழனிக்கு உட்பட்ட பகுதிகளில் மட்டும் சுமார் 62 மெகாவாட் மின்தேவை இருந்து வருகிறது. அதில், மொத்தம் 40 மெகாவாட் மின் உற்பத்திக்காக சூரிய ஒளி மின் கட்டமைப்பை உருவாக்கி உள்ளோம். அதற்கான உற்பத்தி பழனியிலேயே நடைபெறுகிறது.

இதனால் மின் இழப்பு என்பது முற்றிலுமாக குறைக்கப்பட்டுள்ளது. அதேபோல் 10 மெகாவாட் அளவுக்கு சூரிய ஒளி கட்டமைப்பை உருவாக்கி பாப்பம்பட்டி துணை மின்நிலையத்துடன் இணைத்துள்ளோம். வரும் காலங்களில் மேலும் 5 மெகா வாட் சூரிய ஒளி மின் உற்பத்தியை நிறுவத் திட்டமிட்டுள்ளோம்.

 இது பழைய பழனி இல்லை

இது பழைய பழனி இல்லை

பழனியில் 400 கி.மீட்டர் உயர் அழுத்த மின் பாதையும் 680 கி.மீட்டர் தாழ்வு அழுத்த மின் பாதையும் உள்ளது. அதில் தற்போதுவரை மிகப் பழைமையான மின்கம்பி பாதைகளை மாற்றி அமைத்துவிட்டோம். விரைவில் வேறு கம்பிகளையும் மாற்ற உள்ளோம். இதனால் மின் விநியோகத்தின் தரத்தை உயர்த்தியுள்ளதுடன், திடீர் திடீரென்று கம்பிகள் அறுந்து விழுந்து ஏற்படும் மின் விபத்துகளையும் தடுத்துள்ளோம்" என்கிறார்.

''கடந்த பத்து ஆண்டுகாலமாக பழனியிலிருந்த மின் பிரச்சினைகள் அனைத்தும் முற்றிலுமாக தீர்க்கப்பட்டுவிட்டன'' என்கின்றனர், இப்பகுதி மக்கள். பழனி, திண்டுக்கல் ஒட்டிய பகுதிகளில் நீண்டகாலம் இருந்து வந்த லோ ஓல்டேஜ் பிரச்னையும் முற்றிலும் தீர்க்கப்பட்டுவிட்டது.

இவ்வளவு வருடங்களாக இப்பகுதி மக்கள் டிவி, மிக்சி, வாஷிங்மிஷின் ஆகிய மின்னணு சாதனங்களைப் பயன்படுத்த முடியாத அளவுக்கு குறைந்த மின் அழுத்தம் நிலவி வந்துள்ளது. ''லோ ஓல்டேஜ் பிரச்னையை சரிசெய்து, மக்களின் கோரிக்கையை நிறைவேற்றித் தந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி'' என இப்பகுதி மக்கள் ஒருமித்த குரலில் கூறுகின்றனர்.

"கடந்த ஒரு வருடத்தில் இந்தப் பகுதியில் நிலவிவந்த தலையாய பிரச்னையான லோ ஓல்டேஜ் மற்றும் மின் தடையை இல்லாமல் செய்துள்ளோம். அதற்காக புதிய மின்மாற்றிகளை நிறுவியுள்ளோம்'' என்கிறார், உதவிப் பொறியாளர் ராஜா.

தொடர்ந்து நம்மிடம் அவர் பேசுகையில், ''விவசாயிகளுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வழங்கியுள்ள 1 லட்சம் இலவச மின் இணைப்புகள் திட்டத்தின்கீழ் எங்கள் போதுபட்டி பகுதிக்கு மட்டும் 110 மின் இணைப்புகளை வழங்கியுள்ளோம். அதையொட்டி 50 மின் இணைப்புகளை அதிகப்படுத்தி முதலமைச்சர் வழங்கியதில் எங்கள் பகுதிக்கு 65 இணைப்புகள் கிடைத்துள்ளன. அதையும் வழங்கி வருகிறோம்'' என்கிறார்.

 'மின்னகம்' ஏற்படுத்திய மாற்றம்

'மின்னகம்' ஏற்படுத்திய மாற்றம்

''மின்வாரியத்தின் 'மின்னகம்' புகார் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. அது பயனாளிகளுக்கு மட்டும் இல்லை, எங்களைப் போன்ற மின் ஊழியர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது. இதன்மூலம் வரும் புகார்களைப் பெற்று எங்களுக்குக் குறிப்பிட்ட லோகேஷனை வாட்ஸ் அப்பில் அனுப்பிவிடுகிறார்கள்.

அந்தவகையில், சரியான முகவரி கிடைப்பதால் பழனி வட்டாரத்தில் எந்தப் பகுதியாக இருந்தாலும் உடனடியாக தடையைச் சரி செய்து கொடுக்கிறோம். இதனால் அலைச்சல் முற்றிலும் தவிர்க்கப்பட்டுள்ளது. பாரப்பட்டி பகுதியில்கூட சமீபத்தில் ஒரு புகார் வந்தது. அதனை சில மணிநேரத்தில் சரி செய்து கொடுத்துள்ளோம்" என்கிறார் ராஜா.

ஆயக்குடி உதவி மின் பொறியாளராக பணிபுரிந்து வரும் செல்லச்சடையாண்டி நம்மிடம் பேசுகையில், "எங்கள் பகுதியில் மட்டும் 14 ஆயிரம் மின் இணைப்புகள் உள்ளன. இதில் புது ஆயக்குடியில் லோ ஓல்டேஜ் புகார்கள் வந்தன. அதனைச் சரி செய்ய 63 கேவி டிரான்ஸ்ஃபார்மர் போட்டு ஓல்டேஜ் பிரச்னையை சரிசெய்து கொடுத்தோம்.

விவசாயத்துக்காகவே 5 டிரான்ஸ்ஃபார்மர் புதிதாகப் போட்டுக் கொடுத்துள்ளோம். முன்பு ஆயக்குடியில் மட்டும் 40 விவசாயிகளுக்கு இலவச மின் இணைப்பு வழங்கியிருந்தோம். இப்போது புதிதாக 20 இணைப்புகளைக் கொடுத்துள்ளோம். மேலும் 10 இணைப்புகளை வழங்க இருக்கிறோம்" என்கிறார்.

 பத்து வருடமாகக் கிடைக்காத இணைப்பு

பத்து வருடமாகக் கிடைக்காத இணைப்பு

இதே போதுபட்டி பகுதியில் பத்து ஏக்கர் நிலம் வைத்துள்ளார், இளம் விவசாயி குமரேசன். அதில் மக்காச்சோளம், உளுந்து, பாசிப்பயறு ஆகியவற்றைப் பயிரிட்டுள்ளார். அதில் கிணறு மூலம் கிடைத்த நீரை வைத்துத்தான் விவசாயம் செய்து வந்தார். ஆனால், அது போதுமானதாக இல்லை. மின்வாரியத்தில் புதிய இணைப்புக் கேட்டு கடந்த எட்டு வருடங்களாகக் காத்திருந்தார். ஆனால், இணைப்பு கிடைக்கவில்லை.

"மின் இணைப்புக்காக 2008 ஆம் ஆண்டு விண்ணப்பித்திருந்தேன். திமுக அரசு வந்த பிறகு இலவச மின் இணைப்பு கிடைத்துள்ளது. மின் இணைப்பு பற்றிய தகவல் உத்தரவு கடிதமாகவும் வந்தது. என்னை போனில் அழைத்தும் நேரில் வந்தும் சொன்னார்கள். நாங்கள் தேடி அலைந்த காலம் போய், வீடு வந்து தகவல் தரும் ஆட்சியாக இந்த ஆட்சி உள்ளது" என்கிறார் குமரேசன்.

"பழனியில் பல தெருக்கள் குறுகலானவை. அங்கு ட்ரான்ஸ்ஃபார்மர்களை வைக்க இரண்டு போஸ்டுகளை போட வேண்டும். அதற்குக் குறைந்தது 11 அடி இடம் தேவைப்படும். இடநெருக்கடியால் பெரிதும் தவித்தோம். இதனை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜியின் கவனத்துக்குக் கொண்டு சென்றோம்.

அவர் ஒரே போஸ்ட்டில் டிரான்ஸ்ஃபார்மர் அமைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இதனால், வேலைகள் வேகம் எடுத்தன. உடனடியாக மின்மாற்றிகள் மாற்றப்பட்டன. இதனால் பல ஆண்டுகளாக இருந்து வந்த குறைந்த மின் அழுத்தப் பிரச்னை முற்றிலும் நீக்கப்பட்டுவிட்டது" என்கின்றனர், பழனியில் உள்ள மின்வாரிய அதிகாரிகள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+