திண்டுக்கல் அருகே காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட 6 பேரை துணிச்சலுடன் மீட்ட போலீசார்!
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே காட்டாற்று வெள்ளத்தில் சிக்கிய காரில் இருந்த 6 பேரை, பொதுமக்களின் உதவியுடன் காவல்துறையினர் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக போராடி பத்திரமாக மீட்டனர்.
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே உள்ள வள்ளிபட்டி பகுதியில் நேற்று மாலை பலத்த மழை பெய்ததால், அந்தப் பகுதியில் உள்ள தரைப்பாலத்தில் காட்டாற்று வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது வெள்ளோடு பகுதிக்கு வேலைக்கு சென்று விட்டு சண்முகம் என்பவர் பாலசுப்ரமணி, பாலகிருஷ்ணன், பாண்டியன், செல்வராஜ், மணிகுமார் ஆகியோருடன் ஒரு காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். காட்டாற்று வெள்ளத்தை பொருட்படுத்தாமல் தரைப்பாலம் வழியாக சண்முகம் காரில் செல்ல முயன்றார். அப்போது சிறப்பு எஸ்ஐ சந்திரசேகரன் தடுத்தும் அவர்களின் பேச்சைக் கேட்காமல் காட்டாற்று வெள்ளத்துக்குள் இறங்கி காரை சண்முகம் ஓட்டி சென்றுள்ளார்.
காவல்துறையினர் தடுத்து எச்சரித்தும் அவர்கள் காரை ஓட்டிச்சென்றதால், கார் தரைப்பாலத்திலிருந்து தண்ணீருக்குள் இழுத்துச் செல்லப்பட்டது. இதனால் காரில் இருந்தவர்கள் பயத்தில் அலறினர். அதிர்ஷ்டவசமாக அங்கிருந்த தடுப்புக்கம்பி ஒன்றில் கார் சிக்கியதால், வெள்ளத்தில் அடித்துச்செல்லப்படாமல் கார் அங்கேயே நின்றது.
அதனைத் தொடர்ந்து காரில் இருந்தவர்கள் வெளியே வந்து காரின் மீது ஏறி அமர்ந்து உயிர்தப்பினர். இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த கூம்பூர் காவல் சிறப்பு சார்பு ஆய்வாளர் சந்திரசேகர், அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ராஜபாண்டி, வினோத்குமார் மற்றும் ஊர்மக்கள் சேர்ந்து ஒரு டிராக்டரை கொண்டு சென்று கயிறு கட்டி தங்கள் உயிரை பணயம் வைத்து காட்டாற்று வெள்ளத்தில் இறங்கி 6 பேரையும் பத்திரமாக காப்பாற்றி வெளியே கொண்டுவந்தனர். 2 மணிநேரம் தண்ணீருக்குள் தத்தளித்த 6 பேரும் மீட்கப்பட்டதால், போலீசாருக்கும், உள்ளூர் மக்களுக்கும் நன்றி தெரிவித்து கொண்டனர்.