காங்கிரஸுக்கு கல்தா கொடுத்த மூத்த தலைகள்! தட்டித் தூக்கிய ’தாமரை’! ஆப்ரேசன் ‘இமாச்சல்’.. உற்சாக பாஜக
சிம்லா : இமாச்சலப் பிரதேச சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் அம்மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்கள் கும்பலாக திடீரென பாஜகவுக்கு தாவி இருப்பது தேர்தல் நேரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் காங்கிரஸ் தலைமையும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது.
பாஜக ஆட்சி நடந்து வரும் இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் சட்டசபை தேர்தல் ஆனது ஒரே கட்டமாக நடைபெற இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் சார்பில் இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
தேர்தலுக்கு இன்னும் சில நாட்களே இருக்கும் நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் தேர்தல் பிரச்சாரம் சூடு பிடித்திருக்கிறது வீடு வீடாகச் சென்று வாக்காளர்களிடம் வாக்குகளை சேகரித்து வருகின்றனர் பாஜக காங்கிரஸ் கட்சி வேட்பாளர்கள்.
அட! அண்ணாமலையை புறக்கணிக்கலை.. இமாச்சல பிரதேச தேர்தலில் வானதி சீனிவாசன் சூறாவளி பிரசாரம்!
இமாச்சல பிரதேசம்
குறிப்பாக ஆளும் கட்சியான பாஜக ஆட்சியை மீண்டும் தக்க வைத்துக் கொள்வதில் தீவிரம் காட்டி வருகிறது. பாஜக தேசிய தலைவர்கள் பலரும் இமாச்சலப் பிரதேசத்தில் முகாமிட்டு சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். அது மட்டும் அல்லாமல் பிரதமர் நரேந்திர மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரும் இமாச்சலப் பிரதேசத்தில் சுற்றுப்பயணம் மூலம் பிரச்சாரம் மேற்கொண்டுள்ளனர்.
பாஜக தீவிரம்
அதே நேரத்தில் இழந்த ஆட்சியை மீண்டும் எப்படியாவது கைப்பற்றி விட வேண்டும் என காங்கிரஸ் கட்சியும் களத்தில் இறங்கி பணியாற்றி வருகிறது. நாடாளுமன்றத் தேர்தலுக்கு இமாச்சலப் பிரதேச தேர்தல் அச்சாரமாக இருப்பதால் புதிய தலைமை மற்றும் ராகுல் காந்தி பிரியங்கா காந்தியின் செல்வாக்கு ஆகியவற்றை பயன்படுத்த திட்டமிட்டு இருக்கிறது. அந்த கட்சியின் இளம் தலைவர்களில் ஒருவரான பிரியங்கா தொடர்ந்து அங்கு முகாமிட்டு பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்.
கட்சி தாவல்
ராகுல் காந்தி உள்ளிட்ட தலைவர்களும் பிரச்சாரம் மேற்கொள்ள இருக்கும் நிலையில் மூத்த தலைவர்களும் காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். வாக்குப்பதிவுக்கு இன்னும் சில தினங்களில் இருக்கும் நிலையில் தற்போது காங்கிரஸ் தலைமையை தர்ம சங்கடத்தில் ஆழ்த்தும் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றிருக்கிறது. இமாச்சல பிரதேச மாநில காங்கிரஸ் கமிட்டி முன்னாள் பொதுச் செயலாளர் உள்ளிட்ட 26 பேர் அக்கட்சியில் இருந்து விலகி திடீரென பாஜகவில் இணைந்துள்ளனர்.
காங். விமர்சனம்
பாஜக தலைவர் முன்னிலையில் இந்த சந்திப்பு நடைபெற்று இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியினரின் இந்த தாவலானது பெரும் விவாதத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தலில் எதிர்க்கட்சிகளை மன உளைச்சலில் ஆழ்த்தும் வகையில் ஆள் பிடிக்கும் வேலைகளில் ஈடுபட்டு வருவதாக பாஜகவை காங்கிரஸ் கட்சி கடுமையாக விமர்சித்துள்ள நிலையில் காங்கிரஸ் கட்சி தலைமை மீது அதிருப்தி கொண்ட தொண்டர்கள் பாஜகவுக்கு வருவது இயல்பு தான் என கூறுகின்றனர் இமாச்சலப் பிரதேச மாநில பாஜகவினர்.