வீடுகள் குலுங்கியதா? திண்டுக்கல்லில் நில அதிர்வு இல்லை..வான் இயற்பியல் ஆராய்ச்சி மையம் நிம்மதி தகவல்
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கீரனூர் கிராமத்தில் நில அதிர்வுகளுக்கான பதிவுகள் இல்லை எனவும் மேலும் டெல்லி வான்இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் நில அதிர்வு பதிவுகள் இல்லை என கொடைக்கானல் வான்இயற்பியல் ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள கள்ளிமந்தயம் ஊராட்சிக்குட்பட்ட கொன்ரங்கி கீரனூர் பகுதியில் நள்ளிரவில் நில அதிர்வு ,நிலநடுக்கம் ஏற்பட்டதாக மக்கள் பீதி அடைந்தனர்.
பல வீடுகளில் ஓடுகள் உடைந்து விழுந்ததாகவும் நில அதிர்வு போன்ற சத்தம் கேட்டதாகவும் மக்கள் பீதி அடைந்ததால் திண்டுக்கல் மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது.

கடுமையான சத்தத்துடன் அதிர்வு
அதிகாலை 2 மணிமுதல் 3 வரையில் அடுத்தடுத்து 3 முறை கடுமையான சத்தத்துடன் நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. இதனால், 10க்கும் மேற்பட்ட வீடுகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும், வீட்டின் ஓடுகள் உடைந்து கீழே விழுந்தன. இதனால், பீதி அடைந்த பொதுமக்கள் அனைவரும் சாலையில் தஞ்சமடைந்தனர். சம்பவ இடத்திற்கு ஒட்டன்சத்திரம் வட்டாட்சியர் மற்றும் காவல்துறையினர் விரைந்துள்ளனர்.

அதிகாரிகள் விசாரணை
சுற்றுவட்டார பகுதிகளில் பாறைகளுக்கு வெடிவைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது. மேலும், சேதமடைந்த வீடுகள் குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். புவியியல் தொடர்பான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து கொண்டிருக்கின்றனர். அவர்கள் வந்து இது பற்றி நேரடியாக ஆய்வு செய்த பின்பே இந்த சத்தத்திற்கும் இந்த விரிசல் ஏற்பட்டதற்கான காரணம் தெரியவரும் நிலை ஏற்பட்டுள்ளது.

வெடிகளால் நில அதிர்வு
நில அதிர்வு குறித்து சமூக வலைதளங்களிலும், பல்வேறு ஊடகங்களிலும் செய்திகள் வெளியான நிலையில், அதிர்வுக்கான காரணம் என்ன என்பது குறித்து மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்தது. குறிப்பாக ஒட்டன்சத்திரம் பகுதிகளில் குவாரிகள் செயல்பட்டு வருவதால் அங்கு வைக்கப்பட்ட அதிகபட்ச திறன் கொண்ட வெடிகளால் அதிர்வு உணரப்பட்டதா? அல்லது திண்டுக்கல் கடந்த சில மாதங்களாக உலா வரும் போர் விமானங்களால் ஏற்பட்ட சோனார் பூம் எஃபெக்டா எனவும் சந்தேகம் நிலவியது.

பதிவுகள் இல்லை
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் வட்டம் கீரனூர் கிராமத்தில் நில அதிர்வுகளுக்கான பதிவுகள் இல்லை எனவும், மேலும் டெல்லி வான்இயற்பியல் ஆராய்ச்சி நிறுவனத்திலும் நில அதிர்வு பதிவுகள் இல்லை என கொடைக்கானல் வான்இயற்பியல் ஆராய்ச்சி மைய தகவல் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே தகவலை மாவட்ட நிர்வாகமும் உறுதிப்படுத்தியுள்ள நிலையில், அதிர்வு மற்றும் வீடுகளில் விரிசல் விழுந்ததற்கு காரணம் தெரியாமல் அப்பகுதி மக்கள் குழப்பத்தில் ஆழ்ந்துள்ளனர்.












Click it and Unblock the Notifications