ஆட்டைய போட்டது 25 பவுன்.. தடயத்தை மறைக்க வீட்டைக் கொளுத்திய கொள்ளையர்கள்
திண்டுக்கல்: திண்டுக்கல் அருகே தலைமை தபால் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியரின் வீட்டில் 25 சவரன் நகைகளை கொள்ளையடித்த கொள்ளையர்கள் தடயங்களை மறைப்பதாக எண்ணி வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் கொள்ளையர்களை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
Recommended Video
திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது திருநகர் .இப்பகுதியில் வசித்து வரும் மணிமாறன் தலைமை தபால் நிலையத்தில் உதவி அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் மணிமாறன் சொந்த வேலையாக குடும்பத்துடன் வெளியில் சென்றுள்ளார் இதனை நோட்டமிட்ட மர்மநபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்துள்ளனர். பல இடங்களில் தேடுதல் வேட்டை நடத்திய அவர்கள், வீட்டின் பூஜையறையில் இருந்த பீரோவை உடைத்து அதில் இருந்த 25 பவுன் நகையை கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையடித்த வீட்டுக்கு தீ
பின்னர் அங்கிருந்து தப்ப நினைத்த கொள்ளையர்கள், கொள்ளையடிக்கப்பட்ட தடயங்களை அழிப்பதற்காகவும், காவல்துறையினரின் மோப்ப நாய்க்கு தெரியாமல் இருப்பதற்காகவும் வீட்டினுள்ளே இருந்த பீரோவில் இருந்த பத்திரங்கள், சான்றிதழ்கள், பட்டுப்புடவைகள், கணினி மற்றும் கைபேசி உள்ளிட்ட பொருட்களை இரண்டு படுக்கை அறைகளில் பரவலாக வைத்து தீ வைத்து விட்டு சென்றுள்ளனர். இதன் மதிப்பு 10 லட்ச ரூபாய் இருக்கலாமென மணிமாறன் பின்னர் போலீசாரிடம் தெரிவித்தார்.

தீ விபத்து என தகவல்
நள்ளிரவில் வீட்டில் இருந்து புகை வந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்து அருகிலிருந்தோர் இந்த சம்பவம் தீயணைப்பு துறையினர் மற்றும் நகர் வடக்கு காவல் நிலைய போலீசாருக்கு தகவல் அளித்தனர். முதலில் தீ விபத்து என நினைத்து போலீசார் தீயணைப்பு துறையினர் உதவியுடன் தீயை அணைத்து மணிமாறனுக்கு தகவல் அளித்தனர். மணிமாறன் மற்றும் அவரது குடும்பத்தினர் தீயை அணைத்த பிறகு உள்ளே சென்று பார்த்தபோது தான் வீட்டின் பூட்டுகள் மற்றும் பீரோ உடைக்கப்பட்டு இருப்பதும் வீட்டில் இருந்த தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டு இருப்பதும் தெரியவந்தது. மேலும் தடையங்களை அழிப்பதற்காக துணிகள் உள்ளிட்டவற்றை எரித்ததும் தெரியவந்தது.

போலீசார் விசாரணை
கொள்ளை மற்றும் வீட்டிற்கு தீ வைத்த சம்பவம் குறித்து வீட்டின் உரிமையாளரான மணிமாறன் , திண்டுக்கல் வடக்கு காவல் நிலைய ஆய்வாளர் உலகநாதனிடம் புகார் அளித்தார். புகார் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொள்ளையர்களை கண்டு பிடிக்கும் விதமாக திண்டுக்கல் காவல்துறையினரின் சிறப்பு பயிற்சி பெற்ற மோப்பநாயான ரூபி வரவழைக்கப்பட்டு கொள்ளையர்களை கண்டுபிடிக்கும் முயற்சி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

பொதுமக்கள் அச்சம்
மேலும் வீட்டின் வெளிப்புறம் மற்றும் கேட்டுகளில் கைரேகைகள் ஏதும் கிடைக்கிறதா என கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்கள் தடயங்களை சேகரிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அப்பகுதிகளில் உள்ள சிசிடிவி காட்சிகளின் அடிப்படையிலும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொள்ளை நடந்த திருநகர் திண்டுக்கல் நகரின் மையப் பகுதியாக உள்ளதோடு அப்பகுதியில் சற்று அருகில் தான் காவல் நிலையமும் உள்ளது. இந்நிலையில் அதிக பாதுகாப்பு நிறைந்த பகுதியில் கொள்ளையடித்த தோடு வீட்டிற்கும் கொள்ளைகள் தீ வைத்த சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் இடையே பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications