அமைச்சர் ஆளு நிலத்தை பிடிங்கிட்டாரு.. கலெக்டர் கார் முன் பாய்ந்த பெண்! ஜஸ்ட் மிஸ்! பரபர திண்டுக்கல்!
திண்டுக்கல் : தங்களது வீட்டை அபகரிக்க நினைக்கும் திமுக பிரமுகரின் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினால் மாவட்ட ஆட்சியரின் காரையும் மாவட்ட வருவாய் அலுவலரின் காரையும் வழிமறித்த பெண்களால் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
திண்டுக்கல் பேகம்பூர் அந்தோணியார் தெருவில் வசித்து வருபவர் சலேத் நாதன். இவரது மனைவி ரோணிக்கம் இவர்களுக்கு இரண்டு பெண்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணம் ஆகிவிட்டது.
கடந்த 2003 ஆம் ஆண்டு சலேத்நாதன் அந்தோணியார் தெருவில் 704 சதுர அடி நிலத்தை விலைக்கு வாங்கி அதில் சிறியதாக வீடு கட்டி வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்பு சலேத்நாதன் இறந்து விட்டார்.

நில மோசடி
இதனிடையே அதே பகுதியைச் சேர்ந்த மஹபூப்சுபானியின் மனைவி அஸ்ரப்நிஷா என்பவர் போலியாக பத்திரம் தயார் செய்து அதனை வைத்து திண்டுக்கல் மேற்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் 2017 ஆம் ஆண்டு பட்டா வாங்கியுள்ளார். அஷ்ரப் நிஷாவுக்கு ஆதரவாக கூட்டுறவு துறை அமைச்சரின் உதவியாளர் எனக் கூறப்படும் அம்பை ரவி என்பவர் தங்களது வீட்டில் பாதையையும் ஆக்கிரமித்ததுடன் தங்களது வீட்டையும் காலி செய்ய மிரட்டி வருகிறார் என கடந்த மாதம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலகத்தில் தீக்குளிக்க முயற்சி செய்தார்.

பெரும் பரபரப்பு
மாவட்ட காவல்துறை கண்காணிப்பு அலுவலர் பாஸ்கரன் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததின் பெயரில் அவர்கள் கலைந்து சென்றனர். இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் ஏற்கனவே இருமுறை புகார் அளிக்கப்பட்டதாக ரோணிக்கம் தெரிவித்தார். இதனிடையே இதுவரை அரசு அதிகாரியிடம் கொடுத்த புகார்களுக்கு எந்த விதமான நடவடிக்கையும் எடுக்காத காரணத்தினால் தங்களுக்கு அரசாங்கம் வழங்கிய அனைத்து அரசு ஆவணங்களையும் ஒப்படைக்க வந்தனர்.

காரை மறித்த பெண்கள்
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் விசாகனின் காரை ரோணிக்கத்தின் மூத்த மகளான நதியாவும், இளைய மகள் சௌமியா மாவட்ட வருவாய் அலுவலர் லதா அவர்களின் காரையும் வழிமறித்தனர். குறிப்பாக மாவட்ட ஆட்சியர் கார் வந்தபோது ரோணிக்கம் திடீரென மறித்தார், ஆனால் ஓட்டுனர் லாவகமாக காரை திருப்பியதால் நூலிழையில் அவர் உயிர் தப்பினார். அப்போது பின்னால் வந்த மற்றொரு காரை அப்பெண் மறித்தார்.

ஆட்சியர் விசாரணை
இதனால் அதிர்ச்சி அடைந்த மாவட்ட ஆட்சியர் விசாகன், காரில் இருந்து இறங்கி நதியா மற்றும் அவரின் குடும்பத்தினரிடம் இது குறித்து விசாரணை மேற்கொண்டார். மேலும் கோட்டாட்சியரை உடனடியாக வரவழைத்து இவர்களின் பிரச்சனையை முழுமையாக கேட்டறிந்து தீர்வு காணும் படி கூறினார். மாவட்ட ஆட்சியரின் கார் மற்றும் வருவாய் அலுவரின் காரை பெண்கள் மறித்ததால் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் சிறிது நேரம் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications