ஈ, கரப்பான் எல்லாம் அந்த காலம்.. மசால் வடைக்குள் சுருண்டு கிடந்த சுண்டெலி.. திண்டுக்கல்லில் 'பகீர்'
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் ஒரு டீக்கடையில் விற்கப்பட்ட மசால் வடைக்குள் சுண்டெலி இருந்த சம்பவம்தான் இன்று தமிழகத்தையும் தாண்டி பெரும் பேசுபொருளாக மாறியிருக்கிறது.
உணவு தரத்தை சரிபார்ப்பதற்காகவே தனியாக ஒரு துறை இருக்கும் போதிலும், இதுபோன்ற சம்பவங்கள் தொடர்வது அரசின் மீது மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்துவதாக பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.
திண்டுக்கல்லில் சில வாரங்களுக்கு முன்புதான் இதுபோன்ற ஒரு சம்பவம் நடந்த நிலையில், தற்போது மீண்டும் இப்படியொரு சுகாதாரமற்ற நிகழ்வு நடைபெறுவது அனைவரையும் முகம் சுளிக்க வைத்துள்ளது.

சகஜமாகி போன தரமற்ற உணவுகள்
ஒருகாலத்தில், டீ, காபி டம்ளரில் ஈ, கொசு விழுந்து கிடந்தாலே மிகப்பெரிய கலவரமாக மாறிவிடும். ஆனால், இன்றோ உணவில் கரப்பான் பூச்சி இருந்தால் கூட, "ஓரமா எடுத்து வெச்சிட்டு சாப்பிடுப்பா" என சொல்லும் அளவுக்கு தான் ஓட்டல்களில் சுகாதாரம் உள்ளது. தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் சில மாதங்களுக்கு முன்பு உணவுத் துறை அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வில், பொதுமக்களுக்கு எவ்வுளவு தரமற்ற வகையில் உணவு சமைத்து வழங்கப்படுகிறது என்பது தெரியவந்தது. இதில் பல ஓட்டல்களுக்கு சீல் வைக்கப்பட்டன. சிலவற்றுக்கு அபராதம் விதிக்கப்பட்டன.

உளுந்த வடைக்குள் பல்லி
உணவுத் துறையினரின் இத்தனை சோதனைகளை மேற்கொண்ட போதிலும், இன்னும் பல ஓட்டல்கள் மற்றும் டீக்கடைகளில் சுகாதாரம் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. உதாரணமாக, திண்டுக்கல் ரயில் நிலையத்திலேயே சில வாரங்களுக்கு முன்பு இப்படியொரு சம்பவம் நடைபெற்றது. அங்கு விற்கப்பட்ட உளுந்த வடைக்குள் பெரிய பல்லி ஒன்றே செத்துக் கிடந்தது. இந்த அதிர்ச்சியில் இருந்தே திண்டுக்கள் மக்கள் இன்னும் மீளாத நிலையில், அவர்களை மீண்டும் பீதியில் ஆழ்த்தி இருக்கிறது மற்றொரு சம்பவம்.

மசால் வடைக்குள் சுண்டெலி
திண்டுக்கல் மாவட்டம் சின்னாளப்பட்டி பூஞ்சோலை பகுதியில் டீக்கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தக் கடையில் நேற்று பூஞ்சோலை பகுதியைச் சேர்ந்த 10 வயது சிறுமி 3 மசால் வடைகளை பார்சலாக வாங்கி இருக்கிறாள். பின்னர், வீட்டுக்கு சென்றதும் அந்த வடைகளை சாப்பிடும் ஆர்வத்தில் ஆசையாக கையால் பிய்த்துள்ளார். அப்போது அந்த வடைக்குள் கருகிய நிலையில் முழு சுண்டெலி இறந்து கிடந்துள்ளது. இதை பார்த்ததும் பயத்தில் அந்த சிறுமி அலறி இருக்கிறாள். இதையடுத்து, அங்கு வந்த அவரது பெற்றோரும் வடைக்குள் சுண்டெலி கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், அந்த டீக்கடைக்கு சென்று இதுகுறித்து அவர்கள் கேட்டுள்ளனர்.

ச்சே.. எவ்ளோ பெரிய அபராதம்?
அப்போது அங்கிருந்தவர்கள், தெரியாமல் இப்படியொரு சம்பவம் நடந்துவிட்டதாகவும், விஷயத்தை யாரிடமும் சொல்ல வேண்டாம் எனவும் கூறியுள்ளனர். ஆனால், அவர்கள் அந்த வடைக்குள் சுண்டெலி கிடந்ததை செல்போனில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டனர். விஷயம் பூதாகரமானதை அடுத்து, ஆத்தூர் தாலுகா உணவு பாதுகாப்பு அதிகாரி ஜாபர் சாதி தலைமையிலான குழுவினர் அந்த டீக்கடைக்கு சென்று ஆய்வு நடத்தினர். அப்போது தரமற்ற சமையல் எண்ணெய், திறந்தவெளியில் வைத்து பலகாரங்கள் தயாரிப்பது போன்ற சுகாதாரமற்ற செயல்களில் அவர்கள் ஈடுபடுவது தெரியவந்தது. இதையடுத்து, அந்த டீக்கடைக்கு ரூ.3,000 விதிக்கப்பட்டது. ஒரு வடைக்குள் சுண்டெலி இருப்பதை கூட கவனிக்காமல் கொடுத்த டீக்கடைக்கு ரூ.3,000 மட்டும் அபராதம் விதிக்கப்பட்டால், எப்படி அவர்களுக்கும், மற்ற கடைக்காரர்களுக்கும் பயம் வரும் என பொதுமக்கள் கேள்வியெழுப்பியுள்ளனர்.












Click it and Unblock the Notifications