வெடித்துச் சீறிய தோட்டா.. மயங்கிய இளைஞர்! 3 ஆண்டில் 3 சம்பவங்கள்! திண்டுக்கல் துப்பாக்கி கலாச்சாரம்!
திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே தோட்டத்து காவலாளி ஒருவர் துப்பாக்கியால் சுடப்பட்டு நெஞ்சில் குண்டு பாய்ந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும், மாவட்டத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதாக, கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது மானூர். இங்கு ஆற்றுப்பாலம் அருகே உள்ள தனியார் தோட்டத்தில் காவலாளியாக பணிபுரிந்து வருபவர் கார்த்தி . கும்பகோணத்தை சேர்ந்த இவர் தோட்டத்தில் தங்கியிருந்து காவலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் இன்று வழக்கம்போல காவல்பணியில் ஈடுபட்டிருந்த போது நள்ளிரவு 12மணியளவில் துப்பாக்கியால் சுடும் சத்தம் கேட்டது. இதில் திடீரென கார்த்தியின் நெஞ்சில் ஒரு குண்டு பாய்ந்தது. இதில் காயமடைந்த கார்த்தி கீழே சரிந்தார்.
அர்பன் நக்சல்களுக்கு மோடி வார்னிங்! துப்பாக்கி, பேனா தூண்டிவிடும் நக்சல் தீவிரவாதத்தை அழிப்போம்!
பழனியில் ஷாக்
இதனையடுத்து தோட்டத்தில் இருந்த சிலர் கார்த்தியை நெஞ்சில் குண்டு பாய்ந்து ஆபத்தான நிலையில் பழனி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். கார்த்தியின் நெஞ்சில் பட்ட குண்டை பழனி அரசு மருத்துவமனையில் அகற்றமுடியாமல் மேல்சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவலறிந்த பழனி தாலுகா போலீசார் கார்த்தியை சுட்ட இடத்தில் கீழே விழுந்த துப்பாக்கி குண்டுகளை சேகரித்து வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உடல்நிலை கவலைக்கிடம்
இதுகுறித்து போலீசாரிடம் தகவல் கேட்டபோது எவ்வித தகவலையும் தர மறுத்து விட்டனர். காவலாளி கார்த்தியை துப்பாக்கியால் சுட்டவர்கள் யார்? எதற்காக சுட்டனர்? வேட்டையாட வந்த நபர்கள் சுட்டார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த கார்த்தியின் உடல்நிலை கவலைக்கிடமாக தொடர்ந்து உள்ளதால் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
பழனி துப்பாக்கிச் சூடு
இந்நிலையில் திண்டுக்கல் மாவட்டத்தில் துப்பாக்கி கலாச்சாரம் அதிகரித்து வருவதாக, கள்ளத்துப்பாக்கி புழக்கம் அதிகரித்துள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் மட்டும் 3 ஆண்டுகளில் 3 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக கூறுகின்றனர். திண்டுக்கல் மாவட்டம் பழனியில் கடந்த 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 16ஆம் தேதி இடத்தகராறு காரணமாக நடராஜன் என்பவர் தான் வைத்திருந்த கை துப்பாக்கியால் பழனிச்சாமி சுப்பிரமணி ஆகிய இருவரையும் சுட்டார். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் வயிற்றில் குண்டு பாய்ந்த பழனிச்சாமியும் சுப்பிரமணியம் படுகாயம் அடைந்தனர் இந்த சம்பவம் தொடர்பாக நடராஜன் கைது செய்யப்பட்டார்
திண்டுக்கல் இளைஞர்
இதேபோல திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரத்தில் குளத்தை ஏலம் எடுப்பது தொடர்பாக ஏற்பட்ட முன் விரோதத்தில் அதே பகுதியைச் சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகனான ராக்கி என்ற ராகேஷ் குமார் கடந்த ஜனவரி மாதம் 3 ஆம் தேதி நள்ளிரவு நாட்டு துப்பாக்கியால் சுடப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக முக்கிய குற்றவாளிகள் நான்கு பேர் உள்ளிட்ட ஏழு பேர் கைது செய்யப்பட்டனர்.
துப்பாக்கி கலாச்சாரம்
2020 ஆம் ஆண்டு தொடங்கி தற்போது வரை திண்டுக்கல் மாவட்டத்தில் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 3 ஆக உள்ளது. இது தவிர கன்னிவாடி, சிறுமலை ஆடலூர் பன்றிமலை உள்ளிட்ட பகுதிகளிலும் நத்தம் மற்றும் அதன் சுற்றுவட்டார மலைப்பகுதிகளிலும் கள்ளத் துப்பாக்கி புழக்கம் அதிகரித்துள்ளது, எனவே காவல்துறையினர் உரிய நடவடிக்கை எடுத்து வனப்பகுதிகளில் தீவிர கண்காணிப்பு மேற்கொள்ள வேண்டும் எனவும் துப்பாக்கி கலாச்சாரத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர்,