மத்திய பாஜக ஆட்சியில் ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லை... காங். எம்.பி ஜோதிமணி கடும் தாக்கு!
திண்டுக்கல் : பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக ஆட்சியில் ஊடக சுதந்திரம் என்பது இல்லை என்று கரூர் லோக்சபா தொகுதி எம்.பி. ஜோதிமணி குற்றம்சாட்டியுள்ளார்.
Recommended Video
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே பூத்தாம்பட்டியில் நடைபெற்ற நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சியில், கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி கலந்துகொண்டார். 300க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு, ஸ்கூட்டர், மூன்று சக்கர சைக்கிள், காதொலிகருவி, ஊன்றுகோல் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து தனக்கு ஒதுக்கப்படும் நிதியை, 55 சதவீதத்தை கல்விக்கும், 30 சதவீதத்தை அரசு மருத்துவமனைக்கும் மீதமுள்ள தொகையை மாற்றுத்திறனாளிகளுக்கும் வழங்கியதாக தெரிவித்தார்.
இதைத்தொடர்ந்து செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் கூறியவதாவது : பிரஸ் ஃப்ரீடம் இன்டெக்ஸ் வெளியிடப்பட்ட கருத்துக்கணிப்பில் உலக தரவரிசை பட்டியலில். ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் நாடுகளுக்கு அடுத்தபடியாக இந்தியா கீழே உள்ளது. அந்த அளவுக்கு ஊடகங்களுக்கு சுதந்திரம் இல்லாத சூழ்நிலை நிலவுகிறது.
தனிப்பட்ட முறையில், ஊடகவியாளர்கள், ஊடகங்கள் டுவிட்டரில் வெளியிடும் பொதுவான கருத்துக்கள் நீக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால், செய்தித் துறையில் போடப்படும் ட்விட்டை நீக்கினால் பொதுமக்களுக்கு செய்திகள் எவ்வாறு சென்றடையும். ட்விட்டர் நிறுவனம் இந்தக் குற்றச்சாட்டை தொடர்ந்து கூறி வருகிறது.
கர்நாடக உயர் நீதிமன்றம் தீர்ப்புக்கு எதிராக, ட்விட்டர் நிறுவனம் உச்ச நீதிமன்றத்தை நாடியுள்ளது. அந்த விசாரணை வெளிப்படையாக நடைபெற்றால், தற்போதைய மத்திய அரசு, ஊடகங்களை எவ்வளவு தூரம் ஒடுக்கிறது - அடக்கு முறையை ஊடகங்கள் மீது ஏவுகிறது என தெரிந்துவிடும். இதனை மறைமுகமாக விசாரிக்க வேண்டும் என்று கேட்டிருப்பதன் மூலம், வெளிப்படை தன்மை இல்லாமல் மத்திய அரசு இருப்பதற்கு இது ஒரு உதாரணம்.
மேலும், தமிழகம் மற்றும் தேசிய அளவில் இருக்கும் ஊடகவியலாளர்கள் உண்மையை உரக்க மக்களிடம் கூற வேண்டும். அப்போதுதான் கருத்து சுதந்திரம் உள்ள ஜனநாயக நாடாக இந்தியாவை நடத்த முடியும். இல்லையெனில், ஊடகம் மற்றும் ஊடகவியலாளர்கள், நரேந்திர மோடிக்கு, ஆர்.எஸ்.எஸ். ஆக மாறிவிடும் ஆபத்து இருக்கிறது. இந்த ஆபத்திலிருந்து காப்பாற்றப்பட வேண்டும். அதற்கு மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சி உறுதுணையாக இருக்கும் என கரூர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோதிமணி தெரிவித்தார்.