இறுதி எச்சரிக்கை விடுத்த திமுக தலைவர் ஸ்டாலின்.. அடுத்தடுத்து ராஜினாமா செய்யும் “தலைவர்கள்”
திண்டுக்கல் : தோழமைக் கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வெற்றிபெற்ற திமுகவினர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிலையில், மேலும் இரு திமுக கவுன்சிலர்கள் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர், நகராட்சி துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை தங்களின் கூட்டணிக் கட்சிகளான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கு திமுக தலைமை ஒதுக்கியது.
வான்வழி தடை கோரிக்கை மூலம் 3-ம் உலகப் போரை தூண்டிவிடும் உக்ரைன் அதிபர்? உஷாராகும் யு.எஸ்., ஐரோப்பா
இந்த நிலையில் நேற்று நடைபெற்ற மறைமுக தேர்தலின் போது கட்சித்தலைமை அறிவிப்பை மீறி ஏராளமான இடங்களில் திமுகவினர், கூட்டணி கட்சிகளுக்கு எதிராக போட்டியிட்டு தலைவர் துணைத் தலைவர் உள்ளிட்ட பதவிகளை கைப்பற்றினர்.
கட்சிகள் கோரிக்கை
கூட்டணி தர்மத்தை மீறி திமுகவினர் செயல்படுவதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என காங்கிரஸ் கம்யூனிஸ்ட் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் தொடர்ந்து தமிழகம் முழுவதும் இதே போல பல சம்பவங்கள் நடைபெற்றது. இந்நிலையில் தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் கழக தலைமை அறிவித்ததை மீறி போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்டாலின் அறிக்கை
கழகத் தலைவர் என்ற முறையில் குற்ற உணர்ச்சியால், நான் குறுகி நிற்கிறேன். எந்தத் தோழமை உணர்வு நமக்கு மக்கள் மனதில் நல்லெண்ணம் உருவாக்கியதோ அந்த தோழமை உணர்வை எந்தக் காலத்திலும் உருக்குலைந்துவிடக் கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறேன். கழகத் தலைமை அறிவித்ததை மீறி தோழமைக் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் போட்டியிட்டு வென்றவர்கள் உடனடியாக தங்கள் பொறுப்பை விட்டு விலக வேண்டும். விலகாவிட்டால் அவர்கள் கழகத்தின் அடிப்படை உறுப்பினரிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று கழகத் தலைவர் என்ற முறையில் எச்சரிக்கிறேன் எனவும் முதல்வர் ஸ்டாலின் விடுத்த அறிக்கையில் கூறியிருந்தார்.
கூட்டணியினர் வரவேற்பு
இதற்கு கூட்டணிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்த நிலையில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் திமுகவினர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் விடுத்தனர். நேற்று திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர்மன்ற துணைத்தலைவர் பதவி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அங்கு வென்ற திமுக கவுன்சிலர் பாண்டியன் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதேபோன்ற தமிழகத்தில் தொடர்ந்து பலரும் ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகின.
ராஜினாமா செய்த பெண் கவுன்சிலர்
இந்த நிலையில் திண்டுக்கல் மாவட்டத்திலும் திமுக தலைவர் மு க ஸ்டாலின் உத்தரவை ஏற்று பேரூராட்சி பதவியை அதிமுக பெண் கவுன்சிலர் ஒருவர் ராஜினாமா செய்தார். இதேபோல் திமுக கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் போட்டியிட்டு வென்ற கரூர் மாவட்டம் புலியூர் பேரூராட்சி தலைவர் புவனேஷ்வரி, புதுக்கோட்டை மாவட்டம் கீரமங்கலம் பேரூராட்சியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட துணைத் தலைவர் பதவிக்கு போட்டியிட்டு வென்ற திமுகவின் தமிழ்ச்செல்வனும், தனது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி கட்சியினர் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.