முழங்காலிட மறுத்த குயின்டன் டி காக்.. மண்டேலா நாட்டில் மனிதம் இல்லையா.. விளாசிய பாகிஸ்தான் வீரர்
துபாய்: நெல்சன் மண்டேலாவின் தென் ஆப்பிரிக்கா இது இல்லை என்பதை குயின்டன் டி காக், முழங்காலிட்டு நிற்க மறுத்தது எடுத்துக் காட்டுவதாக இருக்கிறது என்று பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சல்மான் பட் விமர்சனம் தெரிவித்துள்ளார்.
Recommended Video
அமெரிக்காவில் கறுப்பினத்தைச் சேர்ந்த ஜார்ஜ் பிளாய்ட், வெள்ளை நிற காவல் அதிகாரியால் கழுத்தில் காலால் அழுத்தி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் அங்கு பெரும் போராட்டங்களுக்கு காரணமாக மாறியது.
கறுப்பினத்தவர்கள் உயிர்வாழ்வதும் முக்கியம்தான் என்ற பொருள் படும் வகையில், 'Black Lives Matter' என்ற இயக்கம் அமெரிக்கா மட்டுமின்றி, உலகமெங்கும் கையிலெடுக்க ஆரம்பிக்கப்பட்டது.

முழங்காலிட்டு ஆதரவு
20 ஓவர்கள் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும், 'Black Lives Matter' பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. போட்டி தொடங்கும் முன்பாக வீரர்கள் முழங்காலிட்டு நெஞ்சில் கை வைத்து நிற வெறிக்கு எதிராக உறுதியேற்கிறார்கள். இந்தியா-பாகிஸ்தான் போட்டியின்போதும், இவ்வாறு உறுதிமொழி ஏற்கப்பட்டது. இந்திய வீரர்களும் உறுதிமொழி எடுத்தனர். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதலுக்கு எதிராக இப்படி பிரச்சாரம் செய்யாமல் அமெரிக்க விவகாரத்திற்காக இந்திய வீரர்கள் முழங்காலிடுவதா என்ற விமர்சனங்களையும் சிலர் சமூக வலைத்தளங்களில் முன் வைத்தனர். இது ஒரு பக்கம் என்றா்ல குவின்டன் டி காக்கும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

குயின்டன் டி காக் ஆடவில்லை
தென் ஆப்பிரிக்க விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனான குவின்டன் டி காக், நேற்றைய மே.இ.தீவுகளுக்கு எதிரான போட்டியில் களமிறக்கப்படவில்லை. திடீரென ஏன் அவர் ஆடவில்லை என்பது முதலில் புரியாத புதிராக இருந்தது. ஐசிசி போட்டிகளில் சிறப்பாக ஆடக்கூடிய அவரை ஏன் அணியில் சேர்க்கவில்லை.. காயம் காரணமா என்றெல்லாம் ஹேசியங்கள் பரவிய நிலையில், 'Black Lives Matter' விஷயத்திற்காக முழங்காலிட அவர் மறுத்ததாகவும், அணி நிர்வாகம் பேச்சை கேட்காததால் அவர் களமிறக்கப்படவில்லை என்றும் பிறகு, தென் ஆப்பிரிக்க அணி கேப்டன் டெம்பா பவுமா தெரிவித்தார். குவின்டன் டி காக் இன வெறியோடு நடந்து கொண்டாரா என்ற கேள்விகளை இந்த சம்பவம் ரசிகர்களிடையே எழுப்பியுள்ளது.

சல்மான் பட் விளாசல்
இந்த நிலையில், சல்மான் பட் தனது யூடியூப் சேனலில் குவின்டன் டி காக்கை விமர்சனம் செய்துள்ளார். அவர் கூறுகையில், குவின்டன் டி காக், செய்தது மிகவும் விசித்திரமானது. பிளாக் லைவ்ஸ் மேட்டர் (பிஎல்எம்) தருணத்தில் அனைவரும் பங்கேற்கிறார்கள், இது அடிப்படையில் எல்லா மனிதர்களும் சமம் என்றும், இனம் அல்லது நிறத்தின் அடிப்படையில் யாரும் தங்களை உயர்ந்தவர்களாகக் கருதக்கூடாது என்றும் வலியுறுத்தும் விஷயம்தான். இதில் என்ன தப்பு.

நெல்சன் மண்டேலா
வீரர்கள் முழங்காலிட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. ஆனால் அதை ஏற்காத குவின்டன் டி காக் முடிவு, மக்களை ஒன்றிணைக்காது, மேலும் பிளவையே உருவாக்கும். அவர் ஏன் இதைச் செய்தார் என்று எனக்குத் தெரியவில்லை. டி காக், இரு இன மக்களும் மிகுதியாக வாழும் நாட்டில் வாழ்கிறார். இது நிச்சயமாக நெல்சன் மண்டேலாவின் தென்னாப்பிரிக்கா அல்ல. மண்டேலா மக்களை ஒன்றிணைத்தார். எல்லோரும் சமம் என்ற செய்தி ரொம்பவே எளிமையானது. இதைச் சொல்ல டி காக்கிற்கு என்ன தயக்கம். இவ்வாறு அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.












Click it and Unblock the Notifications