துபாயில் மூடப்படும் உலகின் பிஸியான ஏர்போர்ட்.. என்ன காரணம்? ஏன் இந்த திடீர் முடிவு! பரபர தகவல்
துபாய்: உலகின் பிஸியான ஏர்போர்ட்டாக இருக்கும் துபாய் ஏர்போர்ட்டை மூட அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. அதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
கொரோனா பாதிப்பால் மிக பெரியளவில் பாதித்த துறைகளில் ஒன்று விமான போக்குவரத்துத் துறை.. கொரோனா காலகட்டத்தில் ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் சர்வதேச அளவில் விமான போக்குவரத்து முற்றிலுமாக முடங்கிப் போனது.

இப்போது பயண கட்டுப்பாடுகள் அனைத்தும் நீக்கப்பட்ட நிலையில், விமான போக்குவரத்து மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. விமான டிக்கெட் விலை குறைவது, அதிகரிக்கும் மிடில் கிளாஸ் மக்களின் பயன்பாடு ஆகியவையும் விமான போக்குவரத்து அதிகரிக்கக் காரணமாக இருக்கிறது.
பிஸியான ஏர்போர்ட்: உலகின் பிஸியான ஏர்போர்ட் என்றால் அது துபாய் சர்வதேச விமான நிலையம் தான். இந்த துபாய் ஏர்போர்ட்டிற்கு ஒரு ஆண்டில் சராசரியாக 3,43,339 விமானங்கள் வந்து செல்கிறது. மேலும், ஆண்டு ஒன்றுக்கு 9 கோடி பயணிகள் இந்த ஏர்போர்ட்டை பயன்படுத்துகிறார்கள். துபாய் ஏர்போர்ட்டில் வெறும் சில நிமிடங்களில் பல விமானங்கள் வந்து சென்றுவிடும். இப்படி படுபிஸியாக இயங்கி வரும் துபாய் ஏர்போர்ட்டை மூட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
தற்போது இருக்கும் துபாய் ஏர்போர்ட்டை மூடிவிட்டு, அதிகரிக்கும் விமான தேவையைக் கருத்தில் கொண்டு இன்னும் பெரியதாக ஒரு ஏர்போர்ட்டை கட்ட துபாய் முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்த புது ஏர்போர்ட்டிற்கு வடிவமைப்பு பணிகள் இப்போது நடந்து வருவதாகக் குறிப்பிட்ட துபாய் ஏர்போர்ட் சிஇஓ பால் கிரிஃபித்ஸ், இந்த புதிய ஏர்போர்ட் புறநகரில் கட்டப்படும் என்றும் 2030களில் இது செயல்பாட்டிற்கு வரும் என்றும் தெரிவித்தார்.
ஐக்கிய அமீரகம்: ஐக்கிய அமீரகத்தில் நடந்த துபாய் விமான கண்காட்சியில் கலந்து கொண்ட பால் கிரிஃபித்ஸ் இந்த கருத்துகளைத் தெரிவித்தார். முன்னதாக கடந்தாண்டு அண்டை நாடான சவுதி அரேபியாவும் ரியாத்தில் ஒரு பெரிய புதிய விமான நிலையத்தைக் கட்டுவதற்கான திட்டத்தைப் பகிர்ந்தது குறிப்பிடத்தக்கது.
துபாய் ஏர்போர்ட் குறித்து பால் மேலும் கூறுகையில், "இப்போது விமான பயணிகள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதுள்ள துபாய் ஏர்போர்ட்டால் அதிகபட்சம் 12 கோடி பயணிகளை மட்டுமே கையாள முடியும். அதன் பிறகு எதுவும் செய்ய முடியாது. புதிய ஏர்போர்ட் நமக்குத் தேவைப்படும். அந்த புதிய ஏர்போர்ட் அமைக்கும் பணிகளை நாங்கள் தொடங்குகிறோம். 2030களில் அது செயல்பாட்டிற்கு வரும். அப்போது டிசைன் பணிகள் நடந்து வருகிறது.
வித்தியாசம் என்ன: புதிய ஏர்போர்டிற்கான பட்ஜெட் உள்ளிட்டவை இன்னும் உறுதி செய்யவில்லை. இது அடுத்து வரும் காலத்திற்கான ஏர்போர்ட்டாக இருக்கும். வரும் 2050ஆம் ஆண்டு வரை அதிகரிக்கும் விமான போக்குவரத்தை இது கையாள முடியும். நாங்கள் ஏர்போர்ட்டின் பிஸ்னஸ் மாடலை மொத்தமாக மாற்றத் திட்டமிட்டுள்ளோம். இது வழக்கமான டெர்மினல்களை கொண்ட ஏர்போர்ட்டாக இருக்காது. பயணிகள் சவுகரியமாகப் பயணிக்க இந்த ஏர்போர்ட் நிச்சயம் உதவும்" என்றார்.
தொடர்ந்து விமான பயணிகள் குறித்துப் பேசிய அவர், "இஸ்ரேல் காசா போர் காரணமாக இந்த பிராந்தியத்திற்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குறைய வாய்ப்புள்ளதாகப் பலரும் தெரிவித்தனர். ஆனால், உண்மையில் கள நிலவரம் வேறாகவே இருக்கிறது. சொல்லப் போனால் துபாய்க்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்தே வருகிறது. இப்போது நம்மிடம் இருக்கும் டேட்டாக்களும் அதையே காட்டுகிறது.
முடக்கம்: கொரோனா காலகட்டத்தில் விமான போக்குவரத்து குறைந்தது. ஆனால், கொரோனா கட்டுப்பாடுகள் நீக்கப்பட்ட உடன் விமான பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்பது அப்போதே தெரியும். இரண்டு ஆண்டுகளாக வீடுகளிலேயே முடங்கி இருந்த மக்கள் இப்போது வெளியே வரத் தொடங்கியுள்ளனர்" என்றார்.












Click it and Unblock the Notifications