பிளாஷ்பேக்:சூர்யகுமாரிடம் கோபப்பட்ட கோலி.. பதிலடி கொடுத்த யாதவ்! 2 ஆண்டுபின் அதே அமீரகத்தில் சம்பவம்
துபாய்: ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங் அணிக்கு எதிரான டி20 போட்டியில் கலக்கிய விராட் கோலி - சூர்யகுமார் யாதவ் ஜோடி கடந்த 2020 ஆம் ஆண்டு மைதானத்திலேயே மோதிக்கொண்டது நினைவிருக்கிறதா?
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டிகள் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இதில் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், இலங்கை, ஆஃப்கானிஸ்தான், ஹாங்காங் ஆகிய அணிகள் விளையாடி வருகின்றன.
இதில் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அசத்தில் வெற்றியை பெற்று மக்களை மகிழ்ச்சிக் கடலில் திழைக்க செய்தது.
சைக்காலஜி அட்டாக்.. கோலி, ரோஹித் வந்தது பாகிஸ்தான் கீப்பர் நடந்து கொண்ட விதம்! சர்ச்சை.. என்ன ஆச்சு?
ஹாங்காங் போட்டி
இந்த நிலையில் இன்று ஹாங்காங் அணிக்கு எதிராக தனது ஆசிய கோப்பையின் 2 வது போட்டியை இந்தியா விளையாடி வருகிறது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கிய கே.எல்.ராகுல் 36 ரன்களிலும், கேப்டன் ரோகித் ஷர்மா 21 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.
கோலி - சூர்யகுமார் ஜோடி
அடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலியும் சூர்யகுமார் யாதவும் ஹாங்காங் பந்துவீச்சை துவம்சம் செய்தனர். சூர்யகுமார் யாதவ் 26 பந்துகளை எதிர்க்கொண்டு 6 பவுண்டரிகள், 6 சிக்சர்களை விளாசி 68 ரன்கள் குவித்தார். மறுமுனையில் நிலையான ஆட்டத்தை ஆடிய விராட் கோலி 44 பந்துகளில் ஒரு பவுண்டரி 3 சிக்சர்களை அடித்து 59 ரன்களை குவித்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 192 ரன்களை குவித்தது.
பிளாஷ்பேக்
இன்று வெற்றிகரமான ஜோடியாக ஜொலித்த விராட் கோலி - சூர்யகுமார் இடையே கடந்த 2020 ஆம் ஆண்டு நடந்த மோதலை யாராலும் மறந்திருக்க முடியாது. மும்பை இந்தியன்ஸ் - பெங்களூரு அணிகளுக்கு இடையிலான போட்டியில் பேட்டிங் செய்த சூர்யகுமார் யாதவ் 79 ரன்கள் விளாசினார். அப்போது அவரை நோக்கி முறைத்துக்கொண்டே கோலி செல்ல, சூர்யகுமார் யாதவும் தயக்கமின்றி அவரை நோக்கி கோபமாக முன்னேறினார்.
பரபரப்பான மைதானம்
கோலியும் சூர்யகுமார் யாதவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டதால் போட்டி நடைபெற்ற அபுதாபி மைதானம் பரபரப்பானது. ஆனால் கோலிக்கு பதிலடியாக 20 ஓவரில் பவுண்டரி அடித்து மும்பை அணியை வெற்றிபெற வைத்த சூர்யகுமார், நெஞ்சில் கை வைத்து தனது ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தினார். கோலி கேப்டனாக இருந்தபோது இந்திய அணியில் வாய்ப்பு வழங்காததால் அவர் மீது சூர்யகுமார் யாதவ் கோபத்தில் இருந்ததாக கூறப்பட்டது.
ஒற்றுமை
அப்போது, இந்திய அணியின் கேப்டனான விராட் கோலி மைதானத்தில் நடந்துகொண்டது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இன்று அணியில் நிலையான இடத்தை சூர்யகுமார் யாதவ் பிடித்துவிட்டார். கேப்டனாக இருப்பவர் மும்பை அணியின் கேப்டன் ரோகித் ஷர்மாதான். விராட் கோலி சாதாரண வீரராக ஆடி வருகிறார். ஐபிஎல்-இல் ஆயிரம் இருந்தாலும் இந்தியா என்றால் நாங்கள் ஒன்றுதான் என்ற உணர்வோடு பழைய மனக்கசப்புகளை மறந்து இரு வீரர்களும் இன்று சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை ரசிகர்கள் மகிழ்ச்சியோடு வரவேற்றுள்ளனர்.