ஹார்திக் பாண்ட்யா எதுக்கு?.. கோலியே அவர் இடத்தை நிரப்பலாமே.. செம ஐடியா கொடுக்கும் முன்னாள் வீரர்!
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வரும் டி20 உலககோப்பை தொடர் ஆரம்பித்த சில நாட்களிலேயே விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது. 2007-ம் ஆண்டுக்கு பிறகு இந்த முறை கண்டிப்பாக கோப்பையை கையில் ஏந்தும் என்று எதிர்பார்க்கப்படும் இந்தியா சிக்கலான நிலையில் இருக்கிறது.
தனது முதல் ஆட்டத்தில் எதிர்பாரதவிதமாக பாகிஸ்தானுடன் படுதோல்வியை சந்தித்த இந்தியா இன்று நியூஸிலாந்துடன் மோதும் ஆட்டத்தில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது.

வாழ்வா? சாவா?
வாழ்வா? சாவா? என்று நிர்ணயிக்கும் இந்த போட்டியில் தோற்றுவிட்டால் நமது அணி வீரர்கள் ஏறக்குறைய மூட்டை கட்டி விடலாம். முக்கியமான இந்த போட்டியில் முதல் ஆட்டத்தில் சொதப்பிய சில வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்ககூடாது என்பதே பலரின் கருத்தாக உள்ளது. இதில் முதலாவது வருபவர் ஹார்திக் பாண்ட்யா. ஒரு காலத்தில் உலகின் மிகச்சிறந்த ஆல்ரவுண்டராகவும், தோனிக்கு அடுத்து இந்தியாவின் பெஸ்ட் பினிஷராகவும் விளங்கிய பாண்ட்யாவின் நிலைமை இன்று மிகவும் பரிதாபமாக உள்ளது.

ஹார்திக் பாண்ட்யாவின் நிலை
இந்தியாவின் முன்னாள் வீரர்கள் மட்டுமின்றி, ஒரு கட்டத்தில் ''பாண்ட்யா, பாண்ட்யா'' என்று வாழ்த்தி கோஷமிட்ட ரசிகர்களும் ''அவரை அணியில் இருந்து நீக்கி விடுங்கள்'' என்று கோரஸாக கூறுகின்றனர். ஹார்திக் பாண்ட்யாவின் மிக மோசமான பார்மே இதற்கு காரணம். பேட்டிங்கில் சொதப்பினாலும் பவுலிங்கில் 2 அல்லது 3 ஓவர்கள் வீசி அணிக்கு கைகொடுத்து வந்த பாண்ட்யா, இப்போது இரண்டிலும் செயல்படாமல் பெரும் சுமையாக இருக்கிறார் என்று உறுதியாக கூறலாம்.

பாண்டியா விளையாடுவது ஆபத்தானது
பல்வேறு தரப்பினர் கருத்து கூறி வந்த போதிலும், கேப்டன் விராட் கோலி பிளெயிங் லெவனில் ஹார்திக் பாண்ட்யாவை சேர்ப்பதில் தீவிரமாக இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த நிலையில் நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விளையாடுவது ஆபத்தானது என இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் அஜித் அகர்கர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ஈ.எஸ்.பி.என் இணையத்துக்கு பேட்டியளித்த அஜித் அகர்கர் கூறியிருப்பதாவது:-

இது நிச்சயம் கூடாது
ஹர்திக் பாண்ட்யா வலைப்பயிற்சியில் பவுலிங் செய்வதை பார்த்தோம். கடந்த இரண்டு மாதங்களாக அவர் பந்துவீசவில்லை. ஒரு பந்துவீச்சாளராக போட்டியின் போது வந்து பந்து வீசுவது எவ்வளவு கடினம் என்பதை நான் அறிவேன். பல மாதங்களாக பந்து வீசாத பந்துவீச்சாளர் 2 நாட்கள் பயிற்சிக்குப் பிறகு சிறப்பாக செயல்படுவார் என்று எதிர்பார்ப்பது ஆபத்தான விருப்பமாக இருக்கும். இது நிச்சயமாக ஆறாவது பந்துவீச்சு விருப்பமாக இருக்காது,

விராட் கோலி சிறந்த தீர்வு
ஒரு பந்துவீச்சாளராக ஹர்திக் எந்தளவுக்கு பந்துவீச முடியும்? என்பது இப்போது கேள்விக்குறியாக உள்ளது. அவர் பேட்டிங்கிலும் சரியான பார்மில் இல்லை. எனவே நியூசிலாந்துக்கு எதிராக ஹர்திக் பாண்டியா விளையாடுவது ஆபத்தானது என்று கூறுகிறேன். விராட் கோலி ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் பந்து வீசினால் ஆறாவது பந்துவீச்சாளர்களின் இடத்தை நிரப்ப உதவக்கூடும். கோலி இடையில் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வீசினால் அதுவே இந்தியாவுக்கு சிறந்த தீர்வாக இருக்கும். இவ்வாறு அஜித் அகர்கர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications