துபாய்ல அதிக சம்பளம் வாங்கினாலும்.. பெங்களூரில் வாங்கிய கம்மி ஊதியமே மகிழ்ச்சி- பெண்மணி நெகிழ்ச்சி
அபுதாபி: துபாயில் கை நிறைய சம்பளம் வாங்கினாலும், பெங்களூரில் தனது முதல் சம்பளத்தில் கிடைத்த சந்தோஷம் இப்போது கிடைக்கவில்லை என, துபாய் வாழ் இந்திய பெண் வேதனை தெரிவித்திருக்கிறார்.
சீமா புரோஹித் எனும் இந்திய பெண்மணி தற்போது துபாயில் பணியாற்றி வருகிறார். இவரது பூர்வீகம் பெங்களூர். இவர் இன்ஸ்டாகிராமில் பகிர்ந்திருக்கும் வீடியோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.

'வாழ்க்கை எனக்கு பல அனுபவங்களை கொடுத்தது, அதைப் பற்றிப் பேச நான் இங்கு வந்துள்ளேன்' என்கிற தலைப்பில் இந்த வீடியோ வெளியாகியிருக்கிறது. அதில், பெங்களூரில் தான் முதன் முதலில் வேலைக்குச் சென்ற அனுபவத்தை இவர் நினைவு கூர்ந்துள்ளார். அப்போது மாதத்திற்கு ₹18,000 மட்டுமே சம்பாதித்ததாக கூறியுள்ளார்.
"பெங்களூரில் எனது முதல் வேலையில், எனக்கு வெறும் ₹18,000 தான் சம்பளம். ஆனால் அந்தச் சம்பளத்தைப் பெற்றபோது, நான் உலகிலேயே மிகவும் பணக்காரப் பெண் என்று நினைத்தேன். அந்தச் சிறிய தொகை எனக்கான தங்குமிட வாடகை, ஷாப்பிங், உணவு, வார இறுதி கொண்டாட்டங்கள் போன்ற அனைத்திற்கும் போதுமானதாக இருந்ததுடன், மாத இறுதியில் சில ஆயிரம் ரூபாய்களை சேமிக்கவும் உதவியது.
எனது சம்பளத்தில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன், என் வாழ்க்கையில் நான் மகிழ்ச்சியாக இருந்தேன். அப்போது நான்தான் பூமியிலேயே மிகவும் மகிழ்ச்சியான பெண்" என தனது துபாய் வாழ்க்கையை பெங்களூருடன் ஒப்பிட்டுப் பேசியுள்ளார். தற்போது துபாயில் கணிசமாக அதிக சம்பளம் பெற்றாலும், முன்பிருந்த மனநிறைவு இல்லை என்று அவர் கூறியிருக்கிறார்.
"இன்று நான் ₹18,000-ஐ விடப் பல மடங்கு அதிகமாகச் சம்பாதிக்கிறேன், துபாயில் இருக்கிறேன், ஆனாலும் நான் முன்பு இருந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இல்லை" என்று கூறியுள்ளார்.
இந்த வீடியோவுக்கு பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். ஒரு பயனர், "இதுபோன்று எனக்கும் தோன்றுகிறது. உறவுகள், வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை மீதான ஆர்வம், இவையெல்லாம் எப்போது மறைந்து விடுகின்றன என்று தெரிவதில்லை. சில சமயங்களில் எவ்வளவு முயன்றாலும் அதை மீட்டு எடுக்க முடிவதில்லை" என்று கூறியுள்ளார். மற்றொருவர், "நானும் ஒப்புக்கொள்கிறேன் துபாயில் இருக்கிறேன், ஆனால் துபாய் எனக்கும் பிடிக்கவில்லை" என்று கருத்து தெரிவித்தார்.
மூன்றாவது பயனர் "எனக்கும் அதே உணர்வு இருக்கிறது" என்றார். மற்றொருவர், "துபாயில் எவ்வளவு சம்பளம் இருந்தாலும் அது குறைவுதான் என்பது உண்மை" என்றும் கூறியுள்ளார். இருப்பினும், "அதிகமாக சம்பாதிக்கும் எல்லோரும் இப்படித்தான் சொல்வார்கள், அதற்கான வாய்ப்புகள் கிடைக்காமல், குறைந்த கூலிக்கு அடிமைப்போல வேலை செய்யும் எங்களுக்குதான் இதில் உள்ள சிக்கல்கள் தெரியும்" என்றும் வேறு சிலர் பதிவிட்டிருக்கின்றனர்.
துபாய் வாழ் இந்திய பெண் சொன்னது பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் மக்களே?












Click it and Unblock the Notifications