ஒரே டிக்கெட்டில் 20 பேர் செட்டில்! பாலக்காடு ராஜேஷுக்கு அடித்த யோகம்..லாட்டரியில் 34 கோடி பரிசு
துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளா, தமிழ்நாட்டை சேர்ந்தவர்கள் பலரும் வேலை பார்த்து வருகிறார்கள். அப்படி கேரளாவின் பாலக்காட்டை சேர்ந்த ராஜேஷ் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து ஓமனில் லாட்டரி பிக் டிக்கெட்டை வாங்கியிருக்கிறார். தற்போது அந்த லாட்டரி டிக்கெட்டுக்கு முதல் பரிசாக ரூ.34 கோடி அடித்துள்ளது. இதனால் ஒரே நாளில் 20 பேரும் கோடிக்கு அதிபதியாகியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்தியர்கள் ஏராளமானவர்கள் தங்கியுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய், அபுதாபி, சார்ஜா மற்றும் ஓமன் நாடுகளில் டிரைவர், என்ஜினியர், கட்டுமான பணி என பல்வேறு தொழில்களிலும் இந்தியர்கள் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக தமிழ்நாடு, கேரளா பகுதிகளை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்கு பணியாற்றி வருகிறார்கள்.

ரூ.34 கோடிக்கு அதிபதி
உள்ளூரில் போதிய வருமானம் இல்லாததால் கடல் கடந்து இப்படி அயல்நாட்டில் பணி செய்யும் பணியாளர்களுக்கு சில சமயங்கள் வாழ்நாளில் நினைத்து பார்க்க முடியாத அளவுக்கு சில நேரம் அதிர்ஷ்டம் ஐக்கிய அரபு அமீரகத்தில் அடித்து விடுகிறது. ஐக்கிய அரபு அமீரகத்தில் அவ்வப்போது இந்தியர்கள் சிலருக்கு லாட்டரிகளில் பல கோடி ரூபாய் பரிசாக அடித்து விடும் செய்திகள் வெளியாகி பலரையும் வியக்க வைக்கும்.
அப்படியான ஒரு சம்பவம் தான் கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் என்பவருக்கு நடைபெற்றுள்ளது. அதிலும் ஒரே நாளில் சுமார் ரூபாய் 34 கோடிக்கு அதிபதியாகியிருக்கிறார் ராஜேஷ். இது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
கேரள பாலக்காட்டை சேர்ந்த ராஜேஷ்
கேரள மாநிலம் பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் ராஜேஷ். 45 வயதான இவர் ஓமனில் உள்ள மஸ்கட்டில் 23 வருடங்களாக டெக்னிஷியனாக வேலை செய்து வருகிறார். அங்குள்ள ஒரு தண்ணீர் நிறுவனத்தில் கூலர் டெக்னிஷியனாக பணி செய்து வரும் ராஜேஷ் கடந்த 30 ஆம் தேதி பிக் டிக்கெட் லாட்டரியை வாங்கியிருக்கிறார். தனது நண்பர்கள் 20 பேருடன் சேர்ந்து இந்த டிக்கெட்டை வாங்கியிருக்கிறார்.
ராஜேஷ் வாங்கிய லாட்டரி டிக்கெட்டிற்கு 15 மில்லியன் திர்ஹாம் (இந்திய மதிப்பில் ரூ. 34 கோடி) பரிசாக அடித்துள்ளது. கடந்த 3 ஆம் தேதி நடந்த குலுக்கலில் 375678 என்ற டிக்கெட்டிற்கு முதல் பரிசு என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து லாட்டரி டிக்கெட் ஏற்பாட்டாளர்கள் ராஜேஷ்க்கு அன்று இரவே கால் செய்துள்ளனர். ஆனால் சாப்பிட்டு கொண்டு இருந்ததால் அந்த போன் அழைப்பை ராஜேஷ் எடுக்கவில்லையாம்.
மகிழ்ச்சியில் தூக்கமே வரவில்லையாம்
சிறிது நேரத்தில் அவரது நண்பர்கள் போன் செய்து மெயிலை செக் செய்யுமாறு கேட்டு இருக்கிறார்கள். அதில், லாட்டரியில் பரிசு அடித்தற்கான விவரம் இடம் பெற்றுள்ளது. இதை பார்த்தத்தும் ராஜேஸ்க்கு கையும் ஓடவில்லை.. காலும் ஓடவில்லை. நடப்பது எல்லாம் நிஜமா இல்லை கனவா என சந்தேகப்படும் அளவுக்கு எனது மனநிலை இருந்ததாகவும் மகிழ்ச்சியில் அன்று இரவு முழுக்க தூக்கமே வரவில்லை என்றும் கூறியுள்ள அவர் இன்னும் அந்த தருணத்தில் இருந்து மீள முடியவில்லை என மகிழ்ச்சி பொங்க கூறினார்.

மேலும் ராஜேஷ் கூறுகையில், 6 ஆண்டுகளாக தன்னுடன் உடன் பணியாற்றுபவர்கள் சேர்ந்து லாட்டரி வாங்குவதாகவும், ஒவ்வொரு மாதம் வாங்கும் போதும் தங்களுக்கு அடிக்காதா? என்ற எதிர்பார்ப்புடன் இருப்போம். இந்த முறை 1,000 திர்ஹாமிற்கு லாட்டரி டிக்கெட்டை வாங்கினோம்., புரமோஷனுகாக 4 டிக்கெட்டுகள் இலவசமாக கிடைத்தது. அதில் ஒரு டிக்கெட்டிற்குதான் பரிசு அடித்து உள்ளது.
மாதம் மாதம் டிக்கெட் வாங்கியிருக்கிறார்
ஒவ்வொருவரும் ஆளுக்கு 50 திர்ஹாம் போட்டு டிக்கெட் வாங்கியதால் சரிசமமாக பரிசுத்தொகையை பகிர்ந்து கொள்ள திட்டமிட்டு இருக்கிறோம்" என்றார். இதன்படி பார்த்தால் ஒவ்வொருவருக்கு தலா 7 லட்சம் திர்ஹாம் கிடைக்கும். இந்திய மதிப்பில் பார்த்தால் ஆளுக்கு கிட்டத்தட்ட ரூ.1.5 கோடி கிடைக்கும்.
ராஜேஷின் மனைவி கடந்த 2018-ஆம் ஆண்டு இறந்துவிட்டாராம். அவருக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். தனது சகோதரி பராமரிப்பில் கேரளாவில் இரண்டு பிள்ளைகளுடன் வசித்து வருகிறார்களாம். இதனால், இந்தியாவுக்கு திரும்பி சொந்தமாக தொழில் செய்ய திட்டமிட்டுள்ளதாக ராஜேஷ் கூறினார். தன்னுடன் வேலை செய்த ஒருவருக்கு 2018-ல் லாட்டரியில் பரிசு அடித்ததை பார்த்ததில் இருந்து ராஜேஷ்க்கும் லாட்டரி மோகம் ஏற்பட்டுள்ளது. 2018- முதல் ஒரு மாதம் கூட தவறாமல் லாட்டரி வாங்கி வந்து இருக்கிறார் ராஜேஷ்.
ரேஞ்சு ரோவர் சொகுசு கார்
இப்படித்தான் கடந்த சில வாரங்களுக்கு முன்னால் ஐக்கிய அரபு அமீரகத்தில் தமிழகத்தை சேர்ந்த என்ஜினியர் ஒருவருக்கு முதல் பரிசாக 88 லட்சம் மதிப்புள்ள ரேஞ்சு ரோவர் சொகுசு கார் பரிசாக அடித்தது. பாபு லிங்கம் பால்துரை என்பவர் ஷார்ஜாவில் வசித்து வருகிறார். இவர் பிக் டிக்கெட் லாட்டரியின் ட்ரீம் கார் பரிசு லாட்டரி டிக்கெட்டை வாங்கியிருந்தார். 150 திர்ஹாம் கொடுத்து அந்த டிக்கெட்டை வாங்கிய அவருக்கு பெரிதாக நம்பிக்கை இல்லையாம்.
ஏனென்றால் 9 ஆண்டுகளாக ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வந்த இவருக்கு ஒரு முறை கூட பெரிதாக பரிசு அடித்தது இல்லை. இதனால்,எப்போதும் போலவே இந்த முறை மட்டும் என்ன நடந்து விடப்போகிறது என்ற எண்ணத்தில் இருந்தவருக்கு அதிர்ஷ்டம் திடீரென கை கொடுத்துள்ளது. கார் பரிசு லாட்டரியில் 2-வது பரிசு பாபு லிங்ககத்துக்கு கிடைத்துள்ளது. இதன் மூலம் ரேஞ்ச் ரோவர் சொகுசு கார் பரிசாக கிடைத்துள்ளது.
முதல் முறையாக பரிசு
இந்தியாவில் இந்த காரின் விலை தோராயமாக ரூ. 87.90 லட்சம் ஆக விற்பனையாகிறது. கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய் விலை கொண்ட இந்த காரை பயன்படுத்த போவது இல்லை என்று கூறிய பாபுலிங்கம் பால்துரை, அதை விற்று பணமாக பெறப்போவதாக கூறினார். இது பற்றி அவர் கூறுகையில், "கிட்டதட்ட 10 ஆண்டுகளாக லாட்டரி வாங்கும் எனக்கு முதல் முறையாக பரிசு அடித்துள்ளது. பரிசு கிடைத்ததை அறிந்ததும் எல்லையில்லா மகிழ்ச்சி அடைந்தேன்.
காராக வாங்காமல் பணமாக வாங்க முடிவு செய்து இருக்கிறேன். இந்த தொகையை கொண்டு தனது கடனை அடைக்கவும் குழந்தைகளின் கல்வி செலவுக்கு பயன்படுத்தவும் திட்டமிட்டு இருக்கிறேன்" என்றார். வேலைக்கு போன இடத்தில் இப்படி திடீர் அதிர்ஷ்டம் வாழ்க்கையையே புரட்டி போடும் அளவுக்க்கு நடந்தாலும் கூட ஒரு சிலருக்கு மட்டுமே இப்படி அதிர்ஷ்டம் அடிப்பதாகவும் பலரும் ஆண்டு கணக்கில் லாட்டரியை வாங்கி பணத்தை இழக்கவே செய்கிறார்கள் என்று நெட்டிசன்களும் கூறியுள்ளனர்.
நெட்டிசன்கள் கருத்து
கேரளாவில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கூட கிட்டதட்ட 3 கோடி ரூபாய்க்கு மேல் லாட்டரி டிக்கெட்டுகளை பல ஆண்டுகளாக வாங்கியவருக்கு அதிகபட்சமே 5 ஆயிரம் தான் பரிசு அடித்த செய்தி ஒன்று வெளியாகியிருந்தது நினைவிருக்கலாம். லாட்டரி வாங்குபவர்களின் பலரின் கதை இதுதான்.
வாங்கி பணத்தை செலவு செய்து வீணாக்குவதை விட அந்த பணத்தை சேமித்தால் கூட பெரும் தொகை மிச்சமாகும் என்று நெட்டிசன்கள் சிலர் பதிவிட்டுள்ளனர். எது எப்படியோ நேரம் வரும் போது எல்லாம் நடக்கும்.. அதனால், நாமாக தேடிப்போய் வாங்கினால் எதுவும் கிடைக்காது என்றும் சில நெட்டிசன்கள் கூறியுள்ளனர்.












Click it and Unblock the Notifications