தெறித்த ஸ்பார்க்.. தோனி, விராட் கோலி பேட்டிங்கை பார்த்தீர்களா.. பரவசமாகும் ரசிகர்கள்!
துபாய்: ஷார்ஜாவில் நேற்று நடைபெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கிடையேயான போட்டியில் ஒரு நம்பிக்கை ஒளி தெரிந்தது.
உண்மையில், ஒன்றல்ல, இரு நம்பிக்கை ஒளி தென்பட்டது என்பதுதான் உண்மை.
சிஎஸ்கே கேப்டன் தோனி மற்றும், பெங்களூர் டீம் கேப்டன் விராட் கோலி ஆகிய இருவருமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்து தங்கள் ஆளுமையை மீண்டும் நிரூபித்துள்ளனர்.
சி.எஸ்.கே.வுக்கு வெற்றியை பரிசளித்த 'ஸ்லோ பால் ஸ்பெஷலிஸ்ட்' பிராவோ.. சகோதரர் என தோனி புகழாரம்!
தோனி, விராட் கோலி
விராட் கோலி மற்றும் தோனி ஆகிய இருவருக்குமே சமீப காலமாக இருக்கும் பிரச்சினை ரன் சேர்ப்பதுதான். அதிலும் தோனி கடந்த சில சீசன்களாகவே ரன் அடிப்பதில் திணறித்தான் வருகிறார். கடந்த சீசனில் அவர் 14 போட்டிகளில் மொத்தம் 200 ரன்கள்தான் எடுத்தார். அதற்கு முந்தைய இரு சீசன்களிலும் 400 ரன்களுக்கு மேலாவது எடுத்திருந்தார்.
தோனி ரன் குவிப்பு மோசம்
நடப்பு ஐபிஎல் சீசனில் அவரது பேட்டிங் இன்னும் மோசம். நேற்றைய போட்டியோடு சேர்த்து அவர் 9 போட்டிகளில் ஆடியுள்ளார். சேர்த்த ரன்கள் 51 மட்டுமே. இந்த சீசனில் 6 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடித்துள்ளார். ஸ்ட்ரைக் ரேட் கடந்த ஆண்டு 116 என்றால், இந்த ஆண்டு 115 ஆக உள்ளது. 2018ல் தோனி ஸ்ட்ரைக் ரேட் 150 என்பதோடு ஒப்பிட்டால் இது ஒன்றுமே இல்லை.
சிறப்பான பவுண்டரி
அதேநேரம், நேற்றைய போட்டியில் தோனி நல்ல ஃபார்மில் இருப்பதை உணர்த்தினார். உதாரணத்திற்கு மணிக்கு 140 கி.மீ வரை வீசக்கூடிய சிராஜ் 18வது ஓவரை வீசியபோது தோனி அதை எதிர்கொண்டார். அவர் வீசிய ஒரு ஸ்லோ பந்தை அழகாக லெக் திசையில் அடித்து பவுண்டரி விளாசினார். வேகமாக வீசும் பவுலர் ஸ்லோவாக வீசும்போது கணிப்பது சற்று சிரமமான விஷயம். அதை தடுமாற்றம் இல்லாமல் பவுண்டரி விளாசுவது இன்னொரு சிரமமான விஷயம் அதை சிறப்பாக செய்தார் தோனி. மேலும் அடுத்த பாலே கிரீசை விட்டு இறங்கி வந்து அடித்தார். அந்த பந்தில் ரன் கிடைக்கவில்லை என்றபோதிலும், வேகப்பந்து வீச்சாளரை கிரீசை விட்டு இறங்கி வந்து சந்திப்பதற்கு தனி தைரியம் வேண்டும். அதைச் செய்தார் தோனி. நல்ல ஃபார்மில் இருப்பவரால்தான் இதை தைரியமாகச் செய்ய முடியும். எனவே, தோனி நல்ல டச்சில் இருப்பது சிஎஸ்கே ரசிகர்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்.
Recommended Video
பெரிய ஸ்கோர் தேவை
இன்னொரு பக்கம், விராட் கோலி. கடந்த பல சர்வதேச சீரிஸ்களாக இருக்கட்டும், ஐபிஎல் தொடராக இருக்கட்டும், பெரிய ஸ்கோர் திரட்டுவதில் கோலி தடுமாறி வருகிறார். அதிகபட்சமாக அரை சதம் கடப்பாரே தவிர அதை 3 டிஜிட்டாக மாற்ற கஷ்டப்படுகிறார். அடுத்த சச்சின் டெண்டுல்கர் என்று புகழப்பட்ட விராட் கோலி, சச்சினை போல பல பெரிய ஸ்கோர்களை தொடர்ச்சியாக, குவிக்க முடியாமல் திணறுவது கிரிக்கெட் ரசிகர்களுக்கு சற்று அப்செட்டான விஷயம்தான்.
பழைய விராட், ரசிகர்கள் பரவசம்
நடப்பு சீசன் ஐபிஎல் தொடரில் விராட் கோலி 9 போட்டிகளில் 256 ரன்கள் எடுத்துள்ளார். ஒரு முறைதான் நாட் அவுட்டாக நின்றுள்ளார். கடந்த சீசனில் 5 முறை நாட்அவுட்டாக நின்றவர் விராட். அவர் நேற்றைய போட்டியில் சிறப்பாக பேட் செய்தார். பழைய விராட் கோலியின் ஷாட்களை பார்க்க முடிந்தது. கேப்டன் பொறுப்பை துறப்பதாக அறிவித்த பிறகு பேட்டிங்கில் அவர் கவனம் செலுத்தியிருப்பதை நேற்றைய ஷாட்டுகள் புடம் போட்டு காட்டின. அதேநேரம், அரை சதம் கடந்ததும், அதாவது 53 ரன்களில் அவர் அவுட்டானது இன்னமும், கோலியிடம் தடுமாற்றம் இருப்பதையே காட்டுகிறது. அவர் ஓப்பனிங் இறங்காமல் தனது வழக்கமான ஒன்டவுன் பொஷிஷனில் இறங்கினால் பழைய கோலியை பார்க்க முடியும் என்று நம்பிக்கையோடு சொல்கிறார்கள் விராட் கோலி ரசிகர்கள்.