அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களே.. ஈரோட்டில் நாளை நண்பகலுக்குள்.. எடப்பாடி பழனிசாமி ஸ்ட்ரிக்ட் உத்தரவு!
அதிமுக தேர்தல் பொறுப்பாளர்களுடன் எடப்பாடி பழனிசாமி நாளை ஆலோசனை மேற்கொள்கிறார்
ஈரோடு: அதிமுக தேர்தல் பணிக்குழு நிர்வாகிகள் 106 பேரும் நாளை நண்பகலுக்குள் ஈரோடு மாவட்டத்தில் இருக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். அதிமுக தேர்தல் பணிக்குழு உடனான ஆலோசனை கூட்டம் நாளை மாலை நடக்க உள்ள நிலையில், வேட்பாளர் யார் என்பதை அறிவிக்கவும் வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ-வாக இருந்த காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா மாரப்படைப்பால் சில வாரங்களுக்கு முன் உயிரிழந்தார். இதனால் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த இடைத்தேர்தல் அறிவிப்பு வந்த நாள் முதலே, அனைத்து அரசியல் கட்சிகளும் பரபரப்பாக இயங்கி வருகின்றனர்.
குறிப்பாக திமுக கூட்டணி தரப்பில் மீண்டும் காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. பின்னர் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். ஆனால் முன்னதாகவே திமுக கூட்டணி நிர்வாகிகள் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
சபாஷ்.. மதவாத சக்திகளை வீழ்த்த கமல்ஹாசன் ஆதரவு.. காங்கிரஸ் பாராட்டு மழை
வேகம் காட்டும் இபிஎஸ்
ஆனால் அதிமுக தரப்பில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர் செல்வம் ஆகிய இரு தரப்பிலும் வேட்பாளரை நிறுத்த ஆயத்தமாகி வருகிறார்கள். அதேபோல் எடப்பாடி பழனிசாமி தரப்பில் வேட்பாளர் தேர்வில் மும்முரமாக இருக்கிறார்கள். ஆனால் வேட்பாளர் அறிவிக்கப்படுவதற்கு முன்பாக அனைத்து திட்டங்கள் குறித்தும் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
தேர்தல் பணிக்குழு
இன்று காலை ஈரோடு வந்த எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்களான செங்கோட்டையன் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதேபோல் யாரும் எதிர்பார்க்காத வகையில், செங்கோட்டையன் தலைமையில் முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்பி-க்கள், எம்எல்ஏ-க்கள் அடங்கிய 106 பேர் கொண்ட தேர்தல் பணிக்குழுவையும் எடப்பாடி பழனிசாமி அமைத்திருக்கிறார்.
இபிஎஸ் உத்தரவு
அதுமட்டுமல்லாமல் இரட்டை இலை சின்னத்தை பெறுவது, பிரச்சார வியூகம், வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளின் ஆதரவு என அனைத்து விவகாரங்கள் குறித்து அடுத்தடுத்து ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் தேர்தல் பணிக்குழு நிர்வாகிகளுடன் நாளை ஆலோசனை கூட்டத்தை எடப்பாடி பழனிசாமி கூட்டியுள்ளார். இதுகுறித்து எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக பொறுப்பாளர்கள் அனைவரும் நாளை நண்பகலுக்குள் ஈரோட்டில் இருக்க வேண்டும் குறிப்பிட்டுள்ளார்.
வேட்பாளர் அறிவிப்பு
இதனால் அதிமுக சார்பாக போட்டியிட உள்ள வேட்பாளர் தேர்வு இறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தேர்தல் பணிக்குழு உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பின், நாளை மாலை வேட்பாளர் யார் என்பது குறித்து அறிவிக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.