சண்டை செய்யும் இந்திய கம்யூனிஸ்ட்.. ஆளுநருக்கு எதிராக போராட்ட நோட்டீஸ்! வழக்குப்பதிந்த போலீஸ்
ஈரோடு: ஆன்லைன் ரம்மி உட்பட தமிழ்நாடு அரசு நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கும் ஒப்புதல் தெரிவிக்காமல் காலம் தாழ்த்தி வரும் ஆளுநர் ஆர் என் ரவியை திரும்ப பெற வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் இன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்தில் இது தொடர்பாக போஸ்டர் ஒட்டிய இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ததை கண்டித்து அவர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளது.
தமிழ்நாட்டின் ஆளுநராக ஆர்.என்.ரவி நியமிக்கப்பட்டதில் இருந்தே தமிழ்நாடு அரசுக்கும் அவருக்கும் இடையே தொடர்ந்து மோதல் போக்கு நீடித்து வருகிறது.
தமிழ்நாடு சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட நீட் விலக்கு, ஏழு தமிழர் விடுதலை, ஆன்லைன் ரம்மி தடை சட்டம் உட்பட சுமார் 20 மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்தி வருவதாக குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்திய கம்யூனிஸ்டு போராட்டம்
இந்த நிலையில், சட்டமன்றத்தில் தமிழ்நாடு நலன் கருதி அரசால் நிறைவேற்றப்படும் சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் அளிக்காமல் உள்ளதை கண்டித்தும், மத்திய அரசு ஆளுநரை திரும்ப பெற வலியுறுத்தியும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் 29ஆம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

காவல்துறை வழக்குப்பதிவு
இது தொடர்பான சுவரொட்டியை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் பகுதியில் ஒட்டி உள்ளனர். இந்த நிலையில் அனுமதி பெறாமல் சுவரொட்டி ஓட்டப்பட்டு உள்ளதாக கூறி சத்தியமங்கலம் காவல்துறையினர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்து இருக்கின்றனர்.

சத்தியமங்கலத்தில் தர்ணா
இந்த நிலையில் போலீசாரின் நடவடிக்கையை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பி.எல்.சுந்தரம் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் சத்தியமங்கலம் டிஎஸ்பி அலுவலகம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதையடுத்து சத்தியமங்கலம் டிஎஸ்பி (பொறுப்பு) நீலகண்டன் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். இதனால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

முத்தரசன் பேட்டி
கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி நாகையில் செய்தியாளர்களை சந்தித்த இந்திய கம்யூனிஸ்டு மாநில செயலாளர் முத்தரசன், "இந்தியாவில் பாஜக அல்லாத ஆளும் பிற மாநிலங்களில் ஆளுநர்களை கொண்டு இரட்டை ஆட்சி முறையை பாஜக நடத்துவதாக குற்றம்சாட்டிய முத்தரசன், இந்தியாவில் இறையாண்மைக்கு எதிராக தமிழக ஆளுநர் தொடர்ந்து பேசி வருவதால் ஒன்றிய அரசு திரும்பப்பெற வேண்டும்.

முற்றுகை போராட்டம் அறிவிப்பு
இதனை வலியுறுத்தி வருகின்ற டிசம்பர் 29 ஆம் தேதி ஆளுநர் மாளிகையை முற்றுகையிட்டு, போராட்டத்தில் ஈடுபட போவதாகவும், பல பேரின் உயிரை பலி வாங்கிய ஆன்லைன் ரம்மி சூதாட்டத்திற்கு எதிராக இயற்றப்பட்ட சட்டம் நீர்த்துப்போகும் வகையில், கையெழுத்திடாமல் அதற்கு பதிலாக ஆன்லைன் விளையாட்டை நடத்தும் நிறுவனங்களை அழைத்து ஆளுநர் பேசினார்.

ஆன்லைன் ரம்மி நிறுவனங்கள்
யாரை வேண்டாம் என மக்கள் நினைக்கிறார்களோ அவர்களை அழைத்து கூட்டம் நடத்தி இருப்பது பெற வேண்டியதை பெற முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா? அல்லது கொடுக்க வேண்டியதை கொடுக்க முயற்சி மேற்கொள்ளப்படுகிறதா? என புரியாத புதிராக உள்ளதாகவும், மிகப்பெரிய சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது." என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications