என்னோட ராசி நல்ல ராசி! கே.எஸ்.அழகிரி பதவிக்காலத்தில் காங்கிரசுக்கு தொடர்ந்து ஹாட்ரிக் வெற்றிகள்!
வெற்றிகளை மட்டுமே தனது பதவிக்காலத்தில் குவித்து வரும் கே.எஸ்.அழகிரி
ஈரோடு: தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக கே.எஸ்.அழகிரி பொறுப்பேற்றது முதல் அனைத்து தேர்தல்களிலும் அக்கட்சி வெற்றி பெற்று வருவது கவனிக்கத்தக்கது.
கே.எஸ்.அழகிரியின் ராசியோ என்னவோ, நாடாளுமன்றத் தேர்தல், ஊரக உள்ளாட்சித் தேர்தல், சட்டமன்றத் தேர்தல், நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல், இடைத்தேர்தல் என வரிசையாக தமிழ்நாட்டில் காங்கிரஸ் வெற்றியை மட்டுமே ஈட்டி வருகிறது.
திருநாவுக்கரசர், தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்டோர் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்களாக இருந்த காலங்களில் எல்லாம் அக்கட்சி இப்படியொரு தொடர் வெற்றிகளை கண்டதில்லை.

கே.எஸ்.அழகிரி
ஈரோட்டிலிருந்து சுடச் சுட இடைத்தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி கிட்டதட்ட உறுதியாகிவிட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதலே இளங்கோவன் தொடர்ந்து முன்னிலை வகித்து வரும் தகவலை சென்னையில் தாஜ் கோரமண்டல் நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனே கார்கேவின் கவனத்துக்கு கொண்டு சென்றிருக்கிறார் கே.எஸ்.அழகிரி.

கார்கே பாராட்டு
அப்போது கே.எஸ்.அழகிரியை மல்லிகார்ஜுனே கார்கே பாராட்டியதுடன் இடைத்தேர்தல் முடிவால் மிகுந்த உற்சாகமும் அடைந்துள்ளார். கே.எஸ்.அழகிரி பதவிக்காலம் முடிந்து போனஸாக அவர் கூடுதலாக இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் இருந்து வருகிறார். இந்நிலையில் இவரது பதவிக்காலத்தில் காங்கிரஸ் ஈட்டிய தொடர் வெற்றிகளை அவரது ஆதரவாளர்கள் மல்லிகார்ஜுனே கார்கேவின் கவனத்துக்கு கொண்டு செல்லும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

5 ஆண்டுகள்
தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவராக கே.எஸ்.அழகிரி நியமிக்கப்பட்ட 5ஆண்டுகள் உருண்டோடி விட்டன. இடையே இவரை மாற்றக் கோரி ஈவிகேஎஸ் இளங்கோவன் உட்பட எத்தனையோ பேர் டெல்லிக்கு படையெடுத்து பார்த்துவிட்டனர். ஆனால் ஒன்றும் வேலைக்கு ஆகவில்லை. கே.எஸ்.அழகிரியே தொடரட்டும் என விட்டுவிட்டார் சோனியா. இதனிடையே கே.எஸ்.அழகிரி இடத்துக்கு புதிதாக ஒருவர் நியமிக்கப்படலாம் என பேச்சுக்கள் எழுந்துள்ளன.

வரலாறு போதும்
இதனிடையே இந்த நிமிடமே தன்னை மாற்றினாலும் தனக்கு ஒரு கவலையும் கிடையாது எனக் கூறி வருகிறாராம் கே.எஸ்.அழகிரி. காரணம் தனது பதவிக்காலத்தின் போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் அடைந்த தொடர் வெற்றிகளே தனது வரலாற்றை பேசும் என்ற மன நிலைக்கு வந்துவிட்டாராம்.












Click it and Unblock the Notifications