"திருமகன் ஈவெராவின் செல்போன் நம்பரை கூட அழிக்கவில்லை" மேடையில் கண் கலங்கிய அமைச்சர் முத்துசாமி!
ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக அமைச்சர் முத்துசாமி தலைமையில் திமுக வாக்குசாவடி உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், மறைந்த எம்எல்ஏ திருமகன் ஈவெராவின் செல்ஃபோன் நம்பரை கூட அழிக்கவில்லை கண் கலங்கினார். அதேபோல், இந்த இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை திமுக கூட்டணி பெற்றாக வேண்டும், அதற்காக அனைவரும் உழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
ஈரோடு கிழக்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்தவா் காங்கிரஸ் கட்சியின் திருமகன் ஈவெரா. 46 வயதான இவர், கடந்த ஜனவரி 4ம் தேதி மாரடைப்பால் உயிரிழந்தார். இதனைத்தொடா்ந்து, ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது.
பொதுவாக தொகுதி காலி என்று அறிவிக்கப்பட்ட 6 மாதங்களுக்குள் அங்கு இடைத்தேர்தல் நடக்கும். அதேபோல் இடைத்தேர்தல்கள் மற்ற முக்கிய தேர்தல்களுடன் நடத்தப்படுவது வழக்கம். இந்த நிலையில் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கு இடைத்தேர்தல் பிப்ரவரி 27ம் தேதி நடக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக மும்முரம்
இந்த இடைத்தேர்தலில் திமுக கூட்டணி சார்பாக காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இதுவரை காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் யார் என்பது அறிவிக்கப்படவில்லை. இருப்பினும் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் பிரச்சாரத்தை திமுக தொடங்கியுள்ளது. முன்னதாக திமுகவின் வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் அமைச்சர் முத்துசாமி கலந்துகொண்டார்.

கண் கலங்கிய முத்துசாமி
இந்த கூட்டத்தில் அமைச்சர் முத்துசாமி பேசுகையில், எல்லோரும் 15 நாட்களில் தேர்தல் வந்துவிட்டது என்று சொன்னார்கள். திருமகனின் செல்ஃபோன் நம்பரை கூட நான் இதுவரை அழிக்கவில்லை. அப்படி பழகி இருக்கிறேன். ஒவ்வொரு முறை சந்திக்கும் போது தொகுதி பிரச்சினைகளை பற்றி அதிகமாக பேசி இருக்கிறோம் என்று கண் கலங்கினார்.

மிகப்பெரிய வெற்றி
தொடர்ந்து, இந்த இடைத்தேர்தலில் இளங்கோவன் மற்றும் பெரியாரை கடந்து நாம் மக்களிடம் என்ன சொல்ல வேண்டும். இந்த சூழலில் நான் அனைவரிடமும் கேட்டுக் கொள்வது, இடைத்தேர்தலில் மிகப்பெரிய வெற்றியை பெற வேண்டும். அந்த பையனுக்காக, நமது கட்சியின் எதிர்காலத்துகாக வெற்றியை பெற்றாக வேண்டும் என்று தெரிவித்தார்.

யார் வேட்பாளர்?
இதனிடையே காங்கிரஸ் கட்சி சார்பாக மீண்டும் ஈவிகேஸ் இளங்கோவன் குடும்ப உறுப்பினர்களையே வேட்பாளராக அறிவிக்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே ஈவிகேஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என்று தகவல் வெளியாகிய நிலையில், தற்போது அவரின் இரண்டாவது மகனும், திருமகன் ஈவெராவின் சகோதரருமான சஞ்சய் இளங்கோவனுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications