அது என்ன 10 ரூபாய் நாணயத்தை வாங்க மாட்டீங்களா.. வேட்புமனு தாக்கலில் காந்தி..ஈரோடு கிழக்கு சுவாரஸ்யம்
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர் காந்தி ரமேஷ் 10 ருபாய் நாணயங்களை கொண்டு வந்து மனு தாக்கல் செய்தார்.
ஈரோடு: தராசு தட்டில் 10 ரூபாய் நாணயக்குவியலுடன் வந்து ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர் காந்தி ரமேஷ் வேட்புமனு தாக்கல் செய்தார். 10 ரூபாய் நாணயம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தவே டெபாசிட் தொகையை இவ்வாறு செலுத்தியதாகவும் காந்தி ரமேஷ் கூறினார்.
ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை இன்று முதல் தினமும் காலை 10 மணி தொடங்கி பிற்பகல் 3 மணி வரை தாக்கல் செய்யலாம். வேட்பு மனு தாக்கல் செய்ய பிப்ரவரி மாதம் 7ஆம் தேதி கடைசி நாளாகும்.
மனு தாக்கல் செய்ய வேட்பாளருடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும். 3 கார்களுக்கு மட்டுமே அனுமதி உள்ளது. மனு தாக்கல் செய்யும் இடத்துக்கு 100 மீட்டருக்கு முன்பே கார்களை நிறுத்த வேண்டும். வேட்புமனுக்களை காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை தாக்கல் செய்யலாம். மனு தாக்கல் செய்யும் பொது வேட்பாளர்கள் ரூ.10 ஆயிரமும், எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் ரூ.5 ஆயிரமும் டெபாசிட் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்வதற்கான முதல்நாளான இன்றைய தினம் சில சுவாரஸ்ய சம்பவங்கள் அரங்கேறின. காந்தி போல வேடமிட்டு ஒருவர் வந்திருந்தார். அவர் தனது கையில் தராசு தட்டில் 10 ரூபாய் நாணயங்களை கொண்டு வந்திருந்தார். அதே போல ஓட்டுக்கு பணம் கொடுப்பது சட்டப்படி குற்றம் என்று உணர்த்தும் வகையில் ஒருவர் காகித நோட்டுக்களுடன் வந்திருந்தார்.
செய்தியாளர்களிடம் பேசிய காந்திவாதி ரமேஷ், ஈரோடு கிழக்கு சட்டசபை தொகுதி இடைத்தேர்தலை பொதுமக்களுக்கான விழிப்புணர்வாகவே கருதுகிறோம். ஈரோடு சட்டசபை தொகுதி மக்கள் தங்களுடைய வாக்கினை செல்வாக்காக பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். 10 ரூபாய் நாணயத்தில் பொது வெளியில் வாங்குவதற்கு தயக்கம் காட்டுகின்றனர். இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இன்றைய தினம் 10 ரூபாய் நாணயங்களை டெபாசிட் ஆக செலுத்தி வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறோம். வேட்பாளர் யார் என்பதைப்பற்றிய தகவலை ஆதார் கார்டு போல க்யூஆர் கோட் வடிவத்தில் கொடுத்திருக்கிறோம் என்றும் காந்தியவாதி கூறினார்.
சங்கரபாண்டியன் என்ற சமூக ஆர்வலர் தனது கையில் மது வீட்டிற்கும் நாட்டிற்கும் கேடு என்ற பதாகையை ஏந்தி வந்திருந்தார். ஓட்டிற்கு பணம் கொடுப்பது தவறு என்று உணர்த்தும் வகையில் டம்மி ரூபாய் தாள்களை கொண்டு வந்திருந்தார். மதுரை வடக்கு, மாநகராட்சி தேர்தலில் போட்டியிட்டிருக்கும் சங்கரபாண்டியன் மூன்றாவது முறையாக ஈரோடு கிழக்கு சட்டசபைத் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிட வேட்புமனுவை தாக்கல் செய்தார். நல்லவர்களுக்கு வாக்களிக்க வேண்டும். 100 சதவிகிதம் பேர் ஜனநாயகக் கடமையாற்ற வேண்டும் என்றும் சங்கரபாண்டியன் கேட்டுக்கொண்டார்.
மத்திய ரிசரவ் வங்கி கடந்த 2009-ம் ஆண்டு பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. அப்போது, அந்த நாணயத்தில் வேற்றுமையில் ஒற்றுமை மற்றும் 'இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்' என்ற கருப்பொருள் இடம்பெற்றிருந்தது.
உணவு முதல் மின்சாரம் வரை தட்டுப்பாடு.. தத்தளிக்கும் பாகிஸ்தான்! ரூபாய் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
பின்னர், அவ்வப்போது புதிய டிசைன்களில் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு வரப்படுகிறது. எனினும், பத்து ரூபாய் நாணயத்தின் நம்பகத்தன்மை குறித்து அவ்வப்போது வெளியாகும் வதந்தி காரணமாக கடைக்காரர்கள், வணிகர்கள், வங்கிகள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அவற்றை வாங்க மறுக்கின்றனர். இதனால், பொதுமக்கள் பத்து ரூபாய் நாணயங்களை வாங்கவும், வைத்திருக்கவும் தயக்கம் காட்டுகின்றனர்.
இந்நிலையில், இத்தகைய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், பத்து ரூபாய் நாணயங்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது.
பேருந்து நடத்துநர்கள் மற்றும் கடைக்காரர்கள், சில வங்கிகளில் பத்து ரூபாய் நாணயங்களை வாங்க மறுப்பதாக மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் 10 ரூபாய் நாணயங்களுடன் வந்து வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார் சுயேட்சை வேட்பாளர் காந்தி ரமேஷ்.