மேட்டூர் அணையில் நீர் திறப்பு... தண்டோரா மூலம் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!
ஈரோடு : மேட்டூர் அணையில் இருந்து 75,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளதால், ஈரோடு, திருச்சி உள்ளிட்ட காவிரி கரையோர மக்களுக்கு தண்டோரா மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ண ராஜசாகர் அணைகள் நிரம்பியது. உபரிநீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல் மற்றும் மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரித்து வருகிறது. ஒகேனக்கல்லுக்கு 1.10 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தடைந்தது. அங்குள்ள அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுவதால், அருவிகளில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
5ஜி ஊழல் புகார்.. பாய்ண்டை பிடித்த திமுக! “2ஜி” நினைவிருக்கா? “பாஜக யோக்கிய சிகாமணிகளே பதிலளிங்க”
மேட்டூர் அணைக்கு நீர் வரத்து
கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு அதிகரித்து வருவதால் மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. நீர்வரத்து 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளதால், 16 கண் மதகுகள் வழியாக, விநாடிக்கு 97,000 கனஅடியும், மின் உற்பத்தி நிலையங்கள் வழியாக 23,000 கனஅடியும் திறந்து விடப்படுகிறது. கிழக்கு-மேற்கு கால்வாய் பாசனத்திற்கு விநாடிக்கு 500 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு வரும் தண்ணீர் அப்படியே திறந்து விடப்படுவதால் அணை நீர்மட்டம் 120.10 அடியாக நீடிக்கிறது.
கரையோர மக்களுக்கு எச்சரிக்கை
மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், காவிரி கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு, நீர்வளத்துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும், தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. அதிகாரிகள் காவிரி கரையில் கண்காணிப்பு பணியை முடுக்கி விட்டுள்ளனர். காவிரி கரையோரங்களில் நின்று வேடிக்கை பார்ப்பதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மக்களுக்கு எச்சரிக்கை
ஈரோடு கருங்கல்பாளையம் காவிரி கரையில் தாழ்வான பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வருவாய்த்துறையினர், ஆற்றில் துணி துவைக்கவும், குளிக்கவும் இறங்க வேண்டாம் என அறிவுறுத்தி உள்ளனர். மேலும், சோனீஸ்வரர், ராகவேந்திரா ஆயலங்களுக்கு வரும் பக்தர்கள் காவிரியில் புனித நீராட வேண்டாம் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெள்ள அபாய எச்சரிக்கை
நீர் வரத்து கூடுதலாக இருப்பதால் உபரி நீரின் அளவு மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது. எனவே, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட காவிரி கரையோர மாவட்டங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் குடியிருந்து வரும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு தண்டோரா போட்டு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.