”தேர்தலில் போட்டியில்லை.. தனித்து நின்றால் பெடாசிட் கூட வாங்க மாட்டேன்” ஈவிகேஎஸ் இளங்கோவன் பரபரப்பு!
ஈரோடு: தேர்தலில் தனித்து நின்றால் டெபாசிட் கூட வாங்க மாட்டேன் என்று தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் பேசியுள்ளார்.
செப்.7ம் தேதி காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான நடைபயணத்தை தொடங்குகிறார். தமிழகத்தில் கன்னியாகுமரியில் தொடங்கும் ராகுல் காந்தியின் பயணம் 3 நாட்களுக்கு பின் கேரளாவில் திட்டமிடப்பட்டுள்ளது. ராகுல் காந்தி வருகையால், தமிழக காங்கிரஸ் கூடாரம் பரபரப்பாக இயங்கி வருகிறது.
ராகுல் காந்தியுடனான நடைபயணத்திற்கு என காங்கிரஸ் தொண்டர்களை திரட்டும் பணிகளில் காங்கிரஸ் மூத்த தலைவர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஈரோடு மாவட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி, முன்னாள் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஈவிகேஎஸ் இளங்கோவன் பேச்சு
இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் மாநில தலைவர் ஈவிகேஎஸ்.இளங்கோவன் பேசுகையில், கொங்கு மண்டலத்தில் காங்கிரஸ் கட்சி வலிமையாக இருப்பதாக நம்புகிறேன். ஆனால் கொங்கு மண்டலம் என்றாலே எடப்பாடி பழனிசாமிக்கும், அண்ணாமலைக்கும் சொந்தம் என்பது போல் பேசுகிறார்கள்.

இனி தேர்தலில் போட்டியில்லை
தேர்தலில் 5 முறை நான் போட்டியிட்டு 2 முறைதான் வெற்றி பெற்று இருக்கிறேன். கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து வேட்பாளர்களும் வெற்றி பெற்றபோது, நான் மட்டும் தோல்வி அடைந்தேன். இனி வரும் தேர்தல்களில் நான் போட்டியிடப் போவதில்லை. நான் தோல்வியடைந்ததால் அப்படி கூறவில்லை.

டெபாசிட் கிடைக்காது
இதற்கு முன் ஈரோடு, கோபி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட தொகுதிகளில் கூட தோல்வி அடைந்து இருக்கிறேன். அதனால் தோல்வி என்பது எனக்கு பெரிய விஷயமில்லை. எனக்கென்று தனிப்பட்ட மரியாதை பெரியளவில் இல்லை. ஒரு சில ஆயிரம் வாக்குகள் மட்டுமே என் மீதான மரியாதையில் கிடைக்கும். எப்போதும் கட்சி சார்ந்துதான் வாக்குகள் கிடைக்கும். நான் தனியாக நின்றால் டெபாசிட்கூட பெறமுடியாது என்று தெரியும்.

அண்ணாமலை மீது விமர்சனம்
காமராஜர், ராஜாஜி, கருணாநிதி, ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்கள் இருந்த தமிழகத்தில் அண்ணாமலை வால் ஆட்டினால் நறுக்கப்படும். தமிழகத்தில் இரு பாஜக தலைவர்கள் இருக்கிறார்கள். அண்ணாமலையும், ஆர்.எஸ்.எஸ்.ரவியும். ராகுல்காந்தி பிரதமராக வேண்டும் என்று தமிழகத்தில் முதலில் குரல் கொடுத்தவர் மு.க.ஸ்டாலின்.

திமுகவுடன் கூட்டணி
திமுக கூட்டணி காரணமாக நமது கட்சியை சோ்ந்தவர்கள் எம்எல்ஏ-வாக இருக்கிறார்கள். ஆனால் கடந்த தேர்தலின்போது திமுகவுடன் இணைந்து செயல்படக்கூடாது என்று நமது கட்சியை சேர்ந்தவர்கள் குறுந்தகவல் அனுப்பினார்கள். இது ராகுல்காந்தியை பிரதமராக்க விடக்கூடாது என்பதைபோல் உள்ளது. எனவே இதுபோன்ற செயல்பாடு கொங்கு மண்டலத்தில் இருக்கக்கூடாது என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications