அன்புமணியின் புதிய கூட்டணி! சர்ப்ரைஸ் தந்த பாமக நிர்வாகி இல்ல மண விழா! பரபரக்கும் அரசியல் களம்!
ஈரோடு: ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நடைபெற்ற திருமண விழா ஒன்றில், பாமக தலைவர் அன்புமணி ராமதாசுடன் இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் அனைவரும் ஒரே மேடையில் கலந்துகொண்டனர்.
குறிப்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் அன்புமணி ராமதாஸிடம் நீண்ட நேரம் அருகில் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார்.
பாமக தற்போது எந்தக் கூட்டணியிலும் அங்கம் வகிக்காத நிலையில் எதிர்வரும் தேர்தல்களில் தனது தலைமையில் கூட்டணி அமைப்பதற்கான முயற்சிகளை இப்போதே தொடங்கிவிட்டதாகவே தெரிகிறது.
போதை இல்லாத, சமத்துவ சமூகநீதி இந்தியாவை உருவாக்குவோம்:டாக்டர் ராமதாஸ்,அன்புமணி சுதந்திர தின வாழ்த்து
பாமக நிர்வாகி
பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில சிறுபான்மை அணிச் செயலாளர் ஷேக் மொய்தீன் மகள் திருமண விழா ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் நேற்று முன் தினம் நடைபெற்றது. அந்த திருமண விழாவுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமை தாங்க ஜி.கே.மணி முன்னிலை வகித்தார். மேலும், இஸ்லாமிய இயக்கங்களின் தலைவர்கள் அனைவருக்கும் பாமக நிர்வாகி ஷேக் மொய்தீன் அழைப்பு விடுத்திருந்தார்.
கலகலப்பாக பேச்சு
அந்த வகையில் எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச்செயலாளர் அப்துல் சமது எம்.எல்.ஏ., மனிதநேய ஜனநாயக கட்சியின் பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி, குணங்குடி அனீபா, உள்ளிட்ட பலரும் அந்த திருமண விழாவில் கலந்துகொண்டனர். தமிமுன் அன்சாரியும், நெல்லை முபாரக்கும் அன்புமணி ராமதாசுடன் மிகவும் கலகலப்பாக பேசினர். குறிப்பாக மது ஒழிப்பு, போதைப் பொருட்கள் ஒழிப்பு, ஆன்லைன் சூதாட்டம் ஒழிப்பு போன்றவற்றில் அன்புமணி முன்னெடுத்து வரும் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் பற்றி பாராட்டிப் பேசினர்.
கருத்து ஒற்றுமை
மது, போதை, சூதாட்டம் ஆகியவற்றை ஒழிக்க வேண்டும் என்பதில் பாமகவுடன் மஜக, எஸ்.டி.பி.ஐ. போன்ற கட்சிகளுக்கு கருத்து ஒற்றுமை இருப்பது குறிப்பிடத்தக்கது. தற்போதைய சூழலில் எஸ்.டி.பி.ஐ., மனிதநேய ஜனநாயக கட்சி ஆகிய இரண்டும் எந்தக் கட்சியுடன் கூட்டணியில் இல்லாமல் தனித்து செயல்பட்டு வருவது கவனிக்கத்தக்கது. இதனால் வரும் நாடாளுமன்றத் தேர்தலில் புதிய கூட்டணி உருவாகினாலும் ஆச்சரியப்படுவதற்கு எதுவும் இல்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.
அன்புமணி பேச்சு
இதில் குறிப்பிட வேண்டிய விவகாரம் என்னவென்றால் மண விழாவுக்கு தலைமை தாங்கி பேசிய அன்புமணி ராமதாஸ், இஸ்லாமியர்களுக்காக பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை என்னவெல்லாம் செய்திருக்கிறது என்பதை பட்டியலிட்டது தான். மேலும், பாமகவின் அணுகுமுறைகள் மாறும் நேரம் வந்திருப்பதாகவும் அன்புமணி அந்த திருமண விழாவில் குறிப்பிட்டிருக்கிறார். இதன் மூலம் அவர் புதிய கூட்டணிக்கு அச்சாரமிட்டிருப்பதாக பார்க்கப்படுகிறது. அரசியலில் எது வேண்டுமானாலும் எப்போது வேண்டுமானாலும் நிகழலாம் என்பது கவனிக்கத்தக்கது.