இன்னொரு 'மாஜி'க்கு முக்கிய பதவி? ரெண்டை மூணாக்கி.. பழைய வரலாற்றை மாற்ற ஸ்டாலின் போடும் கணக்கு!?
ஈரோடு : திமுகவில் விரைவில் மாவட்ட பொறுப்பாளர்கள் பலர் மாற்றப்படக்கூடும் என்ற தகவல் வெளியாகி வரும் நிலையில், முன்னாள் அமைச்சர்கள் இருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் எனக் கூறப்படுகிறது.
Recommended Video
அந்த மாஜி. அமைச்சர்கள் இருவருமே மாற்றுக் கட்சிகளில் இருந்து திமுகவுக்கு வந்தவர்கள். இருவருமே திமுகவுக்கு வந்து கிட்டத்தட்ட ஓராண்டு ஆகிவிட்ட நிலையில், அவர்களுக்கு மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது.
ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் திமுக இதுவரை வென்றதே இல்லை என்ற வரலாற்றை அழிக்கும் வகையில் ஒரு திட்டத்தை நிறைவேற்ற திமுக தலைமை திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதவி பறிபோகும்
தேர்தல் ஆணையத்தில் சமர்ப்பிப்பதற்காக திமுக உட்கட்சி தேர்தல் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது. திமுகவில் நிர்வாக வசதிக்காக மாவட்டங்கள் மறுசீரமைக்கப்படும் என்றும், தற்போது உள்ள மாவட்ட பொறுப்பாளர்கள் பலரின் பதவி பறிக்கப்படக் கூடும் என்றும் பேச்சு நிலவி வருகிறது. சில நாட்களுக்கு முன்பு நடைபெற்ற திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்திலும் மு.க.ஸ்டாலின் நிர்வாகிகளை எச்சரித்துள்ளார். இதன் மூலம் அவர் சிலர் மீது அதிருப்தியில் இருப்பதும், விரைவில் மாற்றம் இருக்கலாம் என்பதும் தெரியவந்தது.

முக்கிய புள்ளிகள்
முன்னர் அதிமுகவிலும் அதன்பிறகு தினகரனின் அமமுகவிலும் முக்கிய புள்ளிகளாக இருந்த செந்தில் பாலாஜி, தங்க தமிழ்ச்செல்வன் ஆகியோருக்கு திமுகவில் முக்கிய பொறுப்புகள் அளிக்கப்பட்டன. ஆனால், முன்னாள் அமைச்சர் பழனியப்பன், அதிமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாச்சலம் ஆகியோர் திமுகவில் சேர்ந்து கிட்டத்தட்ட 1 ஆண்டு நிறைவடைய இருக்கும் நிலையில், இதுவரை முக்கிய பொறுப்பு எதுவும் வழங்கப்படவில்லை.

தோப்பு வெங்கடாசலம்
இந்நிலையில், அதிமுகவில் இருந்து திமுகவுக்கு வந்த முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திற்கு திமுக தலைமை முக்கிய பதவி அளிக்கக்கூடும் என்று கூறப்படுகிறது. தோப்பு வெங்கடாச்சலம் ஈரோடு மாவட்டம் பெருந்துறை தொகுதியைச் சேர்ந்தவர். திமுக இதுவரை வெற்றி பெற்றதே இல்லை என்று கூறப்படும் நான்கு தொகுதிகளில் ஒன்று பெருந்துறை. அந்தத் தொகுதியின் எம்.எல்.ஏவாக இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர் தோப்பு வெங்கடாசலம்.

முன்னாள் அமைச்சர்
அதிமுக முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலத்திற்கு, 2016 தேர்தலில் போட்டியிட எடப்பாடி பழனிசாமி சீட் வழங்கவில்லை. பெருந்துறை தொகுதியில் போட்டியிட தனக்கு வாய்ப்பு வழங்கப்படாததால் அதிருப்தியடைந்த தோப்பு வெங்கடாசலம் சுயேட்சையாக போட்டியிட்டார். இதையடுத்து அவர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டார். திமுக ஆட்சிக்கு வந்த பிறகு கடந்த ஆண்டு ஜூலை மாதம் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தார் தோப்பு வெங்கடாசலம்.

ஈரோடு திமுக
ஈரோடு மாவட்ட திமுக ஈரோடு தெற்கு, ஈரோடு வடக்கு என இரண்டாக உள்ளது. ஈரோடு தெற்கு மாவட்ட செயலாளராக அமைச்சர் முத்துசாமி பொறுப்பில் இருக்கிறார். ஈரோடு வடக்கு மாவட்ட செயலாளராக நல்லசிவம் செயல்பட்டு வருகிறார். ஈரோடு மாவட்ட பொறுப்பாளர்கள் தேர்தலில் தோப்பு வெங்கடாசலமும் ரேஸில் இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது பொறுப்பாளர்களாக இருக்கும் இருவர் மீதும் பெரிய அதிருப்தி இல்லாத நிலையில், தோப்பு வெங்கடாசலத்திற்கு பொறுப்பு அளிக்கும் வகையில் ஈரோடு மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்படலாம் என்றும் கூறப்படுகிறது.

திமுக தலைமை கணக்கு
தோப்பு வெங்கடாசலத்திற்கு மாவட்ட பொறுப்பாளர் பதவியைக் கொடுத்து உற்சாகப்படுத்துவதன் மூலம் கொங்கு மண்டலமான ஈரோட்டில் திமுகவை மேலும் வலுவாகத் தடம் பதிக்க வைக்க முடியும் என ஸ்டாலின் நினைப்பதாக திமுகவினர் கூறுகின்றனர். அதிலும் குறிப்பாக பெருந்துறை தொகுதியில் திமுக இதுவரை வென்றதே இல்லை என்ற நிலையையும் மாற்றலாம் என ஸ்டாலின் கணக்குப் போட்டுள்ளாராம்.

இரண்டு மாஜிக்களுக்கு
இதன் காரணமாக இரண்டாக இருக்கும் ஈரோட்டை மூன்றாகப் பிரித்து ஒரு மாவட்டத்தின் பொறுப்பாளர் பதவி தோப்பு வெங்கடாசலத்திற்கு வழங்கப்படலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல, அமமுகவில் இருந்து திமுகவிற்கு வந்த தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பழனியப்பனுக்கும் மாவட்ட பொறுப்பாளர் பதவி வழங்கப்படும் என்றும் பேசப்படுகிறது.












Click it and Unblock the Notifications