ஈரோடு அருகே ரவுடி ஜான் கொலை.. இன்னொரு காரில் தப்பிய 5 பேரை கைது செய்து போலீசார் விசாரணை!
ஈரோடு: ஈரோடு அருகே நேற்று ரவுடி ஜான் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 5 பேரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரவுடி ஜான் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவத்தில் 4 பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மற்றொரு காரில் தப்பிச் சென்ற குற்றவாளிகளை தேடி வந்த போலீசார், இன்று மேலும் 5 பேரை பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சேலம் மாவட்டம் கிச்சிப்பாளையம் பகுதியில் பிரபல ரவுடியாக இருந்த ஜான் மீது இரண்டு கொலை வழக்குகள் உள்ளிட்ட 14 வழக்குகள் சேலம் மாவட்ட காவல் எல்லைக்குட்பட்ட பல்வேறு காவல் நிலையங்களில் நிலுவையில் இருக்கிறது. இந்நிலையில் நேற்று காலை தனது மனைவி ஆதிராவுடன் மாமனார் வீடு அமைந்துள்ள ஈரோடு மாவட்டம் பவானி பகுதிக்கு சென்றுள்ளார் ஜான்.

ஜான் மனைவி ஆதிரா காரை ஓட்டிய நிலையில் ஜான் இடதுபுறமாக அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென காரை ஐந்து பேர் கொண்ட கும்பல் காரில் பின் தொடர்ந்து வந்தனர். பவானி, சித்தோடு காவல் நிலைய எல்லைப் பகுதியில் உள்ள நசியனூர் பகுதியில் காரை வழிமறித்து ரவுடி ஜானை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துள்ளனர். மனைவி தடுக்க முயன்றும் விடாமல் ரவுடி ஜான் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக நேற்றே போலீசார் விசாரணை மேற்கொண்டு கொலையில் ஈடுபட்ட மூன்று பேரை சுட்டுப் பிடித்தனர். மேலும் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மொத்தம் 4 பேர் இந்த கொலை சம்பவத்தில் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் இந்த கொலை சம்பவம் தொடர்பாக மேலும் 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். மற்றொரு காரில் தப்பிச் சென்ற நபர்களை போலீசார் தேடி வந்த நிலையில் சேலத்தை சேர்ந்த பார்த்திபன், சேதுவாசன், அழகரசன், சிவக்குமார், பெரியசாமி ஆகியோரை கைது செய்து அவர்களிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications