என் வழி தனி வழி! இங்க எங்க வர்றீங்க.. பேருந்தை வழிமறித்து துரத்திய ஒற்றை யானை.. கிருஷ்ணகிரியில் பீதி
ஓசூர்: ஓசூர் அருகே அரசு பேருந்தை துரத்த முற்படும் ஒற்றை யானையால் பொதுமக்கள் பீதியடைந்தனர். காட்டு யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளார்கள்.
Recommended Video
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரை அடுத்த அஞ்செட்டி வனப்பகுதியில் பல நாட்களாக ஒற்றை யானையானது சுற்றி வருவதுடன் விவசாய நிலங்களுக்குள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தி விவசாயிகளையும் அச்சுறுத்தி வருகிறது.
இருப்பினும் வனத்துறையினர் யானைகளை கிராமத்துக்குள் புகுந்து விடாதவாறு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதுடன் பொதுமக்களுக்கும் விவசாயிகளுக்கும் அவ்வப்பொழுது உரிய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
தற்போது கோடை வெயிலின் உக்கிரம் அதிகரித்து வருவதால் வனப் பகுதியில் உள்ள நீர்நிலைகள் வறண்டு கிடப்பதால் உணவு மற்றும் தண்ணீர் தேடி அவ்வப்போது யானைகள் கிராமப்புற பகுதிக்குள் நுழைந்து வருகின்றன.
இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு அஞ்செட்டி வனப்பகுதியில் குந்துக்கோட்டை கிராமத்திற்கு செல்லும் சாலையை ஒற்றை யானை கம்பீரமாக சாலையை கடந்து சென்றது.
இதைத் தொடர்ந்து தகவலறிந்த வனத்துறையினர் யானையின் நடமாட்டத்தை கண்காணித்து வருவதுடன் உரிய தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதேபோல இன்று காலை அஞ்செட்டி செல்லும் சாலையில் அரசு பேருந்து சென்று கொண்டிருந்தபோது சாலையின் ஓரம் மறைந்திருந்த ஒற்றை யானை மிகுந்த ஆக்ரோஷத்துடன் அரசு பேருந்தை துரத்தி வரும் வீடியோ காட்சி சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
அரசு பேருந்து ஓட்டுநரின் சாதுரியத்தால் எவ்வித அசம்பாவிதமும் இல்லாமல் பயணிகள் பாதுகாப்புடன் அந்தப் பகுதியில் இருந்து தப்பித்து வந்தனர். இதனால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்ததுடன் பீதி அடைந்துள்ளனர். இருப்பினும் யானைகள் நடமாட்டம் குறித்து வனத்துறையினர் தொடர்ந்து எச்சரிக்கை விடுத்த வண்ணம் உள்ளனர்.
அண்மைக்காலமாக உணவை தேடி காட்டு யானைகள் ஊருக்குள் வந்த வண்ணம் உள்ளன. இவை விவசாய நிலங்கள், வீடுகளுக்குள் நுழைந்து பொருட்களை உண்ணும் பெயரில் சேதப்படுத்தி வருகின்றன. அது போல் கரும்பு காட்டுக்குள்ளும் இவை நுழைந்து பயிர்களை துவம்சம் செய்து வருகின்றன. இதே போல் மேட்டுப்பாளையம் சிறுமுகை வனப்பகுதியில் காட்டு யானை ஒன்று நடமாடி வருகிறது.
இது தினமும் இரவு 7 மணிக்கு மேல் நெல்லிமலை பகுதியில் இருந்து குரும்பனூர் வழியாக வெளியே வந்து விளை நிலங்களில் பயிர்களை சேதப்படுத்தி செல்கிறது. மேலும் வாழை தோட்டத்திலும் நுழையும் இந்த பாகுபலி வாழை தோட்டத்தை சேதப்படுத்தி பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்த யானை யாருடனும் கூட்டு சேராமல் தனித்தே சுற்றி வருகிறது. இந்த பாகுபலியை பிடிப்பதற்காக டாப்சிலிப்பில் இருந்து 3 கும்கிகள் வரவழைக்கப்பட்டன. இந்த யானை பிடிபட்டால் மயக்க ஊசி செலுத்தி காட்டுக்குள் கொண்டு போய் விடும் முயற்சிகள் செய்யப்படும் என தெரிகிறது. கொஞ்ச நாட்களாக பாகுபலியை காணவில்லை. அப்பாடா காட்டுக்குள் போய்ட்டாரு பாகுபலி என மக்கள் நிம்மதி அடைந்த நிலையில் நெல்லிமலை வனப்பகுதியில் இந்த யானை முகாமிட்டுள்ளது தெரியவந்தது.