ஷாக்! கேக் வெட்டும் போது திடீரென சரிந்த 16 வயது சிறுவன்.. பிறந்த நாளில் மாரடைப்பால் உயிரிழந்த சோகம்
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் 16 வயதே ஆன சிறுவன் தனது பிறந்த நாள் அன்றே உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்போது உலகத்தில் எல்லாமே இணையம் என்று ஆகிவிட்டது. வீட்டை விட்டு வெளியே கால் அடியெடுத்து வைக்காமலேயே காய்கறி முதல் தங்க, வைர நகைகள் வரை அனைத்தையும் வாங்கலாம் என்ற சூழலே இருக்கிறது.
ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் அனைத்தும் நமது வீடுகளுக்கே தேடி வந்துவிடுகிறது. குறைந்த விலை, பொருட்களை வாங்கிய பிறகு காசு கொடுக்கலாம் என்பதால் பலரும் ஆன்லைனில் பொருட்களை வாங்கவே விரும்புகின்றனர்.

மாரடைப்பு: இதனால் வெளியே செல்லும் தேவையும் குறைந்துவிட்டது. மேலும், ஒரே இடத்தில் நீண்ட காலம் உட்கார்ந்து வேலை செய்யும் தேவையும் அதிகரித்து வருகிறது. அதிலும் கொரோனா வந்தவுடன் ஆபீசுக்கு கூட செல்ல தேவையில்லை. வீடு தான் ஆபீஸ் என்றாகிவிட்டதால் வெளியே செல்வது கணிசமாகக் குறைந்துவிட்டது. இப்படி உடல் ரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லாத காரணத்தால் உடல் சார்ந்த பாதிப்புகள் அதிகம் ஏற்பட ஆரம்பித்துள்ளது.
உடல் ரீதியாக எந்தவொரு நடவடிக்கையும் இல்லாததால் மாரடைப்பு கணிசமாக அதிகரித்துள்ளது. முன்பு வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மட்டுமே ஏற்பட்ட மாரடைப்பு என்பது இப்போது இளைஞர்கள் மத்தியிலும் அதிகம் ஏற்படத் தொடங்கியுள்ளது. இது சில நேரங்களில் உயிரிழப்புகளையும் ஏற்படுத்துகிறது. நல்ல ஆரோக்கியமாக இருக்கும் இளைஞர்கள் திடீரென உயிரிழக்கும் சம்பவங்களும் ஏற்படுகிறது.

கொரோனா பரவலுக்குப் பின்னரே இதுபோல திடீர் திடீரென ஏற்படும் மாரடைப்பு அதிகரிப்பதாகச் சொல்லப்படுகிறது. இது பொதுவான கருத்து என்றாலும் கூட இது குறித்து நாம் விரிவான ஆய்வு செய்தால் மட்டுமே நமக்குத் தெளிவாகத் தெரியும். இதற்கிடையே தெலங்கானா மாநிலத்தில் 16 வயதே ஆன ஒருவர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்துள்ளான். அதுவும் அந்த சிறுவன் தனது பிறந்த நாள் அன்றே உயிரிழந்தது சோகத்திலும் பெரிய சோகம்.
சிறுவனுக்கு மாரடைப்பு: அந்த சிறுவனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகச் சிறுவனின் குடும்பத்தினர் உடல் அருகே கேக் வெட்டி வைத்து அஞ்சலி செலுத்தினர். இந்தச் சம்பவம் தெலுங்கானா மாநிலம் ஆசிபாபாத் மாவட்டத்தில் நடந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை 16 வயதான சி.எச்.சச்சின் தனது பிறந்த நாளை கொண்டாட ரெடியானார். பாபாபூர் கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் பிறந்த நாளை கொண்டாட நண்பர்கள், குடும்பத்தினர் உள்ளிட்டோர் கூடியிருந்தனர்.

சச்சின் பிறந்த நாளை பிரமாண்டமான கொண்டாடத் திட்டமிட்டு அவரது குடும்பத்தினர் பெரிய கேக் வாங்கியிருந்தனர். மேலும், அவரது போட்டோக்களை கொண்ட பேனர்களும் வீட்டின் அருகே வைக்கப்பட்டிருந்தது. பிறந்த நாள் கொண்டாட்டம் அனைத்தும் நன்றாகத் தான் சென்று கொண்டிருந்தது.
மயங்கி விழுந்த சிறுவன்: அப்போது சச்சின் திடீரென எதிர்பாராத விதமாக மயங்கி விழுந்தார். இதைப் பார்த்துக் கதறிய அவரது குடும்பத்தினரும் நண்பர்களும் அவரை உடனடியாக அருகே இருக்கும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர். அவர் மாரடைப்பால் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது.
சச்சின் உயிரிழப்பிற்கு அஞ்சலி செலுத்தும் விதமாக அவரது குடும்பத்தினர் கேக்கை வெட்டி உடல் அருகே வைத்து அஞ்சலி செலுத்தினர். 16 வயதே ஆன சிறுவன் அதுவும் பிறந்த நாள் அன்று உயிரிழந்தது அனைவருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications